Tuesday, August 11, 2015

பாகுபலி




Work from home-ல் மீட்டிங்கில்லாத மதியம். எங்கள் பேட்டை மல்டிப்பிளெக்ஸில் தமிழிலேயே பாகுபலி. செவ்வாய் என்பதால் பாதி விலையில் டிக்கட். படுத்த வழியின்றி மகள் வாகாய் சம்மர் கேம்ப்பில்.

விளைவு - பாகுபலி.

தமிழிணையத்தில் வந்த அத்துணை சூப்பர்லேட்டிவ்களுக்கும் தகுதி வாய்ந்ததே. But but but..கீழ்க்கண்டவை சற்றே உறுத்தல்.

- படத்தை தமிழில் நேரடிப்படமாக அறிவித்திருந்தார்கள். ஆனால் முதலில் அந்த திட்டம் இல்லை போலும். சில பாடல்கள், காட்சிகள் லிப்சின்க்கில் இல்லை. வலிந்து லிப்சின்க்கிற்காக போடப்பட்ட வரிகள் அந்தக்கால சிரஞ்சீவி - ஸ்ரீதேவி டூயட் போல் தெலுங்கு டப்பிங் களை அடித்தது (ராஜமவுலி மூளையாய் க்ளோசப்கள் நிறைய தவிர்த்தும்)

- இரண்டே இரண்டு இடத்தில் மகிழ்மதி ராஜ்ஜியத்தின் Birds eye view shots. கிராஃபிக்ஸ் பல்லிளித்தது. ஏதோ ட்ராஃப்ட் Work in progress code-ஐ திணித்தது மாதிரி, ஓவியம் என்பது நகரா எறும்பு மனிதர்களுடன் அப்பட்டமாய் தெரிந்தது. போலவே தமன்னா இரவில் காத்திருக்கும் ஒரு silhouette ஒற்றைமர ஷாட். கிராஃபிக்ஸ் மரம், மலை எனத்தெரிந்தது.

- மரகதமணி. செம எஃபோர்ட். ஆனால் போதவில்லை. அருவி காட்சிகளில் இருந்த பின்னணி இசை கெத்து படம் நெடுக இல்லை. ’பச்சை தீ’ போன்ற பாடல்கள் கேட்க சுகமெனினும், பாகுபலிக்கு செட்டாகிறதா என்பது கேள்விக்குரியது.

- ஒளிப்பதிவும் bland ஆக பட்டது. செந்தில்குமாரின் ஷாட்களில் அசுர உழைப்பு தெரிகிறது. No doubt about it. ஆனால் 300, Troy போன்ற படங்களின் sleekness இல்லை. என்னவோ கலர் கரெக்‌ஷன், DI..இந்த இது இதும்ப்யாங்களே..அதை இன்னமும் செய்திருக்கலாம். கிரவுண்டில், மொட்டை வெயிலில் எடுத்த போர்க்காட்சிகள் இன்னமும் வேறு கலரில் வந்திருக்கலாம். குறிப்பாய் தமன்னா கச்சையை கழட்டும் காட்சியில் கேமரா அசடாய் பின்னாடி இருக்கிறது ;)

- படத்தின் letdown மதன் கார்க்கி. பேச்சுத்தமிழும் இல்லாமல், செந்தமிழும் இல்லாமல் சவசவ வசனங்கள். குறிப்பாய் ரோகிணி உபயோகிக்கும் ‘அனுமானம்’ போன்றவை அவர் கேரக்டருக்கு செட்டாகவில்லை. ’திரிசூல வியூகம் ஆரம்பம்ம்ம்ம்’ போன்றவை விஜய் டப்பிங் மகாபாரதம் தரம்.
- இளைய பிரபாஸின் டப்பிங் குரல். அக்மார்க் தெலுகு டப்பிங் ஹீரோ வாய்ஸ். சாய்குமாரோ, ஆண்டனி ராஜோ இருவரில் ஒருவர். இயல்பாய், புதிதாய் யாரையாவது போட்டிருக்கலாம்.

550 கோடி வசூலித்த படம், இந்தியனாக, திராவிடனாக, தமிழனாக, தெற்காசியனாக உனக்கு பெருமையில்லையா என சண்டைக்கு வராதீர்கள். வந்தாலும் பதிலில்லை. ராஜமவுலிகாரு என்பதாலேயே இந்த கேள்விகள்.

எனக்கு ஒட்டுமொத்தமாய் கொஞ்சம் மகாபாரதம் கதை போல் பட்டது. துரியோதணன் = ராணா / அர்ஜுனன் = பிரபாஸ் / பீஷ்மர் = சத்யராஜ் / திருதிராஷ்டரன் = நாசர் ரைட்?

மற்றபடி படத்தில் எல்லாமே ப்ளஸ். குறிப்பாய் தமன்னா, அனுஷ்கா, ரம்யா மூவருமே கலக்கல் (ஹிஹி). படத்தின் ஆண் நடிகர்களை தூக்கிச் சாப்பிடுகிறார்கள். சத்யராஜ் தவிர. சொதப்புவார் என்றே நினைத்தேன். ஆச்சர்யமாக அடக்கி வாசித்து அசத்தியிருக்கிறார். இந்தப்படத்திற்கு டெய்லி ரேட் பேசியிருந்தாராம். தீவாளி பார்த்திருப்பார்.

அனுஷ்கா இளைய வயதில் வருவார் என்பதற்காகவே ’துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிடததீந்த’ என பாகுபலி 2விற்கு காத்திருக்கிறேன்.

ஜெய் தேவசேனா !!!

+++++++++

Sunday, June 14, 2015

மேன்மக்கள்







நேற்றிரவு பெரியதாக தூக்கமில்லை. அதிகாலை நான்கு மணி வரை படுக்கையில் விழித்திருந்தது நினைவிருக்கிறது. விடிந்தால் தீபாவளி என்ற மனநிலையில் ஒரு பத்து வயது சிறுவன் எப்படி இருப்பானோ அப்படி படுத்திருந்தேன். மனதுக்குள் அப்படியொரு நிலைகொள்ளாத மகிழ்ச்சி.

நேற்றிரவுக்கு முந்தைய மாலை 2015-க்கான இயல் இலக்கிய விருதுகளுக்கு முதல் தடவையாக சென்றிருந்தேன். இயல் விருதுகள் கனடா தமிழ் இலக்கிய தோட்டம் என்கிற ஒரு வெகு திவீரமான தமிழார்வல அமைப்பால் காத்திரமான படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் உலகளவில் வழங்கப்படுவது. குறிப்பாய் ‘இயல் விருது’ எனப்படும் முத்திரை விருது ஒரு தமிழ்ப்படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக தரப்படுவது. அது இந்த வருடம் ஜெயமோகன் அவர்களுக்கு.

என்னைப் போன்ற ஃபேஸ்புக் பதிவனுக்கு இந்த திவீர இலக்கிய அமைப்பில் இடமோ, ஜோலியுமில்லை. எனினும், சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடும் பெருந்தவத்தை செய்து வரும் திருமூர்த்தி ரங்கநாதன் புண்ணியத்தில் (”நல்லா எழுதுறீங்க, நீங்க இந்த இலக்கிய சர்க்கிள்க்குள்ள வரணும்”) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஐயா அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். எனக்கு திருமூர்த்தி, தமிழறிவிலறிஞர் வெங்கட்ரமணன் தவிர ஒருவரையும் தெரியாது வேறு. சற்று பயந்துகொண்டே தான் விழா நடக்கும் ஹோட்டலுக்கு போனேன்.

பயந்தது போலவே தான் சூழலும் இருந்தது. விருது விழா நடந்த இடம் ஒரு மூன்று/நான்கு நட்சத்திர ஹோட்டல். விருது அழைப்பிதழில் Semi formal எனக்குறிக்கப்பட்டிருந்ததை பறைசாற்றும் வகையில் பலரும் கோட்சூட்டில் வந்திருந்ததை ரிசப்ஷனிலேயே பார்த்தேன். நான் சட்டையை இன் கூட செய்யாது போயிருந்தேன். நல்லவேளை என் அலைபேசியை காரில் மறந்திருந்தேன். அதை எடுக்க போகும்போது காரில் எதற்கும் இருக்கட்டுமென வேலைக்காக வைத்த ப்ளேசர் ஆபத்பாந்தவனாய் கைகொடுக்க, சட்டையை இன் செய்து அதை அணிந்துகொண்டு உள்ளே போனேன். பெயரை சரிப்பார்த்துக்கொண்டு சட்டையில் ஒட்டிக்கொள்ள பெயர் அட்டை எல்லாம் தந்தார்கள்.

விழா அரங்கு கிட்டத்தட்ட நிறைந்திருந்தது. எனக்கு சற்று பின்னால் தான் உட்கார இடம் கிடைத்தது. விருதுகள் கவிதை,மொழிபெயர்ப்பு என பல துறைகள் சார்ந்து தரப்பட்டுக்கொண்டிருந்தது. ராணுவ ஒழுங்கோடு ஒவ்வொரு விருதுக்கும் ஓரிரு நிமிட அறிமுகம், விருது வழங்குதல்,இரண்டு நிமிடம் தாண்டாத ஏற்புரை என விழா விறைப்பாக நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் agenda அச்சடிக்கப்பட்டிருக்க, அதற்கு இம்மி பிசகாமல் விழா நடக்க எனக்கு ஏக வியப்பு.

என் கண்கள் ஜெயமோகன் அவர்களை தேடியது. மேடையேறிய சிலர் “ஜெயமோகனுக்கு வணக்கம்” என கீழே முன்வரிசையை பார்த்து சொன்னது பார்த்தேன். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. கடைசியாக விழாவின் முத்தாய்ப்பான இயல் விருது வழங்கும் தருணத்துக்கு வந்தது.

ஆனால் ஜெயமோகன் உடனே மேடையேறி விடவில்லை. அவரை பற்றிய ஒரு சம்பிரதாய அறிமுகம் (”இவர் நாகர்கோவிலில் ..வருடம் பிறந்தார்” போல) மற்றும் ஜெமோவின் படைப்புகளை பற்றிய ஒரு சிறப்புரை, பரிசு தர வந்திருந்த வெள்ளைக்கார எழுத்தாளரை பற்றிய ஒரு அறிமுகம், அதற்கு பின் அந்த வெள்ளைக்காரரின் உரை என தொண்ணூறுக்கும் நூறுக்கும் இடையேயான டெண்டுல்கரின் இன்னிங்ஸ் போல் சற்றே நீண்டது.

எனக்கோ தாகம். அரங்கின் பின்னால் தண்ணீர் இருக்குமா தெரியவில்லை. வெள்ளைக்காரர் எப்படியும் 2 நிமிடங்கள் பேசுவார் என தெரிந்ததால் பின்னால் போய் தாகத்தை தணித்து வந்தமரவும், ஜெமோ அவர்கள் மின்னல் போல் எங்கிருந்தோ மேடையில் தோன்றவும் சரியாக இருந்தது. அவருக்கு இயல் விருதும், கனேடிய பாராளுமன்ற விருதும் (ஆசியாவுக்கு வெளியேயான முதல் தமிழ் எம்பி ராதிகா சித்சபேசன் வழங்க) பெற்றுக்கொண்டார். சம்பிரதாய புகைப்பட தருணங்கள் முடிந்து தன் ஏற்புரையை துவங்கினார்.

மெல்லிய குரல் தான் ஜெயமோகனுக்கு. ஒரு சம்பிரதாயமான தமிழ்ப்பேச்சாளருக்கான உசத்திய குரலோ, gait அல்லது உடல்மொழியோ கிடையாது. ஆனால் அதில் என்னவோ நம்மை கட்டிப்போடும் த்வனி. மிருதுவான குரலில் மிகத்தெளிவான பேச்சு.

ஜெயமோகனின் பேச்சின் ஆதாரப்புள்ளி தன்னிறைவு, தன்முனைப்பு, தன்மகிழ்ச்சி. இதை இரு விஷயங்களை தொட்டு விளக்கினார். முதலாவதாக, எழுத்தாளர் ஆகுமுன் நாடோடியாக வடக்கு ட்ரைன்களில் செல்கையில் கிருஷ்ணமரபில், ஆட்டம்பாட்டத்தோடு, நித்யமகிழ்ச்சியோடு இருக்கும் கிருஷ்ணபக்தர்கள் தன்னை எவ்வாறு பாதித்தனர் எனக்கூறினார். பிறகு தன் பெற்றோர்களை இழந்து சிரமப்பட்ட வருடங்களில் தற்கொலை செய்துகொள்ள தண்டவாளத்தில் கிடந்த தருணத்தில், அவர் கண்ணில் பட்ட ஒரு புழு வாழ்வுக்கான அவர் பார்வையை எப்படி முற்றிலும் மாற்றியது என விளக்கினார். “ஒரு மிகச்சிறிய புழு தன் சர்வைவலுக்கான போராட்டத்தை கூர்மையாக செய்யும்போது, தன்னால் முடியாதா” என அன்றிலிருந்து ஒரு வலிந்து எடுத்த முடிவாக (conscious decision) "இனி என் வாழ்வில் துயரம் என்பது வெளியிலிருந்து இல்லை. என்னை ஒரு வெளிக்காரணி துக்கப்படுத்தவோ, சங்கடப்படுத்தவோ முடியவே முடியாது” என முடிவெடுத்து அது 25 வருடமாக எப்படி தன்னை இயக்குகிறது என அற்புதமாக விளக்கினார். தன் பழைய டைரிகளை புரட்டுகையில் எப்படி தன் ஒவ்வொரு நாளும் எவ்விதத்திலோ உருப்படியாக கழிந்திருக்கிறது, ஒன்று எழுதியிருக்கிறேன், இல்லை எழுத்துக்காக படித்திருப்பேன், பயணித்திருப்பேன் என்பதில் தனக்கு எத்தனை பெருமிதம். நான் எழுதுவதை யாரும் படிக்கவே போவதில்லையென்றாலும் எப்படி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பேன் என்றார்.

என் எழுத்து இங்கு தோற்றுப்போகிறது. இந்த செய்தியை ஜெயமோகன் சொன்ன விதத்தில் நூறில் ஒருபங்கை கூட மேலே நான் எழுதிய பத்தி சொல்லவில்லை என நானறிவேன். அவர் பேசப்பேச அத்தனை நெகிழ்ந்தேன். கைத்தட்ட சற்றே சங்கோஜப்பட்ட கூட்டமானதால் சில இடங்களில் தொடர்க்கைத்தட்டல்களை முடுக்கி வைத்தேன். நேர்த்தியாக பெய்யும் மழையாக தொடர்ந்த அவரது பேச்சு, மழை நின்று வெயில் எட்டிப்பார்ப்பது போல் ஒரு எதிர்பாராத தருணத்தில் சட்டென முடிந்தது.

நான் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன். இப்படியொரு அற்புத பேச்சை நான் கடைசியாய் எப்போது கேட்டேன் என நினைவில்லை.

தொடர்ந்த சுருக்க நன்றியுரையுடன் (8.30க்கு முடியவேண்டிய விழா 8.31 கூட அல்ல .8.30க்கே) முடிய கூட்டம் எழுந்து நகரத்துவங்கியது. நான் ஜெயமோகன் அவர்களின் குறுநாவல் தொகுப்பு ஒன்றை எடுத்துப்போயிருந்தேன். மேடையிலிருந்து இறங்கி கூட்டத்தோடு அளவளாவ துவங்கினார். புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது மட்டுமே என் குறிக்கோளாய் இருந்தது. வரிசையில் எனக்கான அவரின் கவனம் கிடைத்த போது கைகுலுக்கினேன். புன்னகைத்தார்.

“இதுல ஆட்டோகிராஃப் சார்”

இப்போது யோசிக்கையில் ஆட்டோகிராஃப் கேட்க அது அசந்தர்ப்ப தருணம். இருந்தும் பொறுமையாய் நின்றுகொண்டே போட்டார்.

“சார் நான் ரசனை ஸ்ரீராம்ன்னு”

”நீங்கதானா அது? இங்கயா டொராண்ட்டோலயா இருக்கீங்க?”

சத்தியமாய் இதை எதிர்ப்பார்க்கவில்லை நான்.

”உங்க பத்ரி சேஷாத்ரியோட புத்தக விவாதத்துல நான் கூட ஒரு பதிவு போட்டேனே. உங்களை கவனிச்சிருக்கேன்” எனத்தொடர்ந்து “இது என் வொய்ஃப் அருண்மொழி” என அறிமுகப்படுத்தினார்.

அவர் பேசப்பேச எனக்கு மகிழ்ச்சி கொப்பளிப்பு. என் இத்தனை நாள் கிறுக்கல்களுக்கான ஒரு அங்கீகாரத்தருணமாக உணர்ந்தேன். ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு யாரிடம் எடுக்கச்சொல்ல என விழிக்க வெங்கட்(ரமணன்) அதை புரிந்து அவர் கேமராவிலேயே எடுத்தார். பின்னால் கூட்டம் நான் வழிவிட காத்திருக்க முகமன் கூறி விலகினேன்.
என்னால் இப்பொழுதும் இது நிகழ்ந்ததென நம்பமுடியவில்லை. எனக்கு வேறு யாரையும் வெகுவாய் தெரியாதென்பதால் சற்று எட்ட நின்று அவரையே கவனித்துக்கொண்டிருந்தேன். சகஜமாய் பேசுவதை வலிந்து செய்யவில்லை அவர். ஒவ்வொருவரிடமும் ஒரு சிறுகுழந்தையின் உற்சாகத்தோடு, முகபாவனைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சுபாவத்திலேயே இயல்பானவராக, நிறைவானவராக இருக்காவிடில் இது சாத்தியமில்லை.

சற்று நேரம் கழித்து அவரை சுற்றிய கூட்டம் சற்றே விலக மெல்ல அரங்கின் நடுவில் அவர் நடந்து வர நான் நிற்கும் இடத்திற்கருகில் வந்தார். மறுபடி என்னை பார்த்து அதே புன்னகை. மறுபடி அவரிடம் பேசும் சந்தர்ப்பம்.

“சார், இங்க உங்களுக்கு எல்லாம் சௌரியமா இருக்கா? உங்களுக்கு, ஃபேமிலிக்கு என்ன வேண்ணாலும் சொல்லுங்க சார்”

இப்போதும் ஏன் இதை கேட்டேன் எனத்தெரியவில்லை. பதட்டமோ என்னவோ உளறிவைத்தேன். ஊரிலிருந்து வந்த களைப்பு இன்னமும் இருக்குமே, அவருக்கான மற்றும் அவரது மனைவிக்கான உணவு, இதர தேவைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா, என்னால் ஏதும் சிறிதாய் செய்யமுடியுமா என்கிற ஆவலாதி. அவல் எடுத்துக்கொண்டு போன ஒரு குசேலன் மனநிலை எனக்கு. “எல்லாம் நல்லா பார்த்துக்கறாங்க ஸ்ரீராம்” என்றார் புன்னகைத்துக்கொண்டே. தொடர்ந்து வெங்கட் அவர் வீட்டுக்கு என்னை அழைத்திருக்க, கிளம்பலாமா என கேட்க, நானும், வெங்கட்டும் ஜெயமோகன் அவர்களிடம் சொல்லிக்கொண்டு விடைப்பெற்றுக் கொண்டோம்.

ஜெயமோகன் அவர்களை நான் நிரம்ப வாசித்தது இல்லை. அறம் சிறுகதைகள், வெகுசில குறுநாவல்கள், இணைய கட்டுரைகள் தாண்டி அறிந்தது இல்லை. அவரின் ஒரு தேர்ந்த,திவீர வாசகன் மனநிலையில் நான் இயல் விருதுகளுக்கு செல்லவும் இல்லை. ஆனால் ஒருவரின் ஐந்து நிமிட பேச்சு, சுபாவம் இத்தனை நேர்மறை தாக்கத்தை உண்டாக்கும் சாத்தியம் உண்டா எனில் வெகு நிச்சயமாக ஆமென சொல்வேன்.

ஜெயமோகன் எழுத்துக்களின் பன்முகத்தன்மை, விஸ்தீரணம், அதில் உள்ள செய்திகளின் அடர்த்தி பற்றி பலருக்கு வியப்புண்டு.

ஆனால்,

எனக்கு ஜெயமோகனின் எழுத்துக்களில் உள்ள செய்தியை விட பெரிய செய்தியாக தெரிவது, அவர் வாழ்க்கையே. அவர் வாழ்க்கையை அணுகும் விதமே. வாழும் முறையே.

His life is his biggest message.
++++++++++++++++




Saturday, June 13, 2015

எச்சத்தாற் காணப்ப படும்



ஒரு கையகல அட்டை. போஸ்ட்கார்ட் அளவில். குட்டிகுட்டியாய் ஸ்டாம்ப் குத்த ஏதுவாய் கட்டங்கள். பொக்கிஷமாய் இதை தன் ஸ்கூல் பேகின் குட்டி zipக்குள் வைத்திருப்பாள் குஷி.

பொதுவாய் இதை கையில் இறுக்கமாய் பிடித்திருப்பாள். இங்கு இன்னமும் கோடை காலம் சரியாய் வராத, மிதமான குளிரும், சிலுசிலுவென காற்றும் நிறைந்த காலைவேளைகள்.

எங்கள் வீட்டையும், பள்ளியையும் பிரிக்கும் பெரிய பார்க்கின் ஊடே நடக்கையில் பறந்துவிடப்போகிறதே என பயம் எனக்கு. பைக்குள்ளே வைத்திருந்து, பள்ளி வந்தவுடன் எடுத்துத்தருகிறேன் என்றால் கேட்பாளில்லை.

பள்ளியின் க்ரில்கம்பி போட்ட காம்பவுண்டுக்குள் நுழையும்போதே பரபரப்பாவாள். கண்கள் ஸ்டாம்ப் கேர்ளை தேடும். தேடிக்கண்டுக்கொண்டவுடன் எனை மறப்பாள். ‘வர்றேன்ப்பா’ ‘பை’ கூட வராது. பல பொடிசுகள் சூழ நிற்கும் சிறுமி கர்மசிரத்தையாக ஒவ்வொருத்தரிடமும் அட்டையை வாங்கி, ஒரு முத்திரையை குத்துவாள். ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல் குழந்தைகள் தத்தம் கிளாசுக்கு போகும்.

எதற்கிந்த கூத்து? பள்ளி குழந்தைகள் நடந்து பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க. குறிப்பாய் குளிர், உறைபனிகாலத்தில் பள்ளிச்சாலையில் வரிசையில் நின்று குழந்தையை இறக்கிவிடுவதற்குள் அத்தனை கார்க்கூட்டம் இருக்கும். கோடையிலாவது நெரிசல் குறையட்டுமே, குழந்தைகள் நடக்கட்டுமே என ஒரு அட்டையை கொடுத்து, நடந்துவரும் அன்றெல்லாம் ஒரு ஸ்டாம்ப் கிடைக்கும்.

சரி, மொத்தமாய் அட்டை முழுதும் ஸ்டாம்ப் கிடைத்தால் என்ன பரிசு கிடைக்கும்? ஒன்றுமில்லை. நல்லவேளை, குஷிக்கு அந்த கேள்வி வருவதேயில்லை.

முடிந்தவரை, காலை மீட்டிங் இல்லாத நாட்களில் அவளை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு நடப்பது வழக்கம். அவள் கந்தாயத்தில் என் உடற்பயிற்சி வாட்ச்சில் 2 கிமீ நடைப்பயிற்சி கணக்கு ஏறும் என்பதால் எனக்கும் உவப்பே.

பத்தாதற்கு அவளுடன் பேசிக்கொண்டே போகலாம். நமக்கு மிகச்சிறியதாய் தோன்றும் விஷயங்களை, கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பேசிக்கொண்டே வருவாள். “Don't you know about the Earth project? Seriously" என பெரியமனுஷித்தனத்தோடு எதையாவது சொல்லிக்கொண்டே வருவாள். நான் கேட்டுக்கொண்டே, அவளின் பின்க் கலர் பேகை லஜ்ஜையின்றி என்னவோ அதற்காகவே ஜென்மம் எடுத்தாற்போல் என் முதுகில் மாட்டிக்கொண்டு நடப்பேன். சந்தோஷ மனநிலையில் இருந்தால் மெலிதாய் துள்ளிக்குதித்துக் கொண்டே வருவாள். எதற்கோ ஒரு ஸ்கிப்பிங் கயிறு போன்ற ஒன்றையும் எடுத்துவருவாள். தெருவில் துள்ளிக்குதித்து நடப்பது நின்ற வயதில் நாம் பெரியவர்களாகிறோம்.

பல நாட்கள் பள்ளிக்கு நடந்து போனாலும் ஸ்டாம்ப் கிடைக்காது. பல இடையூறுகள். பள்ளிக்கு வகுப்பு வாரியாக பல வாயில்கள் என்பதால், ஸ்டாம்ப் கேர்ள் எங்காவது போய் நின்றிருப்பாள். குஷி தன் தோழி யாரையாவது ஆள் சேர்த்துக்கொண்டு அவளை தேடுதேடு என தேடுவாள். நான் அங்கேயே மருகுவேன். ‘நீ கிளம்பு’ என்பதுபோல் பார்ப்பாள். குஷி பள்ளிக்குள்ளே போகும்வரை எனக்கு நிம்மதியில்லை.

இல்லை, சில நாட்கள் ஸ்டாம்ப் கேர்ள் இருக்கமாட்டாள். அல்லது நாங்கள் கொட்டுவாயில் பள்ளிக்கு போய் சேர்ந்திருப்போம். நேரமாகிவிட்டது என வகுப்புக்கு கிளம்பியிருப்பாள். குஷி உன்னால் தான் நான் தாமதமாய் வந்தேன் என என்னை முறைப்பாள். அவள் ஏழரை மணி வரை தூங்கியது, பாத்ரூமில் கனவு கண்டது, ஒரு டம்ளர் பாலை அரைமணிக்கூர் குடித்தது போன்றவற்றை சொல்வதில்லை நான். அன்பிற்குரியவர்களிடம் தர்க்கம் தேவைப்படுவதில்லை.

நேற்றும் இப்படித்தான். 8.25 ஆகிவிட்டது. இனி பள்ளிக்கு நடந்துசெல்ல வாய்ப்பில்லை. ஆனால் குஷி அன்று நடந்து செல்வதை வெகுவாக எதிர்ப்பார்த்திருந்தாள். அவள் அட்டை நிரம்ப அவளுக்கு தேவை ஒரேயொரு ஸ்டாம்ப். முதல்நாள் இரவிலிருந்தே அதை பற்றிய நினைப்பு . இன்று நடந்து செல்வது சாத்தியமில்லை என உணர்ந்தவுடன் அழத்தயாராய் இருந்தாள். கண்கள் சட்டென கலங்கிவிடும் இயல்பினள்.

“சரி, அப்பா உன்ன ஸ்கூல் பின்னாடி இருக்குற இடம் வரை பாதி தூரம் கார்ல கொண்டுவிடுவார். அங்கருந்து நடந்துபோவியாம். நேரத்துக்கு போயிடலாம். நடந்தமாதிரியும் இருக்கும்” மனைவி எனக்கு ஜாடை கொடுத்துக்கொண்டே சொன்னாள். பலநேரங்களில் ஆபத்பாந்தவனாய் காத்துவிடுவாள்.

குஷி அரைமனதாய் சம்மதித்தாள். ஒரு கிலோமீட்டர் தான் என்பதால் சடுதியில் காரை பள்ளி மைதானத்தை பார்த்துக்கொண்டிருக்கும் தெரு முக்கு ஓரத்தில் நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம். அதுவரை பள்ளிக்கு நடந்து வந்தவர்கள் வரும் பாதையில் நாங்களும் இணைந்தோம். பள்ளி காம்பவுண்டுக்குள் நுழைந்தோம். பரவாயில்லை நேரத்துக்கு வந்தாயிற்று. 

எப்போதும் போலான காலை எட்டரை மணி பரபரப்பு. ரெயின்கோட் அணிந்துகொண்டு, பள்ளிக்கு வரும் கார்களை திறந்துவிட்டு ‘ஜருகண்டி’க்கொண்டிருந்தனர் ஆசிரியர்கள். ”சீக்கிரம் சீக்கிரம்”என நடத்திக்கூட்டிக்கொண்டு வரும் பெற்றோர்கள். ஆங்காங்கே விளையாடிக்கொண்டு, அரட்டை அடித்துக்கொண்டும், பள்ளிக்குள்ளே நுழையும் கடைசி நிமிடம் வரை விளையாடும் ஆசையில் குழந்தைகள்.
ஸ்டாம்ப் கேர்ள் இன்னமும் இருந்தாள். குஷியின் கண்களில் திடீர் மலர்ச்சி. "There she is" என ஓட்டமாய் ஓடினாள். நான் அவள் பையை தூக்கிக்கொண்டு பின்னாலேயே நடந்தேன். ஸ்டாம்ப் சிறுமியிடம் என்னவோ பேசினாள், சிரித்தாள்.

அப்போது தான் ஸ்டாம்ப் அட்டையை மறந்துவிட்டாளே என உறைத்தது. நான் ஸ்கூல்பேகை திறந்து அந்த அட்டையை எடுத்து குஷியையும், அந்த சிறுமியையும் நெருங்கினேன்.

”வெயிட்..அதெதுக்கு? உள்ள வைப்பா” என சற்றே கடுக்கடுத்து குஷி அவளிடமிருந்து விலகினாள். ”அவள் என் கிளாஸ் தாம்ப்பா. அதான் போய் பேசினேன்”

”சரி ஸ்டாம்ப் வாங்கிக்கலையா குஷி?”

“நான் தான் இன்னிக்கு முழுசா நடக்கலையே”

குழந்தைக்கு நேர்மையை கற்றுத்தர வேண்டாம் நாம்.
இருப்பதை..

குஷி பள்ளிக்குள்ளே போய்விட்டிருந்தாள். நான் அவள் போன திசையை பார்த்துக்கொண்டிருந்தேன்.

+++++++

Tuesday, June 9, 2015

தங்க்லீஷ் என்றோர் இனமுண்டு



ஆங்கில காமிக்ஸ் உலகில் The Bizarro World என ஒரு பாப்புலரான சிரீஸ் உண்டு. அதாவது நமது உலகை போலவே, ஆனால் வேறு முகம் கொண்டு இயங்கும் தனி உலகம். ஒரு தலைகீழ் Parallel Universe என சொல்லலாம்.

போலவே தமிழ்நாட்டில் இருந்து சோஷியல் மீடியாவில் இயங்குபவர்களில் இரண்டு உலகம் உண்டோ என தோணும். அதாவது, நம்மை போல் தமிழில் எழுதுபவர்கள். இன்னொரு வகை தங்க்லீஷ் க்ரூப்புகள். தமிழ்ச்சூழலில் இயங்குவார்கள். தமிழ்ச்சினிமா, இசை, பிரச்சனைகளை பேசுவார்கள். ஆனால் தமிழில் டைப்படிக்காத தங்க்லீஷ் க்ரூப்புகள்.

சரி, இருவரும் தமிழர்கள் தானே, டைப்படிக்கும் மொழி தானே வேறு என நினைத்தால் அது தான் இல்லை. ரசனை, விருப்பு வெறுப்பு சார்ந்து பல நுண்ணிய வேறுபாடுகள் உண்டென தெரிகிறது. சுருக்கமாய் தங்க்லீஷ் என ஒரு இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு.

1. Macha என டைப்புவார்கள் மச்சானுக்கு. இந்த ‘மச்சா’ கலாச்சாரம் எங்கிருந்து வந்ததென புரியவில்லை. நானும் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து பல ஊர்களில் சென்னை வரை வசித்திருக்கிறேன். ’மச்சா’ என யாரும் விளித்து கண்டதில்லை. (ஐ)ஐடி என வந்து செட்டிலான வட இந்திய க்ரூப்களிருந்து வந்ததென நினைக்கிறேன்..

2. பொதுவாய் சென்னையை தாண்டி (அதுவும் மத்திய,தென்சென்னை) கண்டுகொள்ளமாட்டார்கள். பத்து நாட்களுக்கு ஒருமுறை ‘Chennai is a city. Madras is an emotion' பகிர்வார்கள். 10 things Chennaiites should not miss போன்ற Buzzfeed, Scoopwhoop லின்க்குகளை பகிர்வார்கள். அதில் ஃபில்ட்டர் காப்பி, மெரினா பீச், ஸ்ட்ரீட் கிரிக்கெட் படங்கள் கட்டாயம் இருக்கும்.

3. NRI என்றால் ஊருக்கு லீவுக்கு போன முதல் வாரம் “Reading The Hindu with filter coffee in Balcony. #Bliss" இல்லை பெசண்ட் நகர் பீச்சில் பானிபுரி, கரும்புஜூஸ், பன்னீர் சோடாவோடு ஸ்டேடஸ் போடுவதன் சாத்தியக்கூறுகள் அதிகம்.

4. கிரிக்கெட்டில் இங்கிலாந்து - கென்யா டெஸ்ட் மேட்ச்சை தேடிப்பிடித்து ஸ்கோர் பகிர்வார்கள். இல்லை கங்குலி காலத்தில் க்ரெக் சேப்பலோடு வந்த சண்டை பற்றிய cricinfo கட்டுரையை அலசுவார்கள். IPL என்றால் ’விசில் போடு’ போன்ற அரதப்பழசான ஸ்லோகன்களோடு CSKவை சப்போர்ட் செய்வார்கள்.

5. விளம்பர தட்டிகளில் உள்ள ஆங்கிலப்பிழைகளை ஃபோட்டோ எடுத்து வைரலாக பரப்புவார்கள். “Satish BEDS Deepika" ஷேர் செய்து கெக்கெபிக்கே ஸ்மைலி போடுவார்கள். ஊர்ப்பக்க ஹோட்டல் மெனுக்களில் உள்ள பிழைகளை (Gopi Manjuri) எடுத்துப்போடுவார்கள். ஹிந்தியும் தெரிந்தவர்களாக இருந்தால், எப்படி அது GoPi இல்லை GoBi என ரகுதாத்தாவாக கிளாஸ் எடுப்பார்கள்.

6. ஊர்ப்பக்கம் ஏதும் ட்ரைவ் போனால் திருமண வாழ்த்து, காதுகுத்து ஃப்ளெக்ஸ் போர்டுகளை ஃபோட்டோ பிடித்துவைத்துக்கொள்வார்கள். அதில் வரும் “Super Boy's" "Lover Boy's" ”Thala Army" போன்ற டெர்மினாலஜிகளை ஷேர் செய்து கிகிள் செய்வார்கள்.

7. பொதுவாய் எல்லா கமல் படங்களையும் Classic, WhyKamalIsGod என கொண்டாடுவார்கள். அதுவும் மைக்கேல் மதனகாமராஜன், நாயகன் காலம் தான் விருப்பம். வயது சற்றே கம்மி இல்லை யூத்தாக காண்பிக்க வேண்டுமென்றால் “THALAIVAR ROCKS IN LINGAA" என்பார்கள். அஜீத், தனுஷை ஏற்றுக்கொள்வார்கள். அதென்னவோ விஜய்யை ரொம்ப சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

8. ரஜினியை கொண்டாடினாலும், நார்த்தீஸ் பரப்பும் Chuck Norris வகை ரஜினி குறட்டை விட்டால் பூகம்பம் வரும் டைப் மொக்கை காமெடி, கார்ட்டூன் படங்களை பரப்பி அகமகிழ்வார்கள்.

9. காமெடியை ரசிப்பார்கள். ஆனால் கவுண்டரை தாண்டி வரமாட்டார்கள். #WhyGounderIsGod ஒரு உசிதமணி டேக். அதிலும் கவுண்டரின் ரேர் காமெடிக்குள் எல்லாம் புகுந்து புறப்படமாட்டார்கள். மேலோட்டமாய் வாழைப்பழ காமெடி, சத்தியசோதனை என்பதற்குள் முடித்துக்கொள்வார்கள். கொஞ்சமாய் வடிவேலுவை சேர்த்துக்கொள்வார்கள். கிரேசிமோகனை எவர்க்ரீனாய் கொண்டாடுவார்கள்.

10. சமீப காலங்களில் இவர்களுக்கு தக்காளி தொக்காய் இருப்பது விஜயகாந்த். அவரின் சமீபத்திய வீடியோக்களை விட நரசிம்மா காலத்து சீன்கள், ஃபைட்டு வீடியோக்களை #Gaptun என மறவாது டேக் போட்டு மகிழ்வார்கள். டீ.ஆர் மீம்கள், gifகளும் மேலதிக விருப்பத்தோடு பகிர்வார்கள்.

11. திடீரென சனிக்கிழமை காலை Chennai Streetfood culture என SLRஉடன் கிளம்பிவிடுவார்கள். மயிலாப்பூரில் ரோஸ்மில்க் விற்கும் கடை, கற்பகாம்பாள் மெஸ், ராயர் மெஸ், அடையாரில் பஜ்ஜி போடுமிடம் என தென்சென்னைக்குள்ளேயே  ஜோலியை முடித்து ஃபில்ட்டர் காபி ஆவியுடன் இன்ஸ்டாகிராமில் படம் போடுவார்கள்.

12. அவ்வபோது Am at Landmark quiz, Singer Karthik rocks at #IITSaarang, Amish Tripathi at CrossWord என ஸ்டேடஸ் போடுவார்கள். ஜஸ்டின் டிம்பர்லேக், ப்ரூனோ மார்ஸ், டெய்லர் ஸ்விஃப்ட்டின் புதிய சிங்கிள்ஸ் வந்தால் Vevo லின்க் ஷேர் செய்து சிலாகிப்பார்கள்.

13. வகிடெடுத்து வாரிய, புட்டிக்கண்ணாடி போட்ட பீட்டர் என நினைத்துவிடக்கூடாதே, நாங்களும் தரைலோக்கலு என காட்டவேண்டுமென #WuthaDei என கொஞ்சம் பேட்வர்ட்ஸ் பேசுவார்கள் (அர்த்தம் புரிந்தோ, புரியாமலோ).

14. அநாதையான நாய்க்குட்டிகள் சாரி Puppies தத்தெடுத்துக்கொள்கிறீர்களா ஒன்லி 25000 என சின்ன காக்காய் முட்டை போல் நெட்டில் கடைவிரிப்பார்கள். ஆனால் ஒருவர் கூட அவர்களே தத்தெடுத்து நான் பார்த்ததில்லை.

15. அரசியல் என்றால் மோடியை சிலாகிப்பார்கள். ராகுலை பப்பு என்பார்கள். பிஜேபிக்கு எதிரி ஆனதிலிருந்து கேஜ்ரிவாலை வைவார்கள். பொதுவாய் கலைஞரை தாத்தா என அழைப்பார்கள். பொதுவாய் ஈழம், இடஒதுக்கீடு, கூடங்குளம், காவிரி, முல்லைப்பெரியாறு, ஊழல் வழக்கு எந்த சமூக, அரசியல் பிரச்சனையானாலும் சரி, ’அம்மா சரி, கலைஞர் தவறு’ என்ற ஒற்றைவரி நிலைப்பாடுக்குள் அடக்கிவிடுவார்கள்.

+++++++

Tuesday, May 5, 2015

”வாக்”குண்டாம் நல்ல மனமுண்டாம்



முன்பெல்லாம் வாக்கிங் போவதற்கு கால்கள் மட்டும் தேவைப்பட்டது. காலையில் ஜில்லென்ற தண்ணீரில் முகமலம்பி, பல்தேய்த்து, ஒன்று, இரண்டு என கடன்கள் முடித்து, காபி சாப்பிட்டு நாய் துரத்தாத தெருவில் இறங்கி நடக்கவேண்டியது தான்.

பிறகு 80ஸ் இன்றுபோய்நாளைவா காலக்கட்டத்தில் “மேன் இப்டில்லாம் வரக்கூடாது..அரைடவுடர் மாட்டிக்கிட்டு அதென்னாது சார்ட்ஸ் அப்புறம் கால்ல போடுவாங்களே கேன்வாஸ் கேன்வாஸ்” என கல்லாப்பெட்டி சிங்காரம் அட்வைஸ் செய்ய ஒரு ஷூவும் சேர்ந்துகொண்டது.

கடந்த பத்தாண்டுகளில் இசையும் சேர்ந்துகொண்டது. சோஷியல் மீடியாவில் இருந்தால் “Walking in pleasant morning with Sangar Ganesh's kondai cheval koovum neram" என ம்யூசிக் நோட்ஸில் இருக்கும் அத்தனை சிம்பல்களையும் பின்சேர்த்து ஸ்டேடஸ் போடுவது உசிதமணி.

இதில் எம்போன்ற பக்கோடா காதர்களுக்கு சாரி குட்டிக்காதர்களுக்கு இயர்ஃபோன் திருமணம் என்னும் நிக்கா. லெஃப்ட்டை கோபி நீயாநானாவில் ஆண்டனி இன்ஸ்ட்ரக்‌ஷன் வாங்குவது போல் அஜ்ஜிஸ் செய்தால், ரைட்டு வயர் தரையில் தொங்கும். இரண்டையும் காதில் கரகாட்டக்காரன் கனகா போல் பேலன்ஸ் செய்து ரெண்டடி நடந்தால், பாக்கெட்டில் வைத்திருந்த ஐபாட்/ஃபோனில் கனெக்‌ஷன் பட்டென தெறித்து காது சூன்யமாகும். இல்லை டப்பென்று தண்டுமாரியம்மன் கோவில் லவுடுஸ்பீக்கர் கட்டியது போல் 70 டெசிபலில் அலறி கேக்’காது’. டச்ஸ்க்ரீன் வந்த பிறகு சுத்தம். அதுவாகவே உத்தமவில்லன் திரைக்கதை போல் ஷஃபிலுக்குள் ஷஃபில் செய்து “மலர்கள் கேட்டேன்..ஏ ஆத்தோரமா வாரியா..மஹான் காந்தி மஹான்..” என சொந்த மெட்டில் மெட்லி க்ரியேட் செய்யும்.

இந்த இழவுக்காகவே ஒரு ப்ளூடூத் ஹெட்ஃபோன் வாங்கியது. ஒரு தடவை என் மகள் கூட காஸ்ட்லி என தரையில் படுத்து தடுத்தாளே, நான் அதைப்பற்றி ஃபீல் செய்து எழுத, நீங்கள் ஃபீல் செய்து கமெண்ட் போட, ஃபேஸ்புக் ஆபீசே அழுததே..அதே. பிறகு தன்மானத்துடன் அவள் இல்லாதபோது கமுக்கமாய் போய் வாங்கி விட்டேன். அது வந்தபிறகு (ஐ)பாடு தேவலை. இயர்ஃபோன் வயர் தடுக்கி புல்லில் விழாத பயில்வான் ஆகிவிட்டேன்.

இப்போது சமீபத்தில் இன்னொரு லாகிரி கேட்ஜட்டும் சேர்ந்துகொண்டது. ஃபிட்னஸ் வாட்ச். பாவித்திராதவர்களுக்கு, இது பழைய சல்லீசு எலக்ட்ரானிக் வாட்ச் போல் இருக்கும். ”இவன் உசுரு அவன் கைல” என்பது போல் வாட்சுக்கு எஜமானனாய் ஒரு ஸ்மார்ட்ஃபோன் app இருக்கும். செட் செய்துவிட்டால் ”சொல்லிட்டீங்கள்ள, இனி என் மூவ்மெண்ட்டை பாருங்க” என நாடியோடு ஒட்டிக்கொண்டு நம் மூவ்மெண்டுகளை வாட்ச் பண்ணும். சிலது டிஸ்ப்ளே இல்லாது அருணாச்சலம் ரஜினி ப்ரேஸ்லெட் போல். சிலது தக்குணூண்டு டிஸ்ப்ளேயில் நடந்த ஸ்டெப்ஸ், எரித்த கலோரிக்கள் காட்டும். அதில் நமக்கு ஒரு அல்ப திருப்தி கிடைக்கிறது என்பதால், ஆ..பீஸ் போவது முதற்கொண்டு கவசகுண்டலமாய் கூடவே சுத்துகிறது.


இப்போது பிரச்சனை என்னவென்றால், இந்த வஸ்துக்களோடு வாருக்கு இது வாக்கிங் கிளம்புவது தான். மனிதன் க்ளைமாக்சில் ரஜினி ரெடியாவது போல் ஒவ்வொன்றாய் மாட்டிக்கொள்ளும்போது தான் சார்ஜ் பிரச்சனை உறைக்கும். ஃபோனில் சார்ஜ் இருந்தால், ப்ளூடூத் ஹெட்ஃபோனில் இருக்காது. ஹெட்ஃபோனில் இருந்தால் ஃபிட்னஸ் வாட்சில் இருக்காது. வாட்ச்சில் சார்ஜ் இருந்தால், அது ஃபோன் app கூட ப்ளூடூத்தில் சின்க் ஆகாது. வாட்ச் ப்ளூடூத் கனெக்‌ஷனில் இருந்தால், பாடல்கள் ப்ளூடூத் ஹெட்செட்டுக்கு போகாமல் படுத்தும். எல்லாம் வேலை செய்தால், நேற்றைய ஐட்யூன்ஸ் அப்டேட்டில் மொத்த பாடல்களும் சுவடின்றி அழிந்திருக்கும். பல நாட்கள் ”ஆணியே புடுங்க வேணாம்” என எல்லாவற்றையும் கழட்டிப்போட்டு காந்திதாத்தா போல் தண்டியாத்திரை கிளம்பிவிடுவது வழக்கம்.

இன்று பரவாயில்லை. ஃபோனில் பாட்டு இருந்தது. சார்ஜ் இருந்தது. ப்ளூடூத் ஹெட்ஃபோனில் கேட்டது. ஃபிட்னஸ் வாட்ச் வேலை செய்தது. தினமும் 10000 ஸ்டெப்ஸ் நடக்கவேண்டும் என்ற உன்னத குறிக்கோளில் கள்ளிகாட்டு இதிகாசம் எழுதிய வைரமுத்து போல் நடக்க ஆரம்பித்தேன். எப்போதும் போல் ஆபோசிட்டில் வரும் சைனீஸ் கிழவர் இடுங்கிய கண்ணை இன்னும் இடுக்கி சிரித்தார். ‘ஒற்றகாலில் கொலுசொந்நு தொலந்நு போயி’ என கோபிகா காதில் ஒலிக்க,”அது தப்பு இல்ல பயப்பட தேவையில்ல’ என சேரன் அசந்தர்ப்பமாய் நினைவுக்கு வர ஆல் இஸ் வெல்.

வாக்கிங் முடிந்து வாட்சை பார்த்தேன். அடடே காலை 7.30க்குள்ளாகவே 4000 ஸ்டெப்ஸ் நடந்துவிட்டோமே என்ற திருப்தியில் வீடு நுழைந்து சட்டையை தலைவழியே கழட்டுகையில்..

ஃபிட்னஸ் வாட்ச் சட்டை கையில் சிக்கி, ஏதோ பட்டனை அமுக்கி, டிஸ்ப்ளே அலைபாய்ந்து, முற்றிலும் ரீசெட்டாகி “0 steps, 0 calories" என சமர்த்தாய் எனை பார்த்து கண்ணை சிமிட்டியது.

எனக்கு கண்ணை கட்டியது.


+++++++++++

Thursday, April 30, 2015

கவிச்சி காவியம்




டின்னருக்கு சோஷியல் மீடியாவில் கழுவி ஊற்றப்படும் உப்புமா. ஒரு இடைவெளி விட்டு செய்து சாப்பிட்டால் உப்புமாவும் அமிர்தம். சன் டிவி பார்த்துக்கொண்டே உப்புமா சாப்பிட்டு, ப்ரேக் விடும்போது கை அலம்ப எழலாம் என காத்துக் கொண்டிருக்கையில்..

புயல் போல் குஷி உள்ளே நுழைந்தாள்.

பக்கத்துவீட்டு ப்ரீத்தியோடு பார்க்குக்கு போனவள். கையில் ஒரு சிவப்புகலர் ப்ளாஸ்டிக் டிபன்பாக்ஸ் வைத்திருந்தாள். அவர்கள் பூனாக்காரர்கள். இருவீட்டுக்கும் இடையே சாப்பாடு போக்குவரத்து ஏகபோகம். சிங்க மராட்டியர் தம் ஆலுபராட்டா கொண்டு சேரத்து அவியல் பரிசளிப்போம்.

”என்னடி அதுல?” என குஷியின் அம்மா கேள்வி.

நல்லவேளை தட்டை அலம்பலை, எதுவா இருந்தாலும் இதுலயே போட்டுக்கலாம் என அமைதியாய் நான்.

“பட்டர் சிக்கன்” என சொல்லிக்கொண்டே டைனிங் ரூமின் நடுநாயகமான ஐலண்டில் பார்ஸ்டூலை இழுத்து உட்கார்ந்துகொண்டாள்.

”அம்மா ஸ்பூன் கொண்டு வா”

”அய்யிய்ய இத அங்கயே சாப்ட்டு வர்றதான”

“எனக்கு ரொம்ப புடிச்சுதுன்னு ப்ரீத்தி’ஸ் மாம் கொடுத்துவிட்டாங்க. ஸ்பூன் இல்ல ஒரு ஃபோர்க் சீக்கிரம்” மாமிசம் சாப்பிடும் வெறியில் இருந்தாள் குஷி.

“இரு அந்த ஃபோர்க் எடுக்காத, உன்னுதே தர்றேன்” என தேடியெடுத்து ஒரு ப்ளாஸ்டிக் ஃபோர்க்கை தந்தாள் மனைவி. அதென்ன லாஜிக்கோ புரியவேயில்லை.

விஷயம் இதுதான். மனைவி வெஜிடேரியன், நான் எகிடேரியன், மகள் பறப்பதில் ப்ளேனையும், ஓடுவதில் பஸ்சையும், தண்ணீரில் கப்பலையும் தவிர சாப்பிடுபவள் என ஒரு பாரதவிலாஸ் எங்கள் வீடு.

ஆனால், வீட்டில் கவிச்சி சமைப்பதில்லை. முட்டை மட்டும் அலவுட். அதற்கென ஜாதிப்ரஷ்டம் செய்யபட்ட தனி பாத்திரங்கள். எங்களுக்கு ஆம்லட் சாப்பிடும் ஆத்திரம் வந்தால் வெளியே வந்து தொம்சம் செய்துவிட்டு, மறுபடி அதன் ஈசான மூலைக்கு போய்விடும்.

எங்கப்பாரு எனக்கு சொத்தேதும் வைக்கவில்லையென்றாலும் முட்டை மட்டும் பழக்கிவிட்டுவிட்டார். ஞாயிறு மாலை மேகி கெச்சப்பை தலைகீழாய் கவுத்தி பொச்சக்கென்று ஒரு பெரிய கரண்டி விட்டுக்கொண்டு, வெங்காயம்,மிளகு தூவிய ஆம்லட்டோடு தூர்தர்ஷன் படத்தை பார்ப்பது தான் அவருக்கான அந்த வாரத்துக்கான ரீசார்ஜ். இதற்காகவே தேவுடு காத்துக்கொண்டு நானும், சகோதரிகளும் நிற்போம். நான் மதியமே முட்டை ஸ்டாக் எல்லாம் அவதானித்துக்கொண்டு, என் சைக்கிள் ஹேண்டில் பேரில் வயர்கூடை மாட்டிக்கொண்டு முக்குக்கடையில் முட்டை வாங்கி வீட்டுக்கு வருவேன். அம்மா “கணக்கு பேப்பர் குடுத்தாச்சாமேடா” என கேட்க நான் “அம்மா முட்டை வாங்கிட்டு வந்திருக்கேன்” என அசந்தர்ப்பமாய் சொல்லி அடிவாங்குவேன்.

அதுவும் தஞ்சையில் வாழ்ந்த சமயத்தில் முட்டை வெறி தறிகெட்டு ஓடியது. நாங்கள் இருந்த தஞ்சை ஸ்டேடியம் ஏரியாவில் தினமும் காலை, மாலை என இரு முட்டைகள் தருகிறார்கெளனவே வாலிபால் கேம்ப்புக்கு அண்ணந்தங்கைகள் ஃபேமிலியாய் போன குடும்பம் எங்களுது. என்னென்னவோ ஸ்ட்ரீட் ஃபுட் கேள்விப்பட்டுருப்பீர்கள். தஞ்சை மெடிக்கல் ஏரியாவில் பத்தடிக்கு ஒரு கடை என்றளவில் ஒரு ஸ்ட்ரீட்ஃபுட் கல்ச்சர் வேகவைத்த முட்டை. ஒரு இட்லி குண்டான், அதனுள்ளே சூடான வேகவைத்த முட்டைகள், எக்சிபிஷனில் வாங்கிய ஸ்லைசர் இதான் முதலீடு. 1 ரூபாய் கொடுத்தால் அவிச்ச முட்டையை ஸ்லைஸ் செய்து, அட்டகாசமான ஒரு ஜீரகப்பொடி,உப்பு,காரப்பொடி கலவையை தூவி, தினத்தந்தி பேப்பரில் (அதிர்ஷ்டம் இருந்தால் முட்டை சாப்பிட்டுக்கொண்டே ஆண்டியார் படிக்கலாம்) தருவதை, ஆவலாதி கொட்டிக்கொண்டு நெஞ்சுக்குழி பொசுக்க விழுங்கினால் ம்ம்ம் டிவைன். புதுக்கோட்டைக்கு ஜாகை மாறிய பிறகு அக்கவுண்ட் வைத்து முட்டை மாஸ் சாப்பிடுமளவுக்கு வெறி அதிகமாகிவிட்டது. தட்ஸ் அ டெலிகசி..

இப்படியாப்பட்ட எகிடேரியனான நான், ப்யூர் வெஜிட்டேரியன் சகதர்மிணியை மணந்தபோது வாரம் ஒருமுறை பியர், தோணும்போதெல்லாம் முட்டை என ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டேன். சில அமெண்ட்மெண்ட்டுகளுடன் அதையேற்ற மனைவி அதற்காகவே, பழைய ஈயம் பித்தளைக்கு போடவேண்டிய கோட்டிங் போன கடாய், ஹேண்டில் உடைந்த தோசைக்கல் என முட்டை தளிகைக்கு தள்ளிவிட்டுவிடுவாள். நானும் ‘என் முட்டை என் உரிமை, ஜூஸ் கொடுப்பாங்க குடிக்காதீங்க, டின் பியர் குடிங்க’ என இளையதிலகமாய் வெள்ளி இரவு என் உரிமையை நிலைநாட்டுவேன். மனைவி இல்லாத பொழுதில் நண்பர்கள் ‘அளவளாவ’ கூடுகையில், இந்த இத்துபோன சட்டியில் எப்படி எக்புர்ஜி செய்யற என ‘நாட் ஹேப்பனிங். டெல் மீ ஹவ் டூ யூஸ் திஸ்’ என அமிதாப் போல் கேட்பார்கள். “ஈசி அங்கிள், இங்க புடிச்சுக்கனும்” என ஆம்லட்டை வாகாய் திருப்ப “ஸ்ரீராம் சர்” என வியந்துபோவார்கள்.

மகளின் கதை வேறுவிதம். பாப்பா பிறந்து 18 மாதம் வரை ”அடடே இதான் குழந்தைய வளர்க்கறதா? ஈசியா இருக்கறதே” என நினைக்க, அதுவரை ஆன்சைட் ட்ரிப்பில் இருந்த அம்மா, மாமியார் எல்லாம் திரும்பிப்போக, இருவரும் வேலைக்கு போவதால் டே கேருக்கு அனுப்பவேண்டிய சூழ்நிலை. டேகேரில் காலை உணவிலிருந்து, மதிய உணவு, மாலை ஸ்னாக்ஸ் வரை அவர்களே தந்துவிடுவர். “எங்களின் மெனு இதுதான். சரியா இல்லன்னா நீங்க கொடுத்துவிடுங்க. உங்க ஃபுட் எங்களுக்கு தெரியாது” எனசொல்ல, “உங்களுக்கு என் வைஃப் பத்தி தெரியாது” என அவர்களின் மெனுவுக்கே ஒத்துக்கொண்டேன். சரி உங்கள் மெனுவை காட்டுங்கள் என வாங்கிப்பார்த்தால், டர்க்கி திங்கள், சிக்கன் செவ்வாய், காவிய புதன் என முனியாண்டி விலாஸ் மெனுகார்டை நீட்டினார்கள். காலை ஏழரைக்கு கிளம்புகையில் எதுக்கு ஏழரை என அவர்களின் மெனுவுக்கு ஓகே சொன்னோம்.

டே கேரில் ஒரு வினோத வழக்கம். உணவு கொடுத்துவிட்டு குழந்தைகள் வாயை துடைத்துவிட மாட்டார்கள். அது இன்ஃபக்‌ஷன் ஆகிவிடுமாம். பாப்பா மீட்பால்ஸ் சாப்பிட்ட வாயோடு மாலை எங்களுக்காக காத்திருப்பாள். ஒரு கட்டத்தில் பாப்பா மண்டையை முகர்ந்து பார்த்தே ”இன்னிக்கு கோபால் கடை கேட் ஃபிஷ்ஷா, எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தியா” என எங்களை நாங்களே தட்டிக்கொடுத்து கொள்வோம். இது ஒருவிதத்தில் குழந்தை வளர வளர உபயோகமானது. எங்காவது பிக்னிக், சுற்றுலா போன இடத்தில் நாங்கள் “எக்கூஸ் மீ சார், திஸ் ஹாஸ் மீட்? நோ சாசேஜ், போர்க், சிக்கன், பீஃப், மட்டன், ஃபிஷ் சாஸ்” என கடைக்காரனை காண்டாக்கி கொண்டிருக்கையில், குஷி சிம்பிளாய் ஒரு தள்ளுவண்டி hot dog உடன் செட்டிலாகி விடுவாள்.

ஹாஸ்யமாய் சொன்னாலும், எங்கள் முடிவு அல்லது உணவு சுதந்திரத்துக்கு பின்னால் ஒரு காரணம் உண்டு. குழந்தை இங்கு வளர்கிறவள். கல்லூரி,வேலைக்கு போகப்போகிறவள். ஆபீசில் கும்பலாய் ஒரு Brazilian Steak house, Asian buffetக்கு போகையில், எங்களை போல அங்கு வெஜ்ஜி ஃபுட் கிடைக்குமா,  வேறு இடம் போகலாமே என மற்றவர்களுக்கும் இடைஞ்சலாய் இருக்கும் நிலை வேண்டா. டிஸ்னிலேண்டில் களைத்துச்சுற்றி அமர்கையில் காய்ந்த சீஸ் பீட்சாவோடு பசியாறும் நிலை வேண்டா. மெக்டொனால்ட்ஸ் போன்ற இடங்களில் உருளை ஃப்ரைஸ் தவிர வேறெதும் உண்ண முடியாத நிலை வேண்டா.

மேற்கத்திய உலகில் முழு வெஜிடேரியனாக இருப்பதும் அத்தனை எளிதல்ல. நீங்கள் தேர்வு செய்து சாப்பிடும் சைவ உணவு, எதில் பொறிக்கப்பட்டிருக்கிறது, வெஜி சூப்பின் ஸ்டாக் என்ன, உங்கள் வெஜி செஷ்வானில் ஃபிஷ் சாஸ் உண்டா என ரிஷிமூலம் தேட ஆரம்பித்தால் நீங்கள் எதிர்ப்பார்க்கும் பதில்கள் வரா. பல இடங்களில் "Don't ask Don't tell" தான். ஆனால், மேற்கத்திய உலகம் வெஜிடேரியனிசத்தை மெல்ல அணைத்துக்கொண்டே வருவதையும் பார்க்க முடிகிறது. 2002இல் நான் அமெரிக்கா வந்தபோது இருந்த நிலை இன்றில்லை. ஒரு 8 பக்க மெனுவில் 4 ஐட்டங்களாவது பச்சையில் “Vegan" என குறிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

எது எப்படியோ, வெஜிடேரியனிசம் என்பது என் மகளின் தேர்வாய் இருக்க வேண்டும். எங்களின் அவளுக்கான தேர்வாய் அல்ல. அவள் வளர்ந்த பின் வெஜிடேரியனாய் மாறினால் சந்தோஷமே. மாறாவிட்டாலும் பிரச்சனையில்லை.

எனக்கு அவளின் இயல்பு வாழ்க்கை முக்கியம். அவள் தெரிவுகள் முக்கியம். உணவுப்பழக்கங்கள் அவளை எந்த இடத்திலும் கட்டுப்படுத்தக்கூடாது.

அதற்கு சிறிது பட்டர்சிக்கனை பொறுத்து கொள்ளலாம்.


+++++++++++++

Friday, April 24, 2015

கற்றதனால் ஆய பயன்





”பாலகுமாரன்”

தெளிவான, கனகச்சிதமான குரல்.

அவர் தொலைபேசியை எடுக்கவில்லை, வாய்ஸ்மெயிலுக்கான ஒலிப்பதிவேற்ற பெயர் ஒலிக்கிறது என்றே நினைத்தேன். மெசேஜ் விடலாமா, கேட்பாரா, யாரென புரியுமா..

“பாலகுமாரன்..சொல்லுங்க யாரு?”

அவர் தான் பேசுகிறார் எனத்தெரிந்து என் பதற்றம் இன்னமும் அதிகமானது. இரு நண்பர்கள் மூலம் அவரை சந்திக்கலாமா என அனுகியிருந்ததால் சட்டென யாரென புரிந்து கொண்டார்.

“நாளைக்கு ஒரு 11.30 மணி வாக்குல வாங்களேன்..ரைட்டு”

சரி.

என்ன ஒரு இருபது வருடங்களாக அவரை வாசிக்கிறேனா? கல்லூரி சமயத்தில் சென்னை நகர்ந்து, வேலை சேர்ந்து, பின் திரைகடலோடி 3 வருடங்களுக்கொரு முறை சென்னைக்கு அவர் வீட்டிற்கு அடுத்த தெருவுக்கே வந்தாலும், அவரை ஒருபொழுதும் சந்திக்க முயன்றதில்லை.

பல காரணங்கள். தயக்கங்கள். எழுத்தாளனை வாசகன் சந்தித்தேயாக வேண்டும் என்பதில்லை. படைப்பின் மூலமாகவே உரையாடல் நிகழ்ந்துவிடுகிறது என்ற கூற்று. அது சரியே. அடுத்து பலர் என்னிடம் சொன்னது “நீ வைத்திருக்கும் பிம்பம் நிச்சயம் உடையும்” அதுவும் சரியாக இருக்கலாம். “எதையும் எதிர்ப்பார்க்காதே, எதற்கும் தயாராகவே இரு”.

எல்லாவற்றுக்கும் தயாராகவே போனேன். காலையில் க்ரோம்பேட்டை போய்விட்டு நேராய் அவர் வீட்டுக்கு போவதாய் திட்டம். 7.30க்கு வரவேண்டிய சாரதி எட்டரைக்கு டாண் என ஆஜர். போன இடத்திலும் தாமதமாக, சனிக்கிழமையன்றும் டிராஃபிக் நெட்டித்தள்ள, பாலாஜி ஸ்ரீனிவாசன் அவர்களிடமிருந்து அழைப்பு. அவர் கூட போவதாய் தான் திட்டம்.

“லேட்டாறதான்னா அவரை கூப்பிட்டு சொல்லிடுங்க. பெட்டர்”. Made sense.

கூப்பிட்டு சொன்னேன். புரிந்துகொண்டு, பரவாயில்லையெனவும் நிம்மதி. நடுவில் பழம் வாங்க நிறுத்தல், பாலாஜியின் சிறுகுழந்தைக்கு போக்குக்காட்டி அவரையும் அழைத்துக்கொண்டு பாலகுமாரன் வீட்டின் முன் நிற்கும்போது நல்ல தாமதம். தப்பு மகா தப்பு என இப்போது புரிகிறது.

பதட்டத்தோடு பாலாஜியை தொடர்ந்து படியேறுகிறேன். வீட்டு ஓனர்ஸ் பெயர்ப்பலகையில் பாலகுமாரன். வீட்டுக்குள் நுழைகிறேன். அது அதன் மனிதர்களோடு, அதன் வாசனையோடு, அதன் இயல்பில் இருக்கிறது. என்னை “யார் புதுசாய்” என்பது போல் பார்க்கிறது.

எத்தனை கட்டுரைகளில் வந்த வீடு? எத்தனை படங்களில் பார்த்த வரவேற்பறை? ஒரு திரைப்படத்தையோ, வீடியோ கேமையோ பார்த்துக்கொண்டிருக்கையில், சடாரென நாமும் அக்காட்சிக்கு நடுவிலேயே நுழைந்துவிட்டது போல மனதில் தோன்றுகிறது. சுற்றும் முற்றும் ஆச்சர்யமாய் பார்க்கிறேன். பாலாஜி என் பதட்டத்தை தணிக்கும் வகையில் “உக்காரு உக்காரு” என கைக்காட்டுகிறார்.

பாலகுமாரன் அவர்கள் என் கண்ணில் படவில்லை.

“தூங்கறார்” என்கிறார் ஷாந்தாம்மா. ஒரு வினாடி திக். என்னுது கைக்கெட்டியது வாய்க்கெட்டாத ஜாதகம் என்பதால் வாய்ப்பு நழுவிவிடுமோ என பயம். ”ஆனா வந்தா எழுப்ப சொன்னார்” என உடனே என் பதட்டமறிந்து சொல்கிறார். அவரின் செல்ல தாரிணிப்பாப்பா என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு அவள் அன்னையோடு வெளியே கிளம்பினாள். ‘உன்னை தெரியும்டி செல்லம் எனக்கு’ என சொல்ல எத்தனித்து சொல்லவில்லை. சோபாவில் நாசூக்காய் அமர்கிறேன். என் எதிரே அவரின் பல புகைப்படங்களில் தெரிவது போன்ற அலமாரி அமைப்பு, பலதரப்பட்ட கேடயங்கள், புத்தகங்கள். நடுநாயகமாய் யோகி, பல கடவுளர், குடும்பத்தினர் புகைப்படங்கள். எனக்கு பின்னால் டைனிங் அறை. ஷாந்தாம்மா ஏதோ செய்கிறார். எதிரில் இரு படுக்கையறை இருப்பது போன்ற அமைப்பு.

திடீரென அந்த அறைகளில் ஒன்றிலிருந்து வருகிறார். அவரின் ப்ரத்யேக வெள்ளை வெளேரென்ற வேட்டி,சட்டை. புகைப்படத்தை விட நேரில் வெகு தேஜஸாய் கம்பீரமாய் இருக்கிறார். அவசரமாய் எழுகிறேன். வணக்கம் என்பது போல் பணிவுடன் ஏதோ செய்கிறேன். ஒரு மென்புன்னகையோடு அமரச்சொல்கிறார். பாலாஜி பக்கம் திரும்புகிறார்.

“ரொம்ப நாளாச்சுல்ல நாம பார்த்தே”

“கல்யாணத்தப்ப பார்த்தது”

“எப்படி நடந்துது, உனக்கென்ன பட்டது?”

“நான் எதிர்ப்பார்த்ததுக்கு நீங்க ரொம்பவே ஆக்டிவா இருந்தீங்க”

பாலாஜி சமர்த்தர். இது அவரின் சம்பாஷணைக்கான நேரமல்ல என உணர்ந்து என்னை அறிமுகம் செய்து வைக்கிறார். நானும் உரையாடலில் நுழைகிறேன். சூர்யா திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

“ஒன்னு சொல்லனும். பையன் கல்யாணத்துக்கு அப்புறம் பெரிய ரிலீஃப் தெரியுது உங்கக்கிட்ட. முகத்துல களைப்பு நீங்கி ரிலாக்ஸ்டா..”

என்ன உரிமையில் இதை முதலிலேயே சொன்னேன் என தெரியவில்லை. எனக்கு அவையஞ்சுதல் உண்டு. அதை அவையடக்கம் என்ற பெயரில் மறைத்துக்கொள்வேன். அதை நானே வலிந்து முறியடிக்க ஒரு உரையாடலின் ஆரம்பித்திலேயே ஐஸ்ப்ரேக்கிங் போல் எதையாவது சொல்லிவிடுவேன். இதொரு அலுவலக மீட்டிங் உத்தி.

இப்போது தான் பாலகுமாரன் மெல்ல என்னை அவதானிக்கிறார். ஆழமாய் பார்க்கிறார். வாழ்நாள் முழுதும் எத்தனையோ பேரையோ சந்தித்து, அது தந்த அனுபவத்தில் இவன் தேறுவானா என என்னை கணக்கிடுவது போல் எனக்கு தோன்றுகிறது.

“ஆமா அது உண்மை தான். பெரிய ரிலீஃப் தான் அது முடிஞ்சது”

பல பேட்டிகளில் கேட்ட, கண்ட அதே கனமான, எதையோ கடித்துக்கொண்டு பேசுவது போன்ற த்வனி.

பாலகுமாரன். என்னோடு. பேசி. கொண்டிருக்கிறார். நம்ப. முடியவில்லை.

ஷாந்தாம்மா பழரசம் கொண்டு வருகிறார். “என் வைஃப்” என அறிமுகப்படுத்தினார். மணமக்கள் எங்கு செட்டில் ஆகியிருக்கிறார்கள் என அபத்தமாய் கேட்டேன். “தோ எதுத்த ஃப்ளாட் தான்” என சிரித்தார்.

“என்னுதுல்லாம் படிச்சிருக்கீங்களா, என்னை யாருன்னு?” அடுத்த அபத்த கேள்வி.

“தெரியும் ’ரசனை’ ஸ்ரீராம், நிறைய பார்த்துருக்கேனே”

எனக்கு பயம் கொஞ்சம் விலகிவிட்டது. உரையாடல் நின்றுவிடக்கூடாதே என சற்றே தந்திரமும் எட்டிப்பார்த்தது. பாலகுமாரன் சொல்வது போல் இங்கு எல்லாமே தந்திரம். எழுத்து உட்பட.

அவரின் எழுத்தை படிக்க ஆரம்பித்த நண்பன் வீட்டு “தலையணை பூக்கள்” வாரமலர் பைண்டிங், தொடர்கதையாக தாயுமானவன், பயணிகள் கவனிக்கவும் வாசித்தது, பள்ளியிறுதி லீவில் பழைய புத்தக கடைகளில் தேடித்தேடி பல்சுவை நாவல் சேகரித்தது, கல்லூரி காலத்தில் லெண்டிங் லைப்ரரியில் பழியாய் கிடந்தது, எனக்கு மிகவும் பிடித்த ‘கடலோர குருவிகள்’..எல்லாம் இதே போல் வேகமாய் சொன்னேன்.

“புரியறது..அந்த வயசுல அப்படித்தான் தோணும்”

ஒரே வரியில் அத்தனை பாராட்டுக்களையும் ஏற்று, ‘அதற்கு நான் காரணமல்ல’ என்பதை போலியான அடக்கமின்றி, சரியான சொற்களால் மென்மையாய் மறுதலித்து முடித்துக்கொண்டார்.

பேச்சை என் பக்கம் திருப்பினார். ”டொராண்ட்டோ ஊர் எப்படி”, “ஒரு குழந்தையா” “அங்க லைஃப் எப்படி?” “நம்மாட்கள் நிறைய இருக்காங்களா?” ”இலங்கைத்தமிழர்கள் நிறையல்ல” பலதும் கேட்டறிந்தார். நிறைய சொன்னேன். இப்போது யோசித்தால் நிறைய உளறியிருக்கிறேன். என்னை பேசவிட்டு பார்த்தார்.

இந்த முக்கியமான கேள்வியையும் கேட்டுவிட்டு என் முகம் பார்த்தார்.

“இங்க திரும்பி வர்றதுக்கான ஏக்கம் இருக்கா உங்களுக்கு?”

என் பேச்சு சட்டென நின்றது. இதற்கான சரியான பதிலை சொல்லத்தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் எனை நானே கேட்கும் கேள்வியல்லவா இது. ”வந்திருவேன் சார். பொண்ணை காலேஜ்ல தள்ற வரைக்கும் அங்க இருந்துட்டு இங்க வந்துருவேன் சார்” என்றேன். மென்மையாக சிரித்தார்.

“ஏய்ய், 2 நாளா போராடி சிக்கை எடுத்துட்டேன் பாருங்க”

அவர் உதவியாளர் பாக்யலட்சுமி அங்கிருப்பதை அப்போது தான் கவனித்தேன். ஒரு chimeஇன் சிக்குகளை விடுவித்துக்கொண்டிருந்தவர். அவர் வேலை கெடுகிறதோ? முதலில் தூக்கத்தை கெடுத்தோம்.

“சரி நான் கெளம்பறேன் சார்”

சந்திப்பில் முடிவில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நோக்கம் இருந்தது. என்னை அவரருகில் அமரச்செய்தார். புரிந்து பாலாஜி என் ஃபோனை வாங்கிக்கொண்டார். பாக்யலட்சுமியை திரும்பிப்பார்த்து என்னவோ சொன்னார். உள்ளேயிருந்து எனக்கு கொடுக்க புத்தகம் வந்தது.




”சார் உங்க கையெழுத்தும் வேணும் அதுல”

”எதுக்கு ஸ்ரீராம்” என எழுத ஆரம்பித்தார். சற்று நேரம் எடுத்துக்கொண்டது போல் தோன்றியது. முடித்துவிட்டு பார்த்தால் ஒன்றில் குதிரைப்படம். எனக்கு மிகவும் பிடித்த குதிரையை எப்படி வரைந்தார் என்ற வியப்பெனக்கு. தர்க்க அறிவு தாண்டிய விஷயமாய் உணர்ந்த தருணம் அது. இன்னொரு புத்தகத்தில் கையெழுத்திட்டு ஒரு மலையடிவார கோவில். அதற்கு அர்த்தம் கேட்க தோன்றவில்லை. வாழ்வில் சில விஷயங்களுக்கு உடனடி விளக்கம் கிடையாது. ஒருநாள் புரியக்கூடும்.





சந்தோஷமாய் என்னை அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள செய்தார். என் குரு அவர் குருவின் புகைப்படத்துக்கு முன் நிற்கவைத்தும் புகைப்படம் எடுத்தார். நமஸ்கரித்தேன். அவர் கையை பிடிக்கத்தோன்றியது. கையை குறிப்பாய் நாடியை, உள்ளங்கையை பிடித்து மெல்ல அழுத்தினார். அத்தனை மிருதுவான பிடி. அதன் உட்கூறு என்ன தெரியாது. ஆனால் சற்றே நெகிழ்ந்திருந்த என்னை ’ரிலாக்ஸ்’ என ஆசுவாசப்படுத்தியது போல் இருந்தது.

பாலகுமாரனை நான் ஒரு உயரத்தில் வைத்து கும்பிட ஆசைப்படவில்லை. இதை எழுதும் தருணத்திலும் “’பாலகுமாரன் அவர்களை’ன்னு போடு, ’குரு’ என எழுது” என மனது கட்டளையிட்டாலும் பாலகுமாரன் என பெயர் விளிக்கிறேன். Because, he's a friend more than anything.

புதிய கல்லூரி, தெரியாத ஊர், +2வில் நினைத்த மார்க் வராததிலிருந்து அப்பாவோடு உரசல்கள், என்னை, என் தன்னம்பிக்கையை உருக்குலைத்துக் கொண்டிருந்த ஒரு நோய்ம்மை, படிச்சாலும் மார்க் வரலை எதுக்கு படிக்கனும் என குழம்பிய மனது, வயதுக்கே உரிய மனவிகாரங்கள், வீட்டின் சில தொடர்நெருக்கடிகள்,சாவுகள், நல்ல பேண்ட் சட்டை கிடையாது, நல்ல நட்பு கிடையாது என துன்ப வருடங்கள் அப்போது. அப்போது என் கைப்பிடித்து அழைத்துச்சென்றது பாலகுமாரன்.

பாலகுமாரனுக்கு எல்லாம் எழுத வரும். காதல், ஒரு பதின்ம வயது இளைஞனை மூழ்கடிக்கும் காமம், கம்யூனிசம், சமூகக்கோபம் என எல்லாம் எழுதவரும். அதோடு போயிருக்கலாம். கைப்பிடித்து இதான் வாழ்க்கை, உன்னோடு பேசு, செய்வது சரியா என நீயே கேட்டுணர், உழைத்தால் தான் எதுவும் சாத்தியம், கற்பனையில் மூழ்குவதில் பயனில்லை. ரௌத்திரம் பழகு, கோபத்தை வைராக்கியமாய் மாற்று என சொல்லவேண்டிய தேவையில்லை. சொல்லாவிட்டாலும் அவரை கொண்டாடியிருப்பார்கள். எழுத்து அப்படி. ஆனால் எதற்கோ சொன்னார்.

இன்று நம்மில் பலரும் நகர்ந்துவிட்டோம். சுஜாதா, பாலகுமாரனில் தேங்காமல் அடுத்து பலதும் படிக்கிறோம் என்கிறோம். விமர்சிக்கிறோம். ஆனால், நம்மில் பலரை வாசிப்பு சிலேட்டில் கைப்பிடித்து ’அ’ போட வைத்தவர். வாழ்வென்னும் பெருங்கடலில் ‘கடலோர குருவிகள்’ முட்டையாய் அடித்துச்செல்லப்பட்டு கொண்டிருக்கையில், சரக்கென்று ஒரு கைப்பிடித்து கரையேற்றியவர்.

இந்த நன்றி மட்டுமே நிரந்தரம். அவரிடம் கற்றதனால் ஆய பயன். நான் செய்தது எனக்கான, சுயநலமான நன்றி நவிலல். It's a thanksgiving.

”அவர் இல்லன்னா என்னவா ஆகியிருப்பேன்” தெரியாது.
ஆனால் இப்போதிருக்கும் வாழ்க்கையாய் மட்டும் அது இருந்திருக்காது என்பது மட்டும் தெரியும்.

வெளியே வந்ததும் பாலாஜி “திருப்தியா” என்றார்.

பரம.

++++++++++++


Saturday, April 18, 2015

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை




ஊர் கிளம்பும் நாள் ஒரு கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் போல தான். அத்தனை ஓட்டம் இருக்கும்.

குறிப்பாய் ஸ்வீட்ஸ் வாங்குதல் கடைசிநாள் சம்பிரதாயம். அப்போது தான் முடிந்தவரை அதன் லைஃபை நீட்டிக்கலாம். இதயம் நல்லெண்ணெய் போல் பாரியாள் மறக்காமல் வாங்கிவரச் சொன்ன சில இனிப்புகளுக்காக ஸ்ரீமித்தாய், கிருஷ்ணா,அதென்ன ஏ ஸ்கொயர் + பீ ஸ்கொயர் இல்லை A2B என புகுந்து புறப்படல்.

”அது 850 சார் கிலோ”
“இது?”
“960”
“ஓ இது?”
“1100”
கடைசி பதில் நீ வாங்குவியா என்ற பார்வையோடு.

எனக்கு விலை ஒரு கிலோவுக்கு சொல்கிறானா, இல்ல கல்யாண ஆர்டருக்கு சொல்கிறானா என சம்சயம். ஒரு கிலோ ஸ்வீட் எப்போ 1000 ரூபா ஆச்சு? நூறுகிராம் மிக்சர் எப்போது விலை 120 ரூபா ஆச்சு?

எனக்கு இந்திய விலைவாசி சத்தியமாய் புரியவில்லை.

3 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறேன் தான். பணவீக்கம்,விலைவாசி ஏற்றம் எல்லாம் உண்டு தான். ஆனால் விலைவாசி என்னவோ எக்கச்சக்கத்துக்கு ஏறியது போல் தோன்றுகிறது. அதுவும் குறிப்பாய் சென்னை ஒரு தனி உலகமாய் இயங்குகிறது.

ஒரே ப்ராண்ட் சோப்போ, ஷாம்ப்பூவோ, டிவியோ, காரோ, செல்ஃபோனோ, கோக்ககோலாவோ வெளிநாட்டை விட இந்தியாவில் விலை அதிகம். ஒரு டாலர் = 60 ரூபாய் என இருந்தாலும், ஒரு டாலர் அல்லது 60 ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஒரு பொருள் சமமாகவும், அல்லது இந்தியாவில் காஸ்ட்லியாக படுகிறது. அமெரிக்காவில் ஓரளவு வளர்ந்த ஒரு நகரத்தில் தோட்டம்,துரவுடன் தனிவீடு 250,000 டாலருக்கு வாங்கிவிடலாம். இங்கு 3BHK 1.5 க்ரோர் என்கிறார்கள்.

குறிப்பாய் சர்வீசஸ் துறை தான் இன்னமும் ஆச்சர்யம். அப்பா சென்னைக்கு ரயில் டிக்கட்டுக்காக முட்டி மோதிக்கொண்டிருந்தார். ரயில் டிக்கட் வாங்குவதை ஸ்ட்ராடஜி போட்டு 3 மாதங்களுக்கு முன்பே ஒரு குழுவாக என் அப்பா,பெரியப்பாக்கள் செய்கிறார்கள். ஏம்ப்பா, ஆம்னி பஸ்ல போகமுடியாதா? ஒருத்தருக்கு ஆயிரம் ரூபா கேப்பாம்ப்பா, அதும் வீக்கெண்டுன்னா இன்னும் மேல. ரயில் தான் சௌரியம்+சீப் என்கிறார். சென்னை - திருச்சி வெறும் டோல் மட்டும் 450 ரூபாய். நான் அப்போது 45 ரூபாய்க்கு சென்னையிலிருந்து போவேன். வாஷிங்டன் ஒபாமா வீட்டருகில் உள்ள மாரியாட்டில் 50$க்கு ஒரு ரூம் எடுக்கமுடியும். சென்னையில் பாடாவதி ஹோட்டலிலும் 3000 ரூபாய்.

வந்து இறங்கிய அன்று வெறுமன 2 இட்லி வடை,காப்பி சாப்பிட்டேன். 100 ரூபாய் ஒரு சாதாரணமான ஹைவே ஹோட்டலில். தங்கை மருமகன் நெய்ரோஸ்ட்டை மீதம் வைத்தால் அப்பாவுக்கு கோபம் வருகிறது. 200 ரூபாப்பா என அங்கலாய்க்கிறார். இதுவே ஒரு நல்ல பஃபே என்றால் ஈச் 1500 + வாட் + சர்வீஸ் டாக்ஸ் என்கிறார்கள். என் ஊரில் 8 டாலருக்கு 40 ஐட்டத்தோடு சாப்பாடு போடுவான். ஒரு டெம்போ ட்ராவலர் வைத்துக்கொண்டு 100-150 கிலோமீட்டர் போய்விட்டு வந்தால் 6000 காலி. காருக்கு டிரைவர் மட்டும் போட்டாலே ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 2000 ரூபாய். சலூனில் தாடி ட்ரிம்மிங்க்கு போனால் ‘சார் மசாஜ், ஃபேசியல்? ஒன்லி 2000 சார்’. ஒன்றுமில்லை, மதுரை கோவில் அருகே கட்டண கழிப்பிடத்தில் யூரின் தான்பா என்றால், நீ ஃபாரினுக்கு வேண்ணாலும் போ, 10 ரூபா என்கிறார்கள். ஆத்திரத்தை மட்டும் அடக்கிக்கொண்டேன்.

ஃபாரின் என தெரிந்து கோவில் டொனேஷனுக்கு நீட்டுபவர்களுக்கு குறைந்தது ஆயிரம் போடாவிட்டால் மதிப்பில்லை. சிறப்பு தரிசனம் 150 சார். என்கிட்ட 1000 குடுங்கோ. நானே அழைச்சுட்டு போயி தரிசனம் செஞ்சுவைக்கிறேன். குட்டிப்பசங்களுக்கு 500 ரூபாய் வெச்சுக்கொடுத்தால் எடுபடுவதில்லை. ஆயிரமாவது கொடுத்தால் தான் ‘1000 பக்ஸ்’ என பசங்களிடம் சிரிப்பு எட்டிப்பார்க்கிறது. இதில் சில இடங்களில் தெரியாமல் கம்மியாய் கொடுத்துவிட்டோம் என பிறகு தான் உறைக்கிறது. லைனாய் அத்தை,பெரியம்மாக்களுக்கு புடவை வாங்கிக்கொடுக்கலாம் என்றால் என்ன 1000 ரூபாய்க்கு பார்க்கிற என்கிறார்கள். கூடிய சீக்கிரம் 1000 ரூபாய் 100 ரூபாய் ரேஞ்சில் புழங்கப்படுமென தோன்றுகிறது.

முன்பெல்லாம் இந்தியாவில் பணம் சேர்க்க, சொத்துவாங்க ஃபாரின் போகவேண்டியுள்ளது. இப்போது இந்தியாவில் செலவழிக்கவே ஃபாரின் போகவேண்டுமென நினைக்கிறேன்.

ஆனால் பொதுவாய் அங்கிருப்பவர்கள் இந்த விலைவாசியை கண்டுகொள்ளாது சுபிட்சமாய்த்தான் இருக்கிறார்கள். 3 டாஞ்சூர் ஆர்ட் 1L ஆச்சு என தன் வீட்டு ஹாலை காட்டுகிறார்கள். கிச்சன்லாம் Ikea இம்போர்ட்டட். 10 லாக்ஸ்ஆச்சு என்கிறான் கசின். என் பையன் ஸ்கூல் ஆட்டோவுக்கு மந்த்லி 9000 ஆகிறது என்கிறார்கள். இங்க டொனேஷன் கம்மி தான் என 75000 கட்டுகிறார்கள்.

கிளம்புமுன் ஒன்றுவிட்ட சகோதரன் ‘OMRல ஹீரநந்தானி 70L தான். நான் ஒன்னு போட்டுருக்கேன். நீயும் இன்வெஸ்ட் பண்றியா’ என்றான். என் வெஸ்ட்டை கழட்டி கோவில் வாசல்ல தான் உட்காரனும் என நினைத்துக்கொண்டேன்.

2002-ல் டெலிவரி மேனேஜர் அமெரிக்கா போறியா என்றபோது பல்லிளித்திருக்கப்படாது.

+++++++++++++

Tuesday, March 24, 2015

ரச(னை)வாதம் 03/24/2015


வண்ணதாசனை மிக தாமதமாய் தான் கண்டறிந்தேன். ஃபேஸ்புக் வாயிலாக. 

ஆனால் கல்யாண்ஜி என்னும் கவிஞரை தெரியும். அவர் கண்ணதாசா, வண்ணதாசா என பிறகே தெளிந்தேன். வண்ணதாசனின் ஃபேஸ்புக் படைப்புகளுக்கே பெரும் ரசிகன் நான். கவிதை ஃபார்மட்டில் எனக்கு பெரிய ஆழம் இல்லையெனினும், ஒரு கவிதையின் உயிர் பற்றி எனக்குள் ஒரு மானி உண்டு. அவ்வகையில் வண்ணதாசன் (கல்யாண்ஜி) கவிதைகள் நிரம்பவே பிடிக்கும். மனதையும் தைக்கும். ஒரு கணித சமன்பாடு போல் சொற்கச்சிதமும் கொண்டது.

சமீபத்தில் படித்த அவரின் சிறுகதை தொகுப்பு, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள். வெகு எளிய கதைகள், கதைமாந்தர்கள். 70/80கள் காலக்கட்டத்தில் சிறுநகர சூழலில் எழுதப்பட்டவை. சிறுநகர பின்னணியில் வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கதன் மேலும், குறிப்பாய் 80/90கள் காலக்கட்டத்தின் மீதும் பெரும் மயக்கம் உண்டு.

பத்தாவதுக்கு பாண்டி வீட்டில் படித்துக்கொண்டிருப்போம். அவன் அப்பா கவர்ன்மெண்ட் ஆபீஸ் வேலையை முடித்து,வீடு வந்து, கைகால் அலம்பி, சாப்பிட்டு,கொஞ்சம் ரேடியோ கேட்டு, ஈசிசேரில் சாய்வார். தெம்பிருந்தால் முனைக்கடை வரை போய் சொசைட்டி பால்கடையில் பணங்கல்கண்டு பால் சாப்பிட்டு, எங்களுக்கு தூக்கில் டீ வாங்கி வருவார். பின் தூங்கிவிடுவார். சுந்தரம் பதிவாய் “ச்சே ஜாலில்ல.. உங்கப்பாவுக்கு படிக்கவே வேணாம்ல” என்பான். வேலை, அப்ரைசல், EMI, அவசரம், ஓட்டமில்லாத எளிய வாழ்வு. வண்ணதாசனின் கதைகளும் அவ்வகையே. கடந்த 15 ஆண்டுகளில் நாம் வாழ்வை கடினமாக்கிக்கொண்டு விட்டோம் என தோன்றுகிறது.

எனக்கு அவர் கதைகளின் மூலம் கிடைத்த பெரிய revelation, ஒரு கதைக்கு கதை தேவையில்லை என்பதே. வளர்ந்த,வாழும் சூழலில் பெரும் சம்பவ வறட்சி கொண்ட நான், சிறுகதைகள் எழுத சம்பவங்களுக்கு அலைபாய்வேன். வண்ணதாசன் கதைகளில் பெரிய நீண்ட சம்பவங்களோ, O.Henry, Jeffrey Archer வகை முடிவுச்சுருக்குகளோ இல்லை. சில கதைகளில் கதைமாந்தரின் இயல்பையோ, சூழலையோ விளக்க வர்ணனைகள் நீள்வதாய் தோணலாம். ஆனால் கதை முடித்த தருணத்தில் அவையனைத்தும் relevant-ஆய் தோன்றும்.

’தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’ என்ற டைடிட்ல் கதையில் ஒரு அப்பா கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு மாமனார் வீட்டிற்கு போகிறான். அவனுக்கு அங்கு ஒரு நல்ல “வாங்க” கிடைப்பதில்லை. கொழுந்தியாள் முதற்கொண்டு “அக்கா வரல?” என்கிறார்கள். துணுக்குற்று திரும்ப வருகிறான். அவ்வளவே அவ்வளவு தான் கதை. ஆனால் அவன் கூடவே பயணிப்பது போல் ஒரு உணர்வு.

ஒரு கதையில், எப்போதும் ஃபேனை ஐந்தில் வைக்கச்சொல்கிறார் ஒரு அலுவலர். அடுத்ததில், பணம் வைத்த டிபன்பாக்சை அரசு அலுவலகத்தில் மறந்துவிட்டு இரவில் எடுக்க செல்கிறாள் ஒரு பெண். அவளுக்கு எதுவும் ஆவதில்லை. பணம் பத்திரமாக இருக்கிறது. அவள் பத்திரமாய் இருக்கிறாள். அந்நேரத்திலும் டைப் சத்தம் கேட்டு, அதை அடிப்பவர் வீட்டிற்கு போகவேண்டும் என நினைக்கிறாள். அவ்வளவே. ஆனால் இவற்றிலெல்லாம் ஒரு கதையை கண்டிருக்கிறார் வண்ணதாசன். வண்ணதாசன் கதைகளுக்கு Spoiler தரவே இயலாது போல.

பழம்புடவையை போர்த்திக்கொண்டு தூங்கும் ஒரு குடும்பத்தில், மனைவி முதன்முதலாய் ஒரு போர்வையை வாங்குகிறார். நாள் முழுவதும் அதை தன் கணவன் போர்த்திக்கொள்வதை பற்றி கற்பனை. அவனோ அன்று வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு அதை கொடுத்துவிடுகிறான். இதில் யார் சரி,தவறு, யார் நல்லவர் கெட்டவர்?

‘என் காதில் விழுவதை சொல்கிறேன். சொல்வதை பாசாங்கின்றி சொல்வதே என் தொடர்ந்த முயற்சியாய் இருக்கிறது’ என்கிறார் முன்னுரையில். அவர் முன்வைக்கும் உலகிலும், மனிதர்களிடத்தும் பாசாங்கில்லை.

வண்ணதாசனின் புகைப்படங்களை கண்டால் அவர் முகத்தில் ஒரு நிம்மதி தெரியும். அதை நமக்கும் கடத்த முடிவதே அவரின் பெரும் சாதனையாக இருக்கக்கூடும்.

+++++++++++++++++


தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்



Friday, March 20, 2015

சிறுகை அளாவிய கூழ்




வீட்டில் ஊர்ப்பட்ட அலமாரிகள். எல்லா அறையிலும் படுக்கைக்கு இருபுறம், உயரமாய், ட்ரெஸ்சரோடு சேர்ந்தது என. என் பெற்றோர் இங்கு வந்து தங்கிய போது உபயோகித்த அறையின் அலமாரிகளை ஒழித்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் விபூதி, டாபர் ஆம்லா கேசதைலம் வாசனை இன்னமும் அங்கங்கே.

அம்மாவின் படுக்கைக்கு பக்கத்தில் 2 ஷெல்ஃப் கொண்ட ஒரு சிறிய Nightstand உண்டு. மேல் அடுக்கில் சில காலாவதி மாத்திரை ஸ்ட்ரிப்புகள், மங்கையர் மலர்கள், அவள் விகடன் 30 வகை குழம்புவகைகள், ஒரு ரமணிசந்திரன், நீரிழவு நோயாளிகளுக்கான கையேடு என கலந்துக்கட்டி இருந்தது. எல்லாவற்றுக்கும் அடியில் ஒரு புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டது போல் சில அச்சடித்த காகிதங்கள். என்னவென்று குனிந்து படித்தேன்.

‘யம பயத்தை போக்கும் ஸ்லோகங்கள்’. கருடபுராணம் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்தது என தெரிந்தது.

ஒரு நிமிடம் சற்று தூக்கிவாரிப்போட்டது. எப்போது, எதற்காக இதெல்லாம் சொல்லஆரம்பித்தாள்?

அம்மா எளியவள். அவள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறவள் இல்லை. 3 குழந்தைகளை வளர்த்து, நாள்தோறும் சோறுபொங்கி, எப்போதேனும் LTC போய், 10 வருடம் படுக்கையில் இருந்த மாமியாருக்கு மலஜலம் துடைத்து, சற்று கடுமையான மாமனாரை சமாளித்து தன் காலத்தை ஓட்டியவள். அனு இருக்காளா, குஷி என்ன பண்றா, பேசச்சொல்லு, வீடு வாங்கறியா பார்த்து செய் என்பதோடு கடந்த 10 வருடங்களாக தொலைபேசி உரையாடல்கள் முடிந்துவிடும். ரொம்ப போனால் ஜெயா டிவியில் மார்கழி உத்சவம் பார்க்கச்சொல்வாள்.

அப்படி நிறைய பேசிய தருணங்கள் பெரும்பாலும் சண்டையாகவே இருந்திருக்கின்றன. சரிக்கு சமமாய், நம்மை விட அதிகமாய் உழைக்கும் மனைவியிடம் சத்தம்போட இயலுவதில்லை. அம்மாவிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு விடுகிறோம். இங்கு போனவருடம் வந்த போதும். உண்மையிலேயே உப்பு பெறாத விஷயம் தான். அம்மா பார்த்து பார்த்து சமைப்பதை நாங்கள் அக்கறையாய் உண்பதில்லையாம். பேச்சு வளர்ந்து எங்கோ வந்து நின்றது. அப்பா அமைதியாய் பார்த்துக்கொண்டு இருந்தார்.

தனியாய் கூப்பிட்டு “அம்மாவுக்கு முன்ன மாதிரி ஹெல்த் இல்லப்பா. ஷுகர்ங்கிறா, கொஞ்சம் நடந்தா உக்கார்றா, எங்க போனாலும் நான் வரலை கால் வலிக்கும்கிகிறா. அதனால கூட மூட் சேஞ்சஸ் இருக்கும்ப்பா. நம்மதான் பார்த்துப் போகனும். ஏதோ ஓடுதுன்னு வெச்சுக்கோயேன்” என்றார். அம்மாவின் வேலைக்கு போகும் ஆசையெல்லாம் நிறுத்தி முழுமையாக தன் ஆளுமையில் வைத்திருந்தவர். காலம் எல்லோரையும் கனிய வைக்கிறது.
அம்மாவுக்கு எங்கோ மனதின் ஆழத்தில் தன் உடல்நலத்தை பற்றி, தன் மாமியார் போல் தானும் ஆகிவிடுவோமா என பயம் வந்திருக்க வேண்டும். அந்த காகிதத்தை பார்த்ததிலிருந்து அம்மாவிடம் கத்துவது குறைந்து போயிருந்தது.

நேற்றுவரை திடமாய் எந்த முடிவும் இல்லை. ஆகஸ்ட்டில் ஒரு விசேஷத்துக்கு குடும்பத்தோடு போவதாகதான் ப்ளான். ஒரு சின்ன யோசனை மனதில் ஓடிக்கொண்டிருந்தது. மனைவியிடம் பகிர்ந்துகொள்ள அவள் என்னை விட ஆர்வமாய் இறங்கினாள். கூடவே ’பத்து நாளுக்கு மேல போகாத. பாப்பாவும் நானும் கஷ்டப்படுவோம்’. என்னென்னவோ தேடினாள். நானும். நான் குழப்பவாதி. ’எல்லாம் காஸ்ட்லியா வருதுடி’ என கிட்டத்தட்ட கைவிட்டேன். குஷி "போகலியா சாரிப்பா” என்றாள். அனு பொறுமையாய் தேடினாள். தொலைபேசினாள். பல தெரிவுகளை முன் வைத்தாள்.

ஏப்ரல் 2 அன்று என் அம்மாவின் பிறந்தநாளுக்காக யாருக்கும் சொல்லாமல், 14000 கிலோமீட்டர் 26 மணி நேரம் பாதி உலகம் பறந்து, அவள் முன் போய் நிற்கப்போகிறேன்.

எங்கள் சிறிய திருச்சி வீட்டில் அம்மா,அப்பா,இரு தங்கைகள் குடும்பம்,அவர்கள் கணவர்கள், குழந்தைகள்,மாமியார் என குழுமியிருக்கும் காலைவேளையில் போய் நிற்கையில் எப்படி என்னை எதிர்கொள்வார்கள் என இப்போதே மனது சிறகடிக்கிறது. எண்ணமே சந்தோஷத்தை தருகிறது.
அம்மா “ஏண்டா செலவழிச்சிண்டு வந்துருக்க” என கேட்கக்கூடும். என் மனமே ஒரு பக்கம் என்னத்துக்கு இந்த சர்ப்ரைஸ், டிராமா எல்லாம் என கேட்காமலில்லை.

குறைந்தபட்சம், நான் கூட இருக்கும் 10 நாட்கள் கருட புராணத்தை மறப்பாள் அல்லவா?

+++++++++++++

பி.கு: "மண் பார்த்து பொங்கியது பொங்கல் - வண்ண 
நிறம் பார்த்து பொங்கியது மனசு”

இந்த பதிவுக்கு பொருத்தமான படத்துக்கு யோசித்தேன். இந்த வீடியோவை விட பொருத்தமாக எதுவும் தோன்றவில்லை. என அதையே வைத்துவிட்டேன். இந்த விளம்பரம் மனதுக்கு அத்தனை நெருக்கம். ஒவ்வொரு தடவையும் இந்த வரி வரும்போது கண்கள் உகுக்கும்.

Friday, March 13, 2015

பாத்திரமறிந்து



தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் பாத்திரம் அலம்ப தொடங்கினான்.

என் சின்னவயதில் பெட்டிக்கடை வைத்து நாள்பூரா இலந்தவடை சாப்பிடவேண்டும் என்பதே என் career goal. அதைவிட்டால் பாலமித்ரா, அம்புலிமாமாவில் பூவண்ணன், அரு.ராமநாதன் பாணி கதாசிரியர் ஆகவேண்டும் என்பது அடுத்தது. அப்படி ஆகியிருந்தால் விக்கிரமாதித்தன் - வேதாளம் கதையை மேலேயுள்ள வரியில் தான் தொடங்கியிருப்பேன்.

அந்தளவுக்கு ஒரு தினசரி ஆக்ட்விட்டியாய் என் டிஎன்ஏவில் ஏறிவிட்டது. ஒரு நாவலில் பாலகுமாரன் ”தூங்கினா கனவுல பின்னாடி மரம் ஓடுது” என ஓட்டுநர் சொல்வதாய் சொல்வார். அது போல் கனவில் எல்லாம் சைஸ்வாரியாக ரகவாரியாக பாத்திரங்கள் வர ஆரம்பித்துவிட்டது. டிஷ்வாஷர் இருந்தாலும் அதென்னவோ ஆரம்பித்திலிருந்தே அதோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அதுவும் நம்மூர் சமையல் எண்ணெய்ப் பிசுக்கு பாத்திரங்களுக்கு டிஷ்வாசர் அவுட்புட் நம்மை துர்வாசர் ஆக்கிவிடும் என்பதால் நானே டிஷ்வாஷர்.

இந்த இடத்தில் என் வீட்டு கிட்சனை பற்றி ஒரு வார்த்தை. இருப்பது மூன்றே பேர். குழந்தை தயிர்சாதம், பருப்புசாதம் வேகவைத்த(அ)பச்சைக்காய்கறி மட்டுமே நம் உணவில் சாப்பிடுவாள். நோ காரம் சாம்பார்,குழம்பு இன்னபிற. வாரநாட்களில் டின்னருக்கு ஒரு பேட்டர்ன் வைத்திருக்கிறாள். பாட்டு கிளாஸ் முடிந்தால் பக்கத்தில் சப்வே, பரதம் முடிந்த அன்று பீட்சா என சிறு indulgenceகள். கிட்டத்தட்ட அதுக்காகவே கிளாஸுக்கு போகிறாள்.

நானும், மனைவியும் இன்னொரு விதம். ஃபுல்மீல்ஸ் என்பது வாரயிறுதிக்கென ஆகிவிட்டது. சமைப்பது என்பது “நாளைக்கு லன்ச்சுக்கு என்ன” என்ற கேள்விக்கு பதிலாக மட்டுமே. அதுவும் ஞாயிறு மாலை பல்க்காய் சமைத்துவிடுவது. காலையில் பதிவாய் ஓட்ஸ் கஞ்சி,வாழைப்பழம். மதியம் கொண்டு போன அரைகப் சாம்பார்சாத டப்பாவை கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய வைரமுத்துவின் மிடுக்கோடு கேஃப்டேரியாவுக்கு எடுத்துக்கொண்டுபோய், எனக்கு முன்பு சைனீஸ்காரன் நாறநாற விட்டுச்சென்ற மைக்ரோவேவில் மிகச்சரியாக ஒன்றரை நிமிடம் ஹீட் செய்து சீட்டிலேயே கம்ப்யூட்டரில் ஒரு கண்ணாய் ஸ்பூனால் முழுங்கிவிட்டால் 3 மணி காப்பி வரை தாங்கும். லன்ச்சுக்கு சப்பாத்தி செட்டாகாது. கையில் ஈஷிக்கொள்ளாமல் சப்பாத்தியை ஸ்பூன் போல் ஆக்கி, சன்னாவை முக்கி வாயில் சைடில் அதக்கிக்கொள்ளும் நார்த்தீஸ் கலை நமக்கு வரா. சப்பாத்தி குருமா சாப்பிட்ட ஒரு மதிய மீட்டிங் கைகுலுக்கலில் வெள்ளைக்காரன் “Wow you had curry food?" எனக்கேட்ட அன்று காசியில் கொத்தவரங்காய் விடுவது போல் சப்பாத்தி கொண்டுபோவதை நிறுத்தினேன். மனைவி எனக்கு சாதமே வேண்டாம் என ஒரு சாலட் இல்லை சூப்பில் பெரும்பாலும் ஓட்டிவிடுவாள்.

டின்னரை பற்றி பேசுவதற்கு முன் எங்கள் ஊரை (டொராண்ட்டோ) பற்றி ஒரு வார்த்தை. பார்க்க ரோடும், பில்டிங்கும் ஒரு ஃபாரின் எஃபக்ட்டோடு இருக்கும். ஆனா பக்கா லோக்கலு. ஊர்ப்பட்ட (வட/தென்) இந்திய உணவகங்கள், தமிழர் உணவகங்கள், சாட் கடைகள், சமோஸா/ஸ்வீட் கடைகள் என. குறிப்பாய் என் வீட்டிலிருந்து 3 கிமீ ரேடியஸ்சில் சரவணபவன், அஞ்சப்பரில் ஆரம்பித்து எக்கச்சக்க கடைகள். குஷியை ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கிளாஸுக்கு விட்டுவிட்டு பாய்ஸ் செந்தில் போல் எங்க என்ன கிடைக்கும் என டைரியில் குறித்துக்கொண்டு வாங்கிவர எனக்குத்தான் தெரியும். குறிப்பாய் பேட்டையில் ஒரு பஞ்சாபி உணவகத்தில் மிகச்சல்லீசான விலையில் தினமும் ஒரு டேக்-அவுட் டீல். 2$க்கு சன்னா பட்டூரா என்றால் ஆளுக்கொரு பூரியை ”ஷேரிங்..கேள்விப்பட்டதில்ல” என ஜோலியை முடிப்போம். இல்லை தோசைமாவு இருந்தால் வீட்டிலேயே ஆளுக்கு 3 தோசை. சட்னி கூட டப்பாவில் விற்பான்.

நிற்க, வீட்டில் சின்க்கில் எப்படி இத்தனை பாத்திரம் விழுகிறதென்பது கே.எஸ்.ரவிக்குமாருக்கே புரியாத புதிர். எனக்கு குழந்தையை கிளப்புதல் இன்னபிறவில் பெரிய பொறுமை இல்லாததால் கிச்சன் ட்யூட்டியை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டுள்ளேன். சமைக்கவும் பிடிக்கும். பைப்பை திறந்துவிட்டாலே “விடும்மா, டிஷஸ் நான் பண்ணிடுறேன்” என வந்துவிடுவேன் (அதற்காகத்தான் அவள் பைப்பையே திறக்கிறாள் என்றாலும்).

எனக்கு ஒரு காரியத்தில் செய்நேர்த்தி ரொம்ப முக்கியம். முதலில் கத்தி விஜய் போல் சின்க்கை மேலே,கீழே என ப்ளூப்ரிண்ட் பார்ப்பேன். எத்தனை பெரிய பாத்திரம், சிறிது, எவர்சில்வர், பீங்கான், ஸ்பூன், கரண்டி, கையைக்கிழிக்கும் கத்தி, கிரைண்டர் போன்ற ஸ்பெஷல் சாதாக்கள் எல்லாம் ஒரு பேட்ஸ்ட்மென் ஃபீல்டர்களை அவதானிப்பது போல் பார்த்துவைத்து கொள்வேன். ஏற்கனவே நேற்று அலம்பி காய்ந்த பாத்திரங்களை முதலில் அதது இருக்கும் இடங்களுக்கு கிச்சனின் 360 டிகிரியில் விரட்டுவேன். இந்த செஞ்சுரி அடித்த பேட்ஸ்மென் எந்தெந்த டைரக்‌ஷனில் அடித்தார் என மேப் போடுவார்களே, எனக்கும் அப்படி போட்டால் சுத்துப்பட்டு பதினெட்டு செல்ஃப்பும் காண்பிக்கும்.

அடுத்தது தேவையான டூல்ஸ். எனக்கு பிடித்த ப்ரெஷ் கைப்பிடியுள்ள பழைய பேனாவுக்கு மைபோடுவது போல் பின்னால் டிஷ் liquid ஊற்றிக்கொள்ளக்கூடியது. சிலக்கடினக்கறைகளுக்கு மெட்டல் ஸ்க்ரப். பிடித்த டிஷ் லிக்விட் பால்மோலிவ்க்காரனின் க்ரீன் ஆப்பிள் திரவம். வேறெதும் மனைவி வாங்கிவைத்தால் அறச்சீற்றத்தில் ”ஏம்மா இதுல நுரையே பொங்காதே” என அதற்கு பதிலாய் நான் பொங்கிவிடுவேன்.

சின்க்கில் பாத்திரத்தை sort செய்வது ஒரு கலை. தேய்க்கவேண்டியது எல்லாம் ஒரு பக்கம், அதில் இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதற்கு VIP பாஸ், சோப் போட்டு முடிந்து பிசுக்கு போக ஊறுபவை 300 ரூபா கூண்டுடிக்கெட், கரண்டி,ஸ்பூன் வகையறாக்களை ஒன்னுசேர்த்து ஒரு தர்ம தரிசனம், இவைகளை தண்ணியை திறந்துவிட்டு சோப்புபோக அலசி ஒரு “ஜருகண்டி ஜருகண்டி” என பாத்திரம் தேய்ப்பதும் ஒரு பெருமாள் சேவை. அலம்பிய பாத்திரங்களை அடுக்கிவைப்பதும் எனக்கு ராணுவ ஒழுங்கோடு இருக்கவேண்டும். எது உடனடியாய் தேவைப்படும், எது அடியில் போகலாம் என கவிழ்த்துப்போடுவதிலும் கணக்குப்போடுவேன். கப்பு போக கழுவிய கப்புகளின் கைப்பிடிகள் பரேடுக்கு தூக்கிக்கொண்டுநிற்கும் துப்பாக்கிகள் போல் ஒரே டைரக்‌ஷனில் நின்றால் தான் திருப்தி. பாத்திரம் தேய்ப்பதில் ப்ராசஸ் இம்ப்ரூவ்மெண்ட், CMM லெவல் 5, சிக்ஸ் சிக்மா, நக்மா வரைக்கும் கொண்டுவந்த முன்னோடி நான்.

அடுத்த முக்கியமான விஷயம் எண்டர்டெய்ன்மெண்ட். பாத்திரம் அலம்ப 400$க்கு Beats Studio Wireless headphones வாங்கிய ஆசாமி யா இட்ஸ் மீ. என்னனவோ wired headphoneகள் முயற்சித்து அது சின்க் கீழ் செல்ஃப் கைப்பிடியில் மாட்டி, ஃபோனில் தண்ணிபட்டு பேஜாராகி கடைசியாய் இதற்கு வந்தேன். முதலில் ஒரு நல்ல பெப்பியான ப்ளேலிஸ்ட்டை போட்டுக்கொள்வேன். பாத்திரம் தேய்க்க பாலமுரளி கிருஷ்ணாவோ, வானலிக்கு வாணிஜெயராமோ வேலைக்காவாது. நல்ல தரைக்குத்தாக விஜய் ஆண்டனி பாடல்களோ, “டங்காமாரி ஊதாரி”யோ தான் சரி. அதுவும் சுற்றி என்ன நடக்கிறதென்று தெரியாமல், காது பாட்டை கேட்க, கை பழகினவேலையை செய்ய, வாய் மைன்ட்வாய்சில் பாடுவதாய் நினைத்து சத்தமாய் “புட்டுக்கின நீ நாறி” பாட, “சத்தம் போடாத” எதிர்க்குரலை “என்னம்ம்மா” என 70 டெசிபல் எதிர்க்குரலில் அடக்கி, அடடா..சுக்ஹானுபவம்.

இப்படி ஒரு trance நிலையில் பாத்திரம் தேய்ப்பதால், மனைவி செய்யும் அழிச்சாட்டியங்களுக்கு அளவேயில்லை. முதலில் சின்க்கை பார்த்தால் சாதுவாய் ஏழெட்டு பாத்திரங்களுடன் “அடடே இதான் தண்டாலா..ஈசியா இருக்கறதே” என தோன்றும். ஆனால், பட்ஜெட் பத்மனாபனில் துவைத்த துணிகளை வேண்டுமென்றே விவேக் லாண்டிரிக்கு போடுவதை போல், எங்கிருந்துதான் பிடிப்பாளோ, சடசடவென ஃப்ரிட்ஜை ஒழித்து, செல்ஃபுகளை ஒழித்து, லன்ச்பாக்ஸ், ஓட்ஸ் கஞ்சி கலையங்கள், ஆங்காங்கே விட்டுவைத்த காபி மக்குகள் என ஒரு லோடு பாத்திரம் சேர்க்க எனக்கு ஆத்திரம் சேரும். அதையெல்லாம் பாத்திரத்தில் காட்டி அலாவுதீன் அற்புதவிளக்கை தேய்ப்பது போல் தேய்,தேய் என தேய்க்க ஒரு கட்டத்தில் பூதமே வந்துவிடும்.

இப்போதெல்லாம் நண்பர்கள் வீட்டில் கூட பார்ட்டியெல்லாம் முடிந்தபிறகு “ஏம்மா வீட்ல ஏதாச்சும் பாத்திரம் அலம்பனுமா, நான் பண்றேன்” என்று தன்னிசையாக சதையாடினால் மனைவி ஆடிவிடுகிறார்.  இதில் எப்போது பாத்திரம் அலம்பனும் என ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் வேறு உண்டு. குறிப்பாய் மற்றவர்களுக்கு முன் நான் செய்யப்படாது. போன வாரம் பக்கத்துவீட்டு அம்மா வந்து மனைவியோடு அரட்டை. லேசில் கிளம்புவதாயில்லை. எனக்கு அடுத்த வேலை இருந்ததால் (அடுத்த வேலைன்னா இதுபோல் ஃபேஸ்புக் வருவது) இது ஆவுறதில்ல என கேப்டன் தலையில் டார்ச்சோடு டெரரிஸ்ட் வேட்டைக்கு கிளம்புவது போல் ஹெட்ஃபோனோடு பாத்திரம் தேய்க்க ஆரம்பித்துவிட்டேன். கிளம்பியபிறகு “அவங்க முன்னாடி தான் இதெல்லாம் செய்யனுமா”. இச்சமயங்களில் “இந்த அப்பள கம்பெனில மாவு பிசையக்கூட எனக்கு உரிமையில்லையா” என தார்மீக கோபத்தை டப்பர்வேரில் காண்பிப்பேன்.

எல்லாம் முடிந்து, தொப்பலாய் தொப்பை நனைந்த பனியனோடு கையை துடைத்து எதேச்சையாக திரும்பிப்பார்க்க, அங்கு “போதும், வா” என்று கனிவாய் மனைவி பார்க்கும் ஒரு நொடி பார்வைக்காக..

இந்த கட்டுரையின் முதல்வரியை மறுபடியும் படியுங்கள்.

++++++++++++++

Sunday, March 1, 2015

இரவச்சம்



அப்படி போய் நின்றதில்லை இதுவரை. எல்லாம் ஒருவாய் காபிக்கான ஆசை, இல்லை ஓசி காப்பிக்கான ஆசை.

மெக்டொனால்ட்சில் ஒரு வாரத்துக்கு வசந்தகாலத்தை வரவேற்று எந்த நேரம் போனாலும், எத்தனை தடவை போனாலும் காப்பி இலவசம். பெயரளவில் வசந்தகாலம். காலமாற்றத்தில் முதுமையியல்புகள் தள்ளிப்போயிருப்பதை போல, இப்போதெல்லாம் ஃபிப்ரவரி, மார்ச் தான் பனிப்பொழிவு ஊரையே வெளுத்துக்கட்டுகிறது. வெள்ளைக்காடாய் ஊர்.

என்ன பெரிய காப்பி? இதென்ன தஞ்சாவூர் காபி பேலஸ் ஃபில்டர் காப்பியா? மொட்டைத்தண்ணியாய் ஒரு காபித்தண்ணி. என்னதான் கேட்டுவாங்கி அதில் கள்ளிச்சொட்டாய் 18% பால்கொழுப்புடன் க்ரீமர் சேர்த்தாலும், வள்ளுவன் சொல்லும் ‘தெண்ணீர் அடுபுற்கை’ தான்.

இந்த காப்பிக்கு பின்னான உளவியலும், வியாபாரமும் சற்று புரிந்தது. எப்போதுமே என்னால் வெறும் காப்பிக்காக போய் நிற்க முடிந்ததில்லை. மகளை மாலை பள்ளிவிட்டு அழைத்துக்கொண்டு வருகையில், எதிரில் மெக்டொனால்ட்ஸ் தெரியும். “ஏதும் சாப்பிடறியா” என நான் கேட்க காத்திருப்பாள். “ஃப்ரைஸ்” ”மஃபின்” “குக்கீஸ்” என எதுவோ ஒன்றை சொல்வாள். அதை வாங்கித்தந்துவிட்டு “One small coffee too" என ஓசிக்காப்பியை வாங்கிவருவது. இந்த ஒரு வார டேட்டாவை வைத்து, ஏதும் அவுட்சோர்சிங் கம்பெனியை வைத்து ஆஃப்ஷோரில் Campaign Analytics ஓட்டக்கூடும்.

நேற்று மாலை எங்கோ கிளம்புவதற்கு முன் எங்கோ கிளம்பினேன். ஆணுக்கு எப்போதுமே “ஒரு பத்து நிமிஷத்துல வந்துர்றேம்மா” எங்கோகிளம்புதல்கள் உண்டு. சனிக்கிழமை என்பதால் இருவருமே பின்மதியம் சற்று தூங்கி எழுந்திருந்தோம். வெறும் ரசம், வெண்டைக்காய்க்கே அசத்தியிருந்தது.

“டீ போடனுமா” நீ போடு என்பதே தன்னிலை, முன்னிலை, படர்க்கை எல்லாம் குழப்பி இப்படி வந்திருந்தது.

பொதுவாய் நான் தான் வீட்டில் காப்பியோ, டீயோ சேர்த்து போடுவது. என்னளவுக்கு அவளுக்கு பழக்கமில்லை. இல்லாமல் கூட இருந்துவிடுவாள். ”உனக்கு வேண்ணா போட்டுக்கோ” என்பது பத்து வருடத்தில் “எனக்கும் கொஞ்சம் போடு” என்பதில் நிற்கிறது.

“இல்ல 5 மணிக்குள்ள கடை சாத்திருவான். வெளில பார்த்துக்கறேன்”

போன வேலை முடிந்து, பக்கத்தில் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் பராக்கு பார்த்து, மெக்டொனால்ட்ஸ்க்கு வந்திருந்தேன். வேறெதும் வாங்குவதற்கில்லை. மாலை போகுமிடத்தில் டின்னர் உண்டு. மதியசோறு இன்னமும் செரித்திருக்கவில்லை.

“What would you like to have Sir"

"Just your small coffee" அவன் பின்னே ஒட்டியிருந்த ஓசிக்காப்பி அட்டையை மெல்ல கண்ணால் ஜாடை காட்டினேன்.

“Sure. How would you like to have it?"

"Just black" உன் பால்,சர்க்கரை எல்லாம் வேணாம் என ஓசிக்காப்பி என்றாலும் என்னாலான பெருந்தன்மை.

அனு ஏதும் குடித்திருக்க மாட்டாள்.

“Wait..Can I have 1 more coffee for my wife?"

இங்கு மனைவிக்கு என்பது தேவையே இல்லாதது என்பது சொன்னபிறகே உறைத்தது.

“..Sure. How would do you like to have that?"

அவன் ஒரு வினாடிக்கும் குறைவாய் தயங்கினது போல் இருந்தது. அது என் கற்பனையா, உண்மையா தெரியவில்லை. எவ்வளவு ஓசிக்காப்பி வாங்கிக்கொள்வாய் என நினைத்தானோ? அவன் மறுத்திருந்தால் என்ன செய்திருக்கமுடியும் என்னால்? எதற்கு கேட்டு தொலைத்தேன்?

இரப்பது இறப்பதை விட கடினமானதோ? இரப்பவரது உயிர் தினமும் போய் போய் வருகிறதோ?

வெளியே வருகையில் காப்பி கோப்பைகள் கையில் அதனியல்பை தாண்டி கனமாக இருந்தது.

++++++++++++

Sunday, February 22, 2015

பிள்ளைப்பருவம்



2002-ம் வருடம். அமெரிக்கா வந்த புதிது. ஏற்கனவே ஆன்சைட் வந்து செட்டிலாகியிருந்த 4 தமிழ்ப்பசங்கள் இருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டில் ஐக்கியமானேன். இன்றோடு ஐவரானோம் (ஆனா மச்சி நீ ஹால்ல தான் படுத்துக்கனும்) என அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

பொதுவாய் ஆன்சைட் பசங்கள் தங்கும் வீடுகளில் காலேஜ் போல் எல்லாரும் ஒரே வயதில் இருக்கமாட்டார்கள். அவரவர் அனுபவம், வயது, விசாவிற்கேற்ப ஆன்சைட் வந்திருப்பார்கள். என் ரூமிலும் பாரி என்று ஒருவர் மட்டும் சீனியர். அப்போதே Tech Leadஆக இருந்தார். மற்ற 4 பேரும் கிட்டத்தட்ட ஒரே வயது. பாரியை மட்டும் “வாங்க போங்க” என்றே அழைப்போம். சமைக்காவிட்டால் வடிவேலு வெ.ஆ.மூர்த்தியை வைவது போல் நாசூக்காய் “என்ன பாரி, உங்க டர்ன்கிறதை மறந்துட்டீங்களா? உங்க தால் கொடுமைய செய்யுங்க” என லைட்டாய் மானபங்கம் செய்வோம்.

ஒரு நாள் சினிமாவோ, ஒரு டிவி ஷோவை பற்றியோ லன்ச்சில் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு கான்சப்ட் சொன்னார். “நம்ம வாழ்க்கையை படமா எடுக்கனும்டா. இப்ப காலைல கிளம்பி ஆபீஸ் வர்றோம்ல. அப்ப ஏதோ ட்விஸ்ட் இருக்கப்போகுதுன்னு ஆடியன்ஸ் நினைப்பான். ஆனா ஒன்னும் நடக்காது. மதியம் இது மாதிரி லன்ச் சாப்பிடும்போது நமக்குள்ள ஏதோ  சண்டை வரப்போகுதுன்னு நினைப்பான், ஆனா ஒன்னும் வராது. அப்புறம் வீட்டுக்கு போனப்புறம்” என தொடர்ந்தார். அப்போது கொஞ்சம் வேடிக்கையாகவும், நிறைய மொக்கையாகவும் இருந்தாலும் பாரி என்பதால் சிரித்து வைத்தோம். எங்களில் இருவருக்கு அவ்வருடம் அப்ரைசல் செய்தார் என நினைவு.

ராதாரவி மேடைகளில் சொல்வது போல் “எதுக்காக இதை சொல்றேன்னா”, இதை அதே 2002ம் வருடம் ஒரு அமெரிக்க டைரக்டர் நடத்திக் காட்டவே ஆரம்பித்துவிட்டார். (யாரு டைரக்டர்ன்னு கேக்கிறீங்களா? I'll link later. அட அவர் பேரே லின்க்லேட்டர் தான்)

Boyhood.

2002-இல் அப்போது 6 வயதாய் இருந்த ஒரு சிறுவனை மையப்படுத்தி, அவனின் அப்பா, அம்மா, அக்கா என வெகுசில நடிகர்களோடு ஒரு படத்தை ஆரம்பித்தார். அந்த பையன் வளர வளர மெல்ல 12 வருடங்கள் படத்தை எடுத்து 2014-இல் ரிலீஸ் செய்தார். மேசன் (Mason) என்கிற அந்த சிறுவன் தன் 6 வயதிலிருந்து வளர்ந்து 18 வயதில் காலேஜ் போவது தான் கதை.

அவ்வளவே அவ்வளவு தான் கதை.  ஆனால், அமெரிக்கா உருகி உருகி இந்த படத்தை கொண்டாடியது.

படத்தின் மிகப்பெரிய USP இந்த 12 வருடம் தொடர்ச்சியாய் ஒரே நடிகர்களை வைத்து படமெடுத்த கான்சப்ட் தான் என்றாலும், அதனால் மட்டும் இப்படம் கொண்டாடப்படவில்லை.  கரெக்டாய் அமெரிக்காவை குறிவைத்து அடிக்கும் வெளிகிரக ரோபாட்கள், தாலிபான்களிடமிருந்தோ, ரஷ்யர்களிடமோ தாய்நாட்டை காப்பாற்றி கெட்டவார்த்தை பேசிக்கொண்டே சாகும் மிலிட்டரி ஹீரோ படங்களை தாண்டி, ஒரு சராசரி அமெரிக்கனின் வாழ்க்கையை அச்சு அசலாய் காட்டியதே படத்தின் தனித்தன்மை.

அமெரிக்க வாழ்வினை பற்றி நமக்கு பல கற்பிதங்கள் உண்டு. பொதுவாகவே உறவுகள்,செக்ஸ் போன்ற விஷயங்களில் ஒழுங்கீனமானவர்கள்,பெரிதாய் விழுமியங்கள் (வேல்யூஸ்) இல்லாதவர்கள்,  குடும்பம்,குட்டி பந்தபாசம் எல்லாம் குறைவு,  சுயநலக்காரர்கள் என பலப்பல.

அதில் பெரியதாய் உண்மையில்லை.

ஒரு சராசரி அமெரிக்கன் வாழ்க்கையில் எதுவுமே given இல்லை. எதையும் பிரயத்தனப்பட்டே அடைகிறான். சொகுசெல்லாம் ப்ராட் பிட், ஆஞ்சலினா ஜோலி போன்றவர்கள் குழந்தைகளுக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஒரு அமெரிக்கன் 10 வயதில், வீட்டில் பாத்திரம் தேய்க்க, புல் பிடுங்க, பனி தள்ள பழக்கப்பட ஆரம்பிக்கப்படுகிறான்/ள். இது பாக்கெட் மணிக்காக கூட அல்ல. “உனக்கு கூரை தருகிறேன். சோறு போடுகிறேன். நீயும் பொறுப்போடு இரு” என உணர்த்துவதற்காக. பள்ளிகளில் bullying (உடல்/மன ரீதி துன்புறுத்தல்கள்) உண்டு. ஹைஸ்கூல் வரும்போது பேட்டை பீட்சா கடையிலோ, மளிகைகடையிலோ அவர்கள் டீஷர்ட்டை போட்டுக்கொண்டு குறைந்தபட்ச ஹவர்லி ரேட் கூலிக்கு உழைப்பான். கக்கூஸ் வரை கழுவுவான். நன்கு படித்தால் அரசுக்கல்லூரியில் சல்லீசாய் படிப்பு என்பது கிடையாது. கல்லூரிப்படிப்பு வெகு காஸ்ட்லி. பெற்றோர்களுக்கு சுமாரான வேலையென்றால், தம்பி நீ காசு சேர்த்து படிச்சுக்கோப்பா என அனுப்பிவிடுவார்கள்.

அதற்காக, பெற்றோர்கள் அவர்கள் கடமையை செய்கிறார்கள் இல்லை என்பதில்லை. நாம் இப்போது சொல்லும் “ஐடில வேலை நிரந்தரம் இல்லை. பென்ஷன் கிடையாது” மோஸ்தரில் தான் அமெரிக்காவே 60,70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகிறது. கவர்ன்மெண்ட் வேலையே நிரந்தரம் கிடையாது. பிரவேட் கம்பெனி போல் அரசே திவாலாகிவிட்டது என மொத்தமாய் layoff செய்வார்கள். ஒரு அமெரிக்கன் ஸ்டூடண்ட் லோனில் வாழ்க்கையை ஆரம்பிப்பவன், கார் லோன், 30 வருடம் மார்ட்கேஜ் (வீட்டு லோன்), பிறகு கடைசிக்காலத்தில் தன் வைத்தியம், முதியோர் விடுதி, கல்லறைக்கும் சேர்த்தே பணம் கட்டிவிட்டு தனியே செத்துப்போவான்.

கஞ்சா குடிக்கியாகவோ, அக்யூஸ்டாகவோ ஆகாத ஒரு நல்ல அமெரிக்கன் தன் குடும்பத்துக்காக உழைப்பதில், குழந்தைகளை வளர்ப்பதில் நம்மைவிட எவ்விதத்திலும் குறைந்தவனல்ல. இங்கு மனைவி மட்டும் கர்ப்பம் சுமப்பவளல்ல. "We are pregnant" என்பதே பதம். நம்மை விட அவர்களின் priorities சற்றே மாறுபடலாம். தன் டாஸ்மாக் கணவனை சகித்துக்கொண்டு ஒரு பெண் இங்கு வாழ்வதை போல் நடக்காது. போடா என டைவர்ஸ் கொடுத்துவிட்டு, கௌதம் மேனனின் சிங்கிள் மதர் போல் காலையும்,மாலையுமாய் 2 வேலை பார்த்து தன் பசங்களை வளர்த்து, அதே சமயம் தனக்கான துணையையும் தேடியடைவாள் ஒரு அமெரிக்கள்.

அப்படிப்பட்ட ஒரு தாயின் வாழ்க்கையாகவும் Boyhood படத்தை காண இயலும். அவளின் உறவுச்சிக்கல்கள், மணமுறிவுகள், கிளாசிக் அமெரிக்க "Your children and my children are playing with our children" வாழ்க்கைமுறை, இதனூடே அவள் தனக்கான படிப்பு, வேலை என சுய அடையாளத்தை தேடிக்கொள்வதாகவும் படம் நகர்கிறது. முதல் கணவனின் (குழந்தைகளின் பயலாஜிக்கல் தகப்பன்) பொறுப்பற்றத்தனம், மறுகணவனின் குடிப்பழக்கம், மறுமறுகணவனின் சிற்றப்பன் கொடுமை, கணவன் கொடுமை செய்கிறான் எனத்தெரிந்தும், அவனது குழந்தைகளை காக்கமுடியாது தன் குழந்தைகளை மட்டுமே காக்க முடிந்த அமெரிக்க ‘கார்டியன்’ சட்டச்சிக்கல்கள் என இவ்வாழ்க்கை முறையின் சிக்கலான முடிச்சுகளையும் தொட்டுச்செல்கிறது படம்.

மேசனின் அக்காவாக வருபவளின் நடிப்பும், அவளின் துடுக்குத்தனமான பேச்சும், அட்டிட்யூடும், வளர்ந்த பின் தன் தம்பியின் மீதும், அம்மாவின் மீது வரும் அக்கறையுமாய் வெகு இயல்பு. ஒரு பெண்குழந்தையை இங்கு பெற்று வளர்ப்பதால் நன்கு தொடர்புப்படுத்திக்கொள்ள முடிகிறது. மேசனின் (பெற்ற) அப்பா கதாபாத்திரம் ஒரு அற்புதம். பெரிய பொறுப்பில்லாமலும், கொஞ்சம் கையாலாகத்தனத்தோடும் இருந்தாலும், குழந்தைகள் மேல் பேரன்போடு இருக்கிறான். சம்பிரதாய தகப்பன்த்தனத்தோடு இல்லாது விளையாடுகிறான், அவர்கள் மனதை படிக்கிறான். வெகு நாசூக்காய் வாழ்வை புரிய வைக்கிறான். எனக்கு என்னை திரையில் பார்ப்பது போல் இருந்தது.

படத்தில் வசனங்கள் மிகபெரிய பலம். வெகு இயல்பாகவும், அதே சமயம் எளிதில் கடந்துவிடமுடியாததாகவும் உள்ளது. பசங்களை வளர்த்து ஆளாக்கி, மகன் வீட்டை வெளியேறும் தருணத்தில் தாய் கேட்பாள் “சில மோசமான திருமணங்கள். எப்படியோ பாடுபட்டு உங்களை வளர்த்துட்டேன். இப்ப வீட்டை விட்டு போறீங்க. இனி? சாவுக்கு வெயிட் பண்ணனுமா? வாழ்க்கைன்றது அவ்வளவே அவ்வளவு தானா? இதுல என் வாழ்க்கை எங்க போச்சு?”. படத்தை pause செய்துவிட்டு பேஸ்த் அடித்தாற்போல் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். வெறும் 13 வருடங்கள் இங்கு வாழ்ந்து, ஒரு இரண்டுங்கெட்டான் வட அமெரிக்க வாழ்க்கை வாழும் எனக்கே இப்படியென்றால், ஒரு அமெரிக்கனுக்கு அவனையே திரையில் பார்த்துக்கொள்வது போல இருக்குமென நினைக்கிறேன்.

12 வருடங்கள் எடுத்த படமென்பதால் சுப்பாண்டி மண்டை போல் இருக்கும் ஆப்பிள் கம்யூட்டர்,காலத்துக்கேற்ப மாறும் செல்ஃபோன்கள், கார்கள், அமெரிக்க தேர்தல்கள், புஷ், ஒபாமா என மாறும் அதிபர்கள், இராக் போர், அமெரிக்க வாழ்வின் நாடித்துடிப்பான பேஸ்பால், கேம்ப்பிங் என Forrest Gump சாயலோடு காலமாறுதல்களையும் உறுத்தாது தொட்டுச்செல்கிறது.

நிதானமாய் 166 நிமிடங்கள் எந்த அவசரமும் இல்லாது ஓடுகிறது இல்லை நடக்கிறது படம். ஆனால் இன்னும் 166 நிமிடங்கள் போயிருந்தாலும் பார்த்திருப்பேன்.

நம் வாழ்க்கை முடியவேண்டும் என நாம் நினைக்கிறோமா என்ன?

+++++++++++++

Friday, February 20, 2015

டங்காமாரியும் ஊதாரியும் பின்னே ஞானும் - நாகிர்தனா பார்ட் 2




முதல் தடவை கேட்கும்போது “பாட்டாடா இது? பாட்டே இல்ல. எனக்கிந்த பஞ்சாயத்துல மரியாதை இல்ல. கேட்டா யூத்துக்கு பிடிக்கும்பாங்க” என நாற்காலியை விசிறிவிட்டே போனேன்.

ஒத்துக்கறேன். தாய் பத்தினிங்கிறதை ஒத்துக்கறேன். ஆனா நெக்ஸ்ட்டு மீட் பண்ண பண்ண, பாடல் நாக்குப்பூச்சி போல் நாடி,நரம்பெல்லாம் ரட்சகன் நாகார்ஜுனா போல் ஊடுருவியது. இப்போதெல்லாம் “அம்ம பாட்டுதேன்” என இதையே முதலில் போடுகிறேன்

எது? டங்காமாரி.

ஏன்? பார்த்துருவோம் மச்சி..

முதலில், ஹாரிஸ் ஜெயராஜ். ஹாரிஸை திட்டுவது காந்தியை திட்டுவது போல் ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது. என்னவோ யாருக்குமே அவர்களுக்கென ஒரு பாணி இல்லாதது போல் “எல்லாம் ஒரே மாதிரி இருக்குபா” என ஒரே மாதிரி சொல்வார்கள். இந்தியில் இப்போது சார்ப்பான மீசிக் புள்ள அமித் த்ரிவேதி. ரேண்டமாய் அவரின் ஒரு பத்து இந்திப்பாட்டை கேளுங்கள். இல்லை ஒரு இந்திக்கார “அமித்”துக்கு 10 தமன்/இமான்/அனிருத் பாட்டை போட்டு காட்டுங்கள். இன்னாபா எல்லாம் ஒரேமாதிரிக்கீது என்று தான் கமெண்ட் வரும். மற்றவர்கள் ஒரே டைப்பில் போட்ட ஆறு பாட்ட்டை சேர்த்து கோர்த்து பாடினால் ’மெட்லி’யென்பார்கள். ’டெட்லி சாங் கும்ஸ்” என்பார்கள். ஆனால், ஹாரிஸென்றால் ஜெட்லியாகிவிடுவார்கள். காப்பி விஷயத்தில் ஹாரிஸ் ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல. மற்றவர்கள் முற்றும் துறந்த முனிவர்களும் அல்ல என்பதே நிஜம். மறுப்பீர்களேயானால், ட்ரிப்ளிகேன் கூகிள் ராவுத்தரிடம் வெத்தலையில் மை போட்டு பாருங்கள்.

சரி, பாட்டுக்கு வருவோம். “அஞ்சல” எல்லாம் மெட்ரிகுலேசன் ஸ்கூல் ஆண்டுவிழாவில் மைலாப்பூர் பையன்கள் ஆடுவது. கானா என்றோ குத்து என்றோ ஒத்துக்கவே மாட்டேன். உண்மையில் ”திருனெல்வேலி அல்வாடா”வுக்கு பிறகு இப்பாடலில் தான் அக்மார்க் குத்து குத்தியிருக்கிறார் ஹாரிஸ். ஃபீல்டில் ஃபேட் ஆகிறார் என்பவர்களையும் சேர்த்து ஊமக்குத்து குத்தியிருக்கிறார். வெகு கேட்ச்சியான ட்யூன், சரியான பீட்ஸ், நேர்த்தியான ஆர்கெஸ்ட்ரேஷன், ஆடிக்களைத்தவர்கள் மூச்சு வாங்குவதற்காகவே ராக்கம்மா கையத்தட்டு “ம்ம்ம்” ஹம்மிங் போல் நடுவில் வரும் நாதஸ்வரம் என எல்லாம் நாதஸ்வரம் சீரியல் லைவ் எபிசோட் போல கனகச்சிதம்.

அடுத்த முக்கியமான காரணம், பாடல் வரிகள். ஜாலியாய் எழுதுறேன் என பலர் இப்போது கோவம் வருவது போல் காமெடி செய்கிறார்கள். அதில் முதன்மை பா.விஜய். ஜாலி எல்லாம் வாலியோடு போச்சு. இப்போதைக்கு சுகுர்ராய் ஓரளவு ஸ்மைல் வரவைப்பதை போல் எழுதுவதில் விவேகா தேறுவார். இந்தப்பாடலை எழுதியது ரோகேஷ் என்ற அசிஸ்டண்ட் டைரக்டர். கே.வி.ஆனந்தின் ஒன் ஆஃப் தி சிஷ்யப்புள்ள. அனேகன் ஆடியோ விழாவில் தனுஷ் நடிகர்களின் தேசிய குணமான தன்னடக்கத்தோடு கூப்பிட அசோசியேட்களின் தேசிய உடையான ஜீன்ஸில் அதைவிட தன்னடக்கத்தோடு மேடையேறினார்.


கானா பாடல்களுக்கு என ஒரு தராசு உண்டு. தொழுதூர் மோட்டல் “மாம்பழம் விக்குற கண்ணம்மா’ லெவலுக்கு தரைடிக்கட்டா இருக்கனும், ஆனால் அரைடிக்கட்களுக்கு மட்டுமாய் titillating-ஆக இருக்கப்படாது.  OMRக்கு ஹெட்ஃபோனிக்கொண்டே போகும் ஜெண்டில்மென் தலைவாசுக்கும் பிடிக்கனும். என்னை போன்ற ராஜாவோடு பால்யம், ரகுமானோடு பதின்மம் என வளர்ந்த புள்ளைங்களுக்கு சற்று சுத்தபத்தமாக புழங்குவது போலவும் இருக்கனும். கே.வி.ஆனந்தின் சிஸ்யப்புள்ள இதை நன்கு பேலன்ஸ் செய்திருக்கிறார். “அயுக்கு மூஞ்சி மீனாச்சி, மூஞ்சை கழுவி நாளாச்சி..ஆடப்போறேன் மங்காத்தா, தொர்த்தின் வருது எங்காத்தா..” எல்லாம் கேர்ள்ஃப்ரெண்டோடு காபி ஷாப்பில் வரம்பு மீறாது குறும்பு செய்வது போல் நின்று விளையாடுகிறது.

“பலான கை ரேகா..அது லுக்கு விடும் ஷோக்கா..உன்ன ஆக்கிடும்டா பேக்கா..நீ கழட்டிக்கடா நேக்கா’ போன்றவை மேலே சொன்ன மைல்டு ஸ்மைலை வரவழைத்தால், அடுத்த வரியில் ”பொண்ணுங்களை கேவலமா எண்ணாத மச்சி..உன் கூட வந்து பொறக்கலையா அக்கா தங்கச்சி” என தத்துவத்தையும் தூவி பேலன்ஸ் செய்கிறது பாடல். கிட்டத்தட்ட எல்லா வரிகளுமே, ஜெயா டிவி ‘தேன்கிண்ணத்தில்’ போடப்படும் கண்ணதாசன் - விசு காலத்து பாடல்கள் போல் மீட்டருக்கும், மேட்டருக்கும் கச்சிதமாய் விழுந்திருக்கிறது.

ஒரு விருந்தின் டெசர்ட் போல், I saved the best for the end.


அது, பாடகர்கள். 3 பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல் இது. பல்லவி போன்ற மெயினான வரிகளுக்கு மரணகானா விஜி, ஏவிஎம்ராஜன் சிவாஜிக்கு ஒத்து ஊதுவது போல் தொடரும் வரிகளுக்கு தனுஷ், சரணத்தில் DSP,மணிசர்மா க்ரூப்பின் நிலைய வித்வான் நவீன் மாதவ் என மூவரணி.

இப்பாடலின் வைல்ட்கார்ட் மரணகானா விஜி தான்.

ஹாய் மதன் போல் ’இன்ஃபாக்ட் பார்த்தீங்கன்னாக்க’, இப்பாடலில் விஜியின் வரிகள் மட்டும் உயர்ந்த சுருதியில்,ஏழரை கட்டையில் இருக்கும். தனுஷ் வரிகள் எல்லாம் சேஃபாய் லோ பிட்ச்சில் அமைய, நவீன் மாதவ் எல்லாம் தனுஷால் சரணம் சமாளிக்கமுடியாமல் இறக்கப்பட்ட லோ-ஆர்டர் பேட்ஸ்மென். தனுஷும், நவீன் மாதவும் ஒன்றும் சும்மா இல்லை. விஜி வரிக்கு வரி சிக்சாய் பறக்க விட, இருவரும் பாந்தமாய் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்கின்றனர். குறிப்பாய் நவீன் தன் 4 வரிகளை ஸ்லாக் ஓவர் ஜடேஜா போல் அடித்தே ஆடியிருக்கிறார்.

இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த தனுஷையும், நவீனையும் போதுமான அளவு அலசிவிட்டதால் மரணகானா விஜிக்கு வருவோம்.

கானா பாடகர்கள் என எடுத்துக்கொண்டால் முன்பு தேவாவின் தம்பி சபேஷ் சரியாய் கானாவுக்கான குரல், உச்சரிப்பு மீட்டரை பிடிப்பார். இப்போது கானா பாலா, அந்தோனிதாசன் என பலருண்டு. இவர்களுக்கெல்லாம் நன்கு பாட வரும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் குரல் ஓரளவுக்கு மேல் பேசாது. ஹோம் ‘பிட்ச்’ தாண்டி வெளியில் சோபிக்காது. பிட்ச் பிரச்சனையின்றி ஏழரை கட்டையில் பாடக்கூடிய வேல்முருகன் போன்றவர்களுக்கு சென்னை வழக்கில் சொடக்கு பால் ஆட தெரியாது.

இங்கு தான் எந்த பால் போட்டாலும் அடிக்கிறார் மரணகானா விஜி. விஜியை நாம் (நாம்னா நான் ஒருத்தன் தான். பன்மைல எழுதினாத்தான் ஒரு புதியதலைமுறை கட்டுரை எஃபக்ட் இருக்கும்) முன்பே கவனித்ததுண்டு. சொல்வதெல்லாம் உண்மைக்கு முன்பே “இப்படி பண்றீங்களேம்மா” என கதையல்ல நிஜம் செய்தாரல்லவா லட்சுமி? அதில் விஜி பிணத்தோடு வாழ்பவர் என விஜய்டிவி ‘பிதாமகன்’த்தனமாய் ஒரு எபிசோட் செய்தது. அதில் ‘கரைமேல் பிறக்க வைத்தானி’ல் எம்ஜியார் உபயோகித்த தப்பட்டையை அடித்துக்கொண்டு ’என்ன இழவுடா’ என சில இழவு கானா பாடல்கள் பாடினார்.


விஜியின் பெரிய பலம், அனந்த் வைத்தியநாதன்கள் சொல்லும் ‘டைனமிக்ஸ்’. தெர்மோ டைனமிக்ஸ் அல்ல, கொடுத்த காசுக்கு மேல் கூவும் தர்ம டைனமிக்ஸ். அதாவது “மச்சானை திண்ணையில மூடிப்படுக்கச்சொல்லு” என எஸ்பிபி giggleவாரே கடைசியில்? “எங்க அதை பண்ணு” என மனோ கேட்க பரத்கள் பாடி ஷவர் வாங்குவார்களே..அந்த மிக்ஸ். இந்தப்பாடலுக்கு தேவையான சென்னை ஸ்லாங், உச்சரிப்பு, பாடும் விதம் என எல்லாமே கச்சிதமான (டைன)மிக்சிங்கில் கொடுத்திருப்பார் விஜி.

இல்லேம்பீங்களா? பாடலின் 4.07 மார்க்கரில் “பொட்டு பூவு வெஸ்ஸுகினு புடவய தான் கட்டிகினு”வை கவனியுங்கள். அவரை போல் அக்மார்க்காய் “வெஸ்ஸுகினு” பாடும் இன்னொருவரை காண்பியுங்கள். என் ஒரு paycheque-ஐ தருகிறேன். ஆச்சா, அடுத்து கடைசி “ஆடப்போனேன் மங்காத்தா, தொர்த்தின் வருது எங்காத்தா”வுக்கு வாருங்கள்.  4.47இல் மைக்ரோவினாடியில் எங்காத்தாவில் வரும் கிக்லிங்கை கண்டுகொண்டீர்களா? இதை வரவழைக்க சூப்பர்சிங்கர்கள் தடவப்போகிறார்கள். அப்படி பாட முடிந்தால், முடிந்தவுடன் ஒரகடம் வீட்டை TDS இல்லாமல் கொடுத்து விடுங்கள் விஜய் டிவிக்காரர்களே.

அட ஆளே நார்த் மெட்ராஸ், கானா பாடுறது கஸ்ட்டமா ‘எல்லாம் ஐவாஸ்’ என தில்லுமுல்லு ஷார்ட்நேம் சுப்பி போல் சொன்னீர்களேயானால், நோ நெவர். ஒவ்வொரு பல்லவியின் முடிவிலும் விசுவின் சம்சாரம் கேசரி போல் டகுடகுவென வழுக்கிச்செல்லும் “உன்ன அட்ச்சிடுவேன் மெரள” போன்ற கடைவரிகளை கவனியுங்கள். ப்ளாக்தண்டரில் லொங்குலொங்குவென ட்யூபை மேலேறி எடுத்துச்சென்று, அங்கிருந்து கீழே தள்ளிவிட ட்யூப் வழுக்கிக்கொண்டு குபுக்கென முதல் பள்ளத்தில் விழும் போது ஜெர்க் ஆவோமே, அதை அவர் குரலில் கொண்டு வந்திருக்கிறார் விஜி. இதான் கர்னாடிக்ல கமகம், சினிமாப்பாட்டுல சங்கதி, ஹிந்தில சித்தாரேய்..

மொத்தத்தில் மரணகானா விஜி மரண மாஸ்.


பொதுவாய், இப்பாடல் பல வயது கடந்த, கடப்பவர்களுக்கு கடுப்பாவதை கவனிக்கிறேன். இப்பாடலை இடக்கையால் தட்டிவிடுவது எளிது. யூத்ஸை திட்டுவதும் எளிது. கவனித்தீர்களேயானால், யூத்துகள் எல்லாவற்றையும் கொண்டாடிவிடுவதில்லை. இது கூட வந்த “அதாரு உதாரு” தல பாடலென்றாலும் இந்த அளவுக்கு கொண்டாடிவிடவில்லை. அவர்களும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு அரையடி ஸ்கேல் வைத்தே தான் இருக்கிறார்கள். கலவை சரியாய் இல்லாவிடில் மொக்கை என ஒரு வார்த்தையில் ஜோலியை முடிக்கிறார்கள்.

இதை சொல்லியே ஆகனும். “அறம் செய்வோம் புறம் செய்வோம்” என இன்று டீசண்ட்டாய் சொன்னாலும், நாமும் இதை விட மோசமான வரிகளை எய்ட்டீஸ், நைண்ட்டீஸில் கடந்து தான் வந்திருக்கிறோம். நமக்கெல்லாம் ‘பலான’ என்ற பதத்தையே அறிமுகப்படுத்தியது நாயகன் தான். ’வாராவதி இறக்கம்’ என்றால்,  “அமரன் வந்து நின்னா கிறக்கம்” என அடுத்த வரியை உங்கள் மனது ஆட்டோமேட்டிக்காய் இறக்குவதை நானறிவேன். ’இந்து’வை தாண்டி வந்து விடவில்லை எதுவும்.

நாமும் எல்லாம் கடந்துதான் வந்திருக்கிறோம். நம் பசங்களையும் கடக்க விடுவோம்.

ஜாலியாய் கவலையில்லாது ஊதாரியாய் இருப்பது ஒரு வயது வரை தான்.

அதுவரை டங்காமாரி ஊதாரியை ரசித்துவிட்டுத்தான் போவோமே.

+++++++++++

(இது பிடித்திருந்தால் இதுவும் பிடிக்கலாம் -> (நாகிர்தனா திரனனா - ஒரு மார்க்கமான இசைப்பார்வை)