Tuesday, March 24, 2015

ரச(னை)வாதம் 03/24/2015


வண்ணதாசனை மிக தாமதமாய் தான் கண்டறிந்தேன். ஃபேஸ்புக் வாயிலாக. 

ஆனால் கல்யாண்ஜி என்னும் கவிஞரை தெரியும். அவர் கண்ணதாசா, வண்ணதாசா என பிறகே தெளிந்தேன். வண்ணதாசனின் ஃபேஸ்புக் படைப்புகளுக்கே பெரும் ரசிகன் நான். கவிதை ஃபார்மட்டில் எனக்கு பெரிய ஆழம் இல்லையெனினும், ஒரு கவிதையின் உயிர் பற்றி எனக்குள் ஒரு மானி உண்டு. அவ்வகையில் வண்ணதாசன் (கல்யாண்ஜி) கவிதைகள் நிரம்பவே பிடிக்கும். மனதையும் தைக்கும். ஒரு கணித சமன்பாடு போல் சொற்கச்சிதமும் கொண்டது.

சமீபத்தில் படித்த அவரின் சிறுகதை தொகுப்பு, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள். வெகு எளிய கதைகள், கதைமாந்தர்கள். 70/80கள் காலக்கட்டத்தில் சிறுநகர சூழலில் எழுதப்பட்டவை. சிறுநகர பின்னணியில் வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கதன் மேலும், குறிப்பாய் 80/90கள் காலக்கட்டத்தின் மீதும் பெரும் மயக்கம் உண்டு.

பத்தாவதுக்கு பாண்டி வீட்டில் படித்துக்கொண்டிருப்போம். அவன் அப்பா கவர்ன்மெண்ட் ஆபீஸ் வேலையை முடித்து,வீடு வந்து, கைகால் அலம்பி, சாப்பிட்டு,கொஞ்சம் ரேடியோ கேட்டு, ஈசிசேரில் சாய்வார். தெம்பிருந்தால் முனைக்கடை வரை போய் சொசைட்டி பால்கடையில் பணங்கல்கண்டு பால் சாப்பிட்டு, எங்களுக்கு தூக்கில் டீ வாங்கி வருவார். பின் தூங்கிவிடுவார். சுந்தரம் பதிவாய் “ச்சே ஜாலில்ல.. உங்கப்பாவுக்கு படிக்கவே வேணாம்ல” என்பான். வேலை, அப்ரைசல், EMI, அவசரம், ஓட்டமில்லாத எளிய வாழ்வு. வண்ணதாசனின் கதைகளும் அவ்வகையே. கடந்த 15 ஆண்டுகளில் நாம் வாழ்வை கடினமாக்கிக்கொண்டு விட்டோம் என தோன்றுகிறது.

எனக்கு அவர் கதைகளின் மூலம் கிடைத்த பெரிய revelation, ஒரு கதைக்கு கதை தேவையில்லை என்பதே. வளர்ந்த,வாழும் சூழலில் பெரும் சம்பவ வறட்சி கொண்ட நான், சிறுகதைகள் எழுத சம்பவங்களுக்கு அலைபாய்வேன். வண்ணதாசன் கதைகளில் பெரிய நீண்ட சம்பவங்களோ, O.Henry, Jeffrey Archer வகை முடிவுச்சுருக்குகளோ இல்லை. சில கதைகளில் கதைமாந்தரின் இயல்பையோ, சூழலையோ விளக்க வர்ணனைகள் நீள்வதாய் தோணலாம். ஆனால் கதை முடித்த தருணத்தில் அவையனைத்தும் relevant-ஆய் தோன்றும்.

’தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்’ என்ற டைடிட்ல் கதையில் ஒரு அப்பா கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு மாமனார் வீட்டிற்கு போகிறான். அவனுக்கு அங்கு ஒரு நல்ல “வாங்க” கிடைப்பதில்லை. கொழுந்தியாள் முதற்கொண்டு “அக்கா வரல?” என்கிறார்கள். துணுக்குற்று திரும்ப வருகிறான். அவ்வளவே அவ்வளவு தான் கதை. ஆனால் அவன் கூடவே பயணிப்பது போல் ஒரு உணர்வு.

ஒரு கதையில், எப்போதும் ஃபேனை ஐந்தில் வைக்கச்சொல்கிறார் ஒரு அலுவலர். அடுத்ததில், பணம் வைத்த டிபன்பாக்சை அரசு அலுவலகத்தில் மறந்துவிட்டு இரவில் எடுக்க செல்கிறாள் ஒரு பெண். அவளுக்கு எதுவும் ஆவதில்லை. பணம் பத்திரமாக இருக்கிறது. அவள் பத்திரமாய் இருக்கிறாள். அந்நேரத்திலும் டைப் சத்தம் கேட்டு, அதை அடிப்பவர் வீட்டிற்கு போகவேண்டும் என நினைக்கிறாள். அவ்வளவே. ஆனால் இவற்றிலெல்லாம் ஒரு கதையை கண்டிருக்கிறார் வண்ணதாசன். வண்ணதாசன் கதைகளுக்கு Spoiler தரவே இயலாது போல.

பழம்புடவையை போர்த்திக்கொண்டு தூங்கும் ஒரு குடும்பத்தில், மனைவி முதன்முதலாய் ஒரு போர்வையை வாங்குகிறார். நாள் முழுவதும் அதை தன் கணவன் போர்த்திக்கொள்வதை பற்றி கற்பனை. அவனோ அன்று வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு அதை கொடுத்துவிடுகிறான். இதில் யார் சரி,தவறு, யார் நல்லவர் கெட்டவர்?

‘என் காதில் விழுவதை சொல்கிறேன். சொல்வதை பாசாங்கின்றி சொல்வதே என் தொடர்ந்த முயற்சியாய் இருக்கிறது’ என்கிறார் முன்னுரையில். அவர் முன்வைக்கும் உலகிலும், மனிதர்களிடத்தும் பாசாங்கில்லை.

வண்ணதாசனின் புகைப்படங்களை கண்டால் அவர் முகத்தில் ஒரு நிம்மதி தெரியும். அதை நமக்கும் கடத்த முடிவதே அவரின் பெரும் சாதனையாக இருக்கக்கூடும்.

+++++++++++++++++


தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்



Friday, March 20, 2015

சிறுகை அளாவிய கூழ்




வீட்டில் ஊர்ப்பட்ட அலமாரிகள். எல்லா அறையிலும் படுக்கைக்கு இருபுறம், உயரமாய், ட்ரெஸ்சரோடு சேர்ந்தது என. என் பெற்றோர் இங்கு வந்து தங்கிய போது உபயோகித்த அறையின் அலமாரிகளை ஒழித்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் விபூதி, டாபர் ஆம்லா கேசதைலம் வாசனை இன்னமும் அங்கங்கே.

அம்மாவின் படுக்கைக்கு பக்கத்தில் 2 ஷெல்ஃப் கொண்ட ஒரு சிறிய Nightstand உண்டு. மேல் அடுக்கில் சில காலாவதி மாத்திரை ஸ்ட்ரிப்புகள், மங்கையர் மலர்கள், அவள் விகடன் 30 வகை குழம்புவகைகள், ஒரு ரமணிசந்திரன், நீரிழவு நோயாளிகளுக்கான கையேடு என கலந்துக்கட்டி இருந்தது. எல்லாவற்றுக்கும் அடியில் ஒரு புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டது போல் சில அச்சடித்த காகிதங்கள். என்னவென்று குனிந்து படித்தேன்.

‘யம பயத்தை போக்கும் ஸ்லோகங்கள்’. கருடபுராணம் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்தது என தெரிந்தது.

ஒரு நிமிடம் சற்று தூக்கிவாரிப்போட்டது. எப்போது, எதற்காக இதெல்லாம் சொல்லஆரம்பித்தாள்?

அம்மா எளியவள். அவள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறவள் இல்லை. 3 குழந்தைகளை வளர்த்து, நாள்தோறும் சோறுபொங்கி, எப்போதேனும் LTC போய், 10 வருடம் படுக்கையில் இருந்த மாமியாருக்கு மலஜலம் துடைத்து, சற்று கடுமையான மாமனாரை சமாளித்து தன் காலத்தை ஓட்டியவள். அனு இருக்காளா, குஷி என்ன பண்றா, பேசச்சொல்லு, வீடு வாங்கறியா பார்த்து செய் என்பதோடு கடந்த 10 வருடங்களாக தொலைபேசி உரையாடல்கள் முடிந்துவிடும். ரொம்ப போனால் ஜெயா டிவியில் மார்கழி உத்சவம் பார்க்கச்சொல்வாள்.

அப்படி நிறைய பேசிய தருணங்கள் பெரும்பாலும் சண்டையாகவே இருந்திருக்கின்றன. சரிக்கு சமமாய், நம்மை விட அதிகமாய் உழைக்கும் மனைவியிடம் சத்தம்போட இயலுவதில்லை. அம்மாவிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு விடுகிறோம். இங்கு போனவருடம் வந்த போதும். உண்மையிலேயே உப்பு பெறாத விஷயம் தான். அம்மா பார்த்து பார்த்து சமைப்பதை நாங்கள் அக்கறையாய் உண்பதில்லையாம். பேச்சு வளர்ந்து எங்கோ வந்து நின்றது. அப்பா அமைதியாய் பார்த்துக்கொண்டு இருந்தார்.

தனியாய் கூப்பிட்டு “அம்மாவுக்கு முன்ன மாதிரி ஹெல்த் இல்லப்பா. ஷுகர்ங்கிறா, கொஞ்சம் நடந்தா உக்கார்றா, எங்க போனாலும் நான் வரலை கால் வலிக்கும்கிகிறா. அதனால கூட மூட் சேஞ்சஸ் இருக்கும்ப்பா. நம்மதான் பார்த்துப் போகனும். ஏதோ ஓடுதுன்னு வெச்சுக்கோயேன்” என்றார். அம்மாவின் வேலைக்கு போகும் ஆசையெல்லாம் நிறுத்தி முழுமையாக தன் ஆளுமையில் வைத்திருந்தவர். காலம் எல்லோரையும் கனிய வைக்கிறது.
அம்மாவுக்கு எங்கோ மனதின் ஆழத்தில் தன் உடல்நலத்தை பற்றி, தன் மாமியார் போல் தானும் ஆகிவிடுவோமா என பயம் வந்திருக்க வேண்டும். அந்த காகிதத்தை பார்த்ததிலிருந்து அம்மாவிடம் கத்துவது குறைந்து போயிருந்தது.

நேற்றுவரை திடமாய் எந்த முடிவும் இல்லை. ஆகஸ்ட்டில் ஒரு விசேஷத்துக்கு குடும்பத்தோடு போவதாகதான் ப்ளான். ஒரு சின்ன யோசனை மனதில் ஓடிக்கொண்டிருந்தது. மனைவியிடம் பகிர்ந்துகொள்ள அவள் என்னை விட ஆர்வமாய் இறங்கினாள். கூடவே ’பத்து நாளுக்கு மேல போகாத. பாப்பாவும் நானும் கஷ்டப்படுவோம்’. என்னென்னவோ தேடினாள். நானும். நான் குழப்பவாதி. ’எல்லாம் காஸ்ட்லியா வருதுடி’ என கிட்டத்தட்ட கைவிட்டேன். குஷி "போகலியா சாரிப்பா” என்றாள். அனு பொறுமையாய் தேடினாள். தொலைபேசினாள். பல தெரிவுகளை முன் வைத்தாள்.

ஏப்ரல் 2 அன்று என் அம்மாவின் பிறந்தநாளுக்காக யாருக்கும் சொல்லாமல், 14000 கிலோமீட்டர் 26 மணி நேரம் பாதி உலகம் பறந்து, அவள் முன் போய் நிற்கப்போகிறேன்.

எங்கள் சிறிய திருச்சி வீட்டில் அம்மா,அப்பா,இரு தங்கைகள் குடும்பம்,அவர்கள் கணவர்கள், குழந்தைகள்,மாமியார் என குழுமியிருக்கும் காலைவேளையில் போய் நிற்கையில் எப்படி என்னை எதிர்கொள்வார்கள் என இப்போதே மனது சிறகடிக்கிறது. எண்ணமே சந்தோஷத்தை தருகிறது.
அம்மா “ஏண்டா செலவழிச்சிண்டு வந்துருக்க” என கேட்கக்கூடும். என் மனமே ஒரு பக்கம் என்னத்துக்கு இந்த சர்ப்ரைஸ், டிராமா எல்லாம் என கேட்காமலில்லை.

குறைந்தபட்சம், நான் கூட இருக்கும் 10 நாட்கள் கருட புராணத்தை மறப்பாள் அல்லவா?

+++++++++++++

பி.கு: "மண் பார்த்து பொங்கியது பொங்கல் - வண்ண 
நிறம் பார்த்து பொங்கியது மனசு”

இந்த பதிவுக்கு பொருத்தமான படத்துக்கு யோசித்தேன். இந்த வீடியோவை விட பொருத்தமாக எதுவும் தோன்றவில்லை. என அதையே வைத்துவிட்டேன். இந்த விளம்பரம் மனதுக்கு அத்தனை நெருக்கம். ஒவ்வொரு தடவையும் இந்த வரி வரும்போது கண்கள் உகுக்கும்.

Friday, March 13, 2015

பாத்திரமறிந்து



தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் பாத்திரம் அலம்ப தொடங்கினான்.

என் சின்னவயதில் பெட்டிக்கடை வைத்து நாள்பூரா இலந்தவடை சாப்பிடவேண்டும் என்பதே என் career goal. அதைவிட்டால் பாலமித்ரா, அம்புலிமாமாவில் பூவண்ணன், அரு.ராமநாதன் பாணி கதாசிரியர் ஆகவேண்டும் என்பது அடுத்தது. அப்படி ஆகியிருந்தால் விக்கிரமாதித்தன் - வேதாளம் கதையை மேலேயுள்ள வரியில் தான் தொடங்கியிருப்பேன்.

அந்தளவுக்கு ஒரு தினசரி ஆக்ட்விட்டியாய் என் டிஎன்ஏவில் ஏறிவிட்டது. ஒரு நாவலில் பாலகுமாரன் ”தூங்கினா கனவுல பின்னாடி மரம் ஓடுது” என ஓட்டுநர் சொல்வதாய் சொல்வார். அது போல் கனவில் எல்லாம் சைஸ்வாரியாக ரகவாரியாக பாத்திரங்கள் வர ஆரம்பித்துவிட்டது. டிஷ்வாஷர் இருந்தாலும் அதென்னவோ ஆரம்பித்திலிருந்தே அதோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அதுவும் நம்மூர் சமையல் எண்ணெய்ப் பிசுக்கு பாத்திரங்களுக்கு டிஷ்வாசர் அவுட்புட் நம்மை துர்வாசர் ஆக்கிவிடும் என்பதால் நானே டிஷ்வாஷர்.

இந்த இடத்தில் என் வீட்டு கிட்சனை பற்றி ஒரு வார்த்தை. இருப்பது மூன்றே பேர். குழந்தை தயிர்சாதம், பருப்புசாதம் வேகவைத்த(அ)பச்சைக்காய்கறி மட்டுமே நம் உணவில் சாப்பிடுவாள். நோ காரம் சாம்பார்,குழம்பு இன்னபிற. வாரநாட்களில் டின்னருக்கு ஒரு பேட்டர்ன் வைத்திருக்கிறாள். பாட்டு கிளாஸ் முடிந்தால் பக்கத்தில் சப்வே, பரதம் முடிந்த அன்று பீட்சா என சிறு indulgenceகள். கிட்டத்தட்ட அதுக்காகவே கிளாஸுக்கு போகிறாள்.

நானும், மனைவியும் இன்னொரு விதம். ஃபுல்மீல்ஸ் என்பது வாரயிறுதிக்கென ஆகிவிட்டது. சமைப்பது என்பது “நாளைக்கு லன்ச்சுக்கு என்ன” என்ற கேள்விக்கு பதிலாக மட்டுமே. அதுவும் ஞாயிறு மாலை பல்க்காய் சமைத்துவிடுவது. காலையில் பதிவாய் ஓட்ஸ் கஞ்சி,வாழைப்பழம். மதியம் கொண்டு போன அரைகப் சாம்பார்சாத டப்பாவை கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிய வைரமுத்துவின் மிடுக்கோடு கேஃப்டேரியாவுக்கு எடுத்துக்கொண்டுபோய், எனக்கு முன்பு சைனீஸ்காரன் நாறநாற விட்டுச்சென்ற மைக்ரோவேவில் மிகச்சரியாக ஒன்றரை நிமிடம் ஹீட் செய்து சீட்டிலேயே கம்ப்யூட்டரில் ஒரு கண்ணாய் ஸ்பூனால் முழுங்கிவிட்டால் 3 மணி காப்பி வரை தாங்கும். லன்ச்சுக்கு சப்பாத்தி செட்டாகாது. கையில் ஈஷிக்கொள்ளாமல் சப்பாத்தியை ஸ்பூன் போல் ஆக்கி, சன்னாவை முக்கி வாயில் சைடில் அதக்கிக்கொள்ளும் நார்த்தீஸ் கலை நமக்கு வரா. சப்பாத்தி குருமா சாப்பிட்ட ஒரு மதிய மீட்டிங் கைகுலுக்கலில் வெள்ளைக்காரன் “Wow you had curry food?" எனக்கேட்ட அன்று காசியில் கொத்தவரங்காய் விடுவது போல் சப்பாத்தி கொண்டுபோவதை நிறுத்தினேன். மனைவி எனக்கு சாதமே வேண்டாம் என ஒரு சாலட் இல்லை சூப்பில் பெரும்பாலும் ஓட்டிவிடுவாள்.

டின்னரை பற்றி பேசுவதற்கு முன் எங்கள் ஊரை (டொராண்ட்டோ) பற்றி ஒரு வார்த்தை. பார்க்க ரோடும், பில்டிங்கும் ஒரு ஃபாரின் எஃபக்ட்டோடு இருக்கும். ஆனா பக்கா லோக்கலு. ஊர்ப்பட்ட (வட/தென்) இந்திய உணவகங்கள், தமிழர் உணவகங்கள், சாட் கடைகள், சமோஸா/ஸ்வீட் கடைகள் என. குறிப்பாய் என் வீட்டிலிருந்து 3 கிமீ ரேடியஸ்சில் சரவணபவன், அஞ்சப்பரில் ஆரம்பித்து எக்கச்சக்க கடைகள். குஷியை ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கிளாஸுக்கு விட்டுவிட்டு பாய்ஸ் செந்தில் போல் எங்க என்ன கிடைக்கும் என டைரியில் குறித்துக்கொண்டு வாங்கிவர எனக்குத்தான் தெரியும். குறிப்பாய் பேட்டையில் ஒரு பஞ்சாபி உணவகத்தில் மிகச்சல்லீசான விலையில் தினமும் ஒரு டேக்-அவுட் டீல். 2$க்கு சன்னா பட்டூரா என்றால் ஆளுக்கொரு பூரியை ”ஷேரிங்..கேள்விப்பட்டதில்ல” என ஜோலியை முடிப்போம். இல்லை தோசைமாவு இருந்தால் வீட்டிலேயே ஆளுக்கு 3 தோசை. சட்னி கூட டப்பாவில் விற்பான்.

நிற்க, வீட்டில் சின்க்கில் எப்படி இத்தனை பாத்திரம் விழுகிறதென்பது கே.எஸ்.ரவிக்குமாருக்கே புரியாத புதிர். எனக்கு குழந்தையை கிளப்புதல் இன்னபிறவில் பெரிய பொறுமை இல்லாததால் கிச்சன் ட்யூட்டியை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டுள்ளேன். சமைக்கவும் பிடிக்கும். பைப்பை திறந்துவிட்டாலே “விடும்மா, டிஷஸ் நான் பண்ணிடுறேன்” என வந்துவிடுவேன் (அதற்காகத்தான் அவள் பைப்பையே திறக்கிறாள் என்றாலும்).

எனக்கு ஒரு காரியத்தில் செய்நேர்த்தி ரொம்ப முக்கியம். முதலில் கத்தி விஜய் போல் சின்க்கை மேலே,கீழே என ப்ளூப்ரிண்ட் பார்ப்பேன். எத்தனை பெரிய பாத்திரம், சிறிது, எவர்சில்வர், பீங்கான், ஸ்பூன், கரண்டி, கையைக்கிழிக்கும் கத்தி, கிரைண்டர் போன்ற ஸ்பெஷல் சாதாக்கள் எல்லாம் ஒரு பேட்ஸ்ட்மென் ஃபீல்டர்களை அவதானிப்பது போல் பார்த்துவைத்து கொள்வேன். ஏற்கனவே நேற்று அலம்பி காய்ந்த பாத்திரங்களை முதலில் அதது இருக்கும் இடங்களுக்கு கிச்சனின் 360 டிகிரியில் விரட்டுவேன். இந்த செஞ்சுரி அடித்த பேட்ஸ்மென் எந்தெந்த டைரக்‌ஷனில் அடித்தார் என மேப் போடுவார்களே, எனக்கும் அப்படி போட்டால் சுத்துப்பட்டு பதினெட்டு செல்ஃப்பும் காண்பிக்கும்.

அடுத்தது தேவையான டூல்ஸ். எனக்கு பிடித்த ப்ரெஷ் கைப்பிடியுள்ள பழைய பேனாவுக்கு மைபோடுவது போல் பின்னால் டிஷ் liquid ஊற்றிக்கொள்ளக்கூடியது. சிலக்கடினக்கறைகளுக்கு மெட்டல் ஸ்க்ரப். பிடித்த டிஷ் லிக்விட் பால்மோலிவ்க்காரனின் க்ரீன் ஆப்பிள் திரவம். வேறெதும் மனைவி வாங்கிவைத்தால் அறச்சீற்றத்தில் ”ஏம்மா இதுல நுரையே பொங்காதே” என அதற்கு பதிலாய் நான் பொங்கிவிடுவேன்.

சின்க்கில் பாத்திரத்தை sort செய்வது ஒரு கலை. தேய்க்கவேண்டியது எல்லாம் ஒரு பக்கம், அதில் இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதற்கு VIP பாஸ், சோப் போட்டு முடிந்து பிசுக்கு போக ஊறுபவை 300 ரூபா கூண்டுடிக்கெட், கரண்டி,ஸ்பூன் வகையறாக்களை ஒன்னுசேர்த்து ஒரு தர்ம தரிசனம், இவைகளை தண்ணியை திறந்துவிட்டு சோப்புபோக அலசி ஒரு “ஜருகண்டி ஜருகண்டி” என பாத்திரம் தேய்ப்பதும் ஒரு பெருமாள் சேவை. அலம்பிய பாத்திரங்களை அடுக்கிவைப்பதும் எனக்கு ராணுவ ஒழுங்கோடு இருக்கவேண்டும். எது உடனடியாய் தேவைப்படும், எது அடியில் போகலாம் என கவிழ்த்துப்போடுவதிலும் கணக்குப்போடுவேன். கப்பு போக கழுவிய கப்புகளின் கைப்பிடிகள் பரேடுக்கு தூக்கிக்கொண்டுநிற்கும் துப்பாக்கிகள் போல் ஒரே டைரக்‌ஷனில் நின்றால் தான் திருப்தி. பாத்திரம் தேய்ப்பதில் ப்ராசஸ் இம்ப்ரூவ்மெண்ட், CMM லெவல் 5, சிக்ஸ் சிக்மா, நக்மா வரைக்கும் கொண்டுவந்த முன்னோடி நான்.

அடுத்த முக்கியமான விஷயம் எண்டர்டெய்ன்மெண்ட். பாத்திரம் அலம்ப 400$க்கு Beats Studio Wireless headphones வாங்கிய ஆசாமி யா இட்ஸ் மீ. என்னனவோ wired headphoneகள் முயற்சித்து அது சின்க் கீழ் செல்ஃப் கைப்பிடியில் மாட்டி, ஃபோனில் தண்ணிபட்டு பேஜாராகி கடைசியாய் இதற்கு வந்தேன். முதலில் ஒரு நல்ல பெப்பியான ப்ளேலிஸ்ட்டை போட்டுக்கொள்வேன். பாத்திரம் தேய்க்க பாலமுரளி கிருஷ்ணாவோ, வானலிக்கு வாணிஜெயராமோ வேலைக்காவாது. நல்ல தரைக்குத்தாக விஜய் ஆண்டனி பாடல்களோ, “டங்காமாரி ஊதாரி”யோ தான் சரி. அதுவும் சுற்றி என்ன நடக்கிறதென்று தெரியாமல், காது பாட்டை கேட்க, கை பழகினவேலையை செய்ய, வாய் மைன்ட்வாய்சில் பாடுவதாய் நினைத்து சத்தமாய் “புட்டுக்கின நீ நாறி” பாட, “சத்தம் போடாத” எதிர்க்குரலை “என்னம்ம்மா” என 70 டெசிபல் எதிர்க்குரலில் அடக்கி, அடடா..சுக்ஹானுபவம்.

இப்படி ஒரு trance நிலையில் பாத்திரம் தேய்ப்பதால், மனைவி செய்யும் அழிச்சாட்டியங்களுக்கு அளவேயில்லை. முதலில் சின்க்கை பார்த்தால் சாதுவாய் ஏழெட்டு பாத்திரங்களுடன் “அடடே இதான் தண்டாலா..ஈசியா இருக்கறதே” என தோன்றும். ஆனால், பட்ஜெட் பத்மனாபனில் துவைத்த துணிகளை வேண்டுமென்றே விவேக் லாண்டிரிக்கு போடுவதை போல், எங்கிருந்துதான் பிடிப்பாளோ, சடசடவென ஃப்ரிட்ஜை ஒழித்து, செல்ஃபுகளை ஒழித்து, லன்ச்பாக்ஸ், ஓட்ஸ் கஞ்சி கலையங்கள், ஆங்காங்கே விட்டுவைத்த காபி மக்குகள் என ஒரு லோடு பாத்திரம் சேர்க்க எனக்கு ஆத்திரம் சேரும். அதையெல்லாம் பாத்திரத்தில் காட்டி அலாவுதீன் அற்புதவிளக்கை தேய்ப்பது போல் தேய்,தேய் என தேய்க்க ஒரு கட்டத்தில் பூதமே வந்துவிடும்.

இப்போதெல்லாம் நண்பர்கள் வீட்டில் கூட பார்ட்டியெல்லாம் முடிந்தபிறகு “ஏம்மா வீட்ல ஏதாச்சும் பாத்திரம் அலம்பனுமா, நான் பண்றேன்” என்று தன்னிசையாக சதையாடினால் மனைவி ஆடிவிடுகிறார்.  இதில் எப்போது பாத்திரம் அலம்பனும் என ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் வேறு உண்டு. குறிப்பாய் மற்றவர்களுக்கு முன் நான் செய்யப்படாது. போன வாரம் பக்கத்துவீட்டு அம்மா வந்து மனைவியோடு அரட்டை. லேசில் கிளம்புவதாயில்லை. எனக்கு அடுத்த வேலை இருந்ததால் (அடுத்த வேலைன்னா இதுபோல் ஃபேஸ்புக் வருவது) இது ஆவுறதில்ல என கேப்டன் தலையில் டார்ச்சோடு டெரரிஸ்ட் வேட்டைக்கு கிளம்புவது போல் ஹெட்ஃபோனோடு பாத்திரம் தேய்க்க ஆரம்பித்துவிட்டேன். கிளம்பியபிறகு “அவங்க முன்னாடி தான் இதெல்லாம் செய்யனுமா”. இச்சமயங்களில் “இந்த அப்பள கம்பெனில மாவு பிசையக்கூட எனக்கு உரிமையில்லையா” என தார்மீக கோபத்தை டப்பர்வேரில் காண்பிப்பேன்.

எல்லாம் முடிந்து, தொப்பலாய் தொப்பை நனைந்த பனியனோடு கையை துடைத்து எதேச்சையாக திரும்பிப்பார்க்க, அங்கு “போதும், வா” என்று கனிவாய் மனைவி பார்க்கும் ஒரு நொடி பார்வைக்காக..

இந்த கட்டுரையின் முதல்வரியை மறுபடியும் படியுங்கள்.

++++++++++++++

Sunday, March 1, 2015

இரவச்சம்



அப்படி போய் நின்றதில்லை இதுவரை. எல்லாம் ஒருவாய் காபிக்கான ஆசை, இல்லை ஓசி காப்பிக்கான ஆசை.

மெக்டொனால்ட்சில் ஒரு வாரத்துக்கு வசந்தகாலத்தை வரவேற்று எந்த நேரம் போனாலும், எத்தனை தடவை போனாலும் காப்பி இலவசம். பெயரளவில் வசந்தகாலம். காலமாற்றத்தில் முதுமையியல்புகள் தள்ளிப்போயிருப்பதை போல, இப்போதெல்லாம் ஃபிப்ரவரி, மார்ச் தான் பனிப்பொழிவு ஊரையே வெளுத்துக்கட்டுகிறது. வெள்ளைக்காடாய் ஊர்.

என்ன பெரிய காப்பி? இதென்ன தஞ்சாவூர் காபி பேலஸ் ஃபில்டர் காப்பியா? மொட்டைத்தண்ணியாய் ஒரு காபித்தண்ணி. என்னதான் கேட்டுவாங்கி அதில் கள்ளிச்சொட்டாய் 18% பால்கொழுப்புடன் க்ரீமர் சேர்த்தாலும், வள்ளுவன் சொல்லும் ‘தெண்ணீர் அடுபுற்கை’ தான்.

இந்த காப்பிக்கு பின்னான உளவியலும், வியாபாரமும் சற்று புரிந்தது. எப்போதுமே என்னால் வெறும் காப்பிக்காக போய் நிற்க முடிந்ததில்லை. மகளை மாலை பள்ளிவிட்டு அழைத்துக்கொண்டு வருகையில், எதிரில் மெக்டொனால்ட்ஸ் தெரியும். “ஏதும் சாப்பிடறியா” என நான் கேட்க காத்திருப்பாள். “ஃப்ரைஸ்” ”மஃபின்” “குக்கீஸ்” என எதுவோ ஒன்றை சொல்வாள். அதை வாங்கித்தந்துவிட்டு “One small coffee too" என ஓசிக்காப்பியை வாங்கிவருவது. இந்த ஒரு வார டேட்டாவை வைத்து, ஏதும் அவுட்சோர்சிங் கம்பெனியை வைத்து ஆஃப்ஷோரில் Campaign Analytics ஓட்டக்கூடும்.

நேற்று மாலை எங்கோ கிளம்புவதற்கு முன் எங்கோ கிளம்பினேன். ஆணுக்கு எப்போதுமே “ஒரு பத்து நிமிஷத்துல வந்துர்றேம்மா” எங்கோகிளம்புதல்கள் உண்டு. சனிக்கிழமை என்பதால் இருவருமே பின்மதியம் சற்று தூங்கி எழுந்திருந்தோம். வெறும் ரசம், வெண்டைக்காய்க்கே அசத்தியிருந்தது.

“டீ போடனுமா” நீ போடு என்பதே தன்னிலை, முன்னிலை, படர்க்கை எல்லாம் குழப்பி இப்படி வந்திருந்தது.

பொதுவாய் நான் தான் வீட்டில் காப்பியோ, டீயோ சேர்த்து போடுவது. என்னளவுக்கு அவளுக்கு பழக்கமில்லை. இல்லாமல் கூட இருந்துவிடுவாள். ”உனக்கு வேண்ணா போட்டுக்கோ” என்பது பத்து வருடத்தில் “எனக்கும் கொஞ்சம் போடு” என்பதில் நிற்கிறது.

“இல்ல 5 மணிக்குள்ள கடை சாத்திருவான். வெளில பார்த்துக்கறேன்”

போன வேலை முடிந்து, பக்கத்தில் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் பராக்கு பார்த்து, மெக்டொனால்ட்ஸ்க்கு வந்திருந்தேன். வேறெதும் வாங்குவதற்கில்லை. மாலை போகுமிடத்தில் டின்னர் உண்டு. மதியசோறு இன்னமும் செரித்திருக்கவில்லை.

“What would you like to have Sir"

"Just your small coffee" அவன் பின்னே ஒட்டியிருந்த ஓசிக்காப்பி அட்டையை மெல்ல கண்ணால் ஜாடை காட்டினேன்.

“Sure. How would you like to have it?"

"Just black" உன் பால்,சர்க்கரை எல்லாம் வேணாம் என ஓசிக்காப்பி என்றாலும் என்னாலான பெருந்தன்மை.

அனு ஏதும் குடித்திருக்க மாட்டாள்.

“Wait..Can I have 1 more coffee for my wife?"

இங்கு மனைவிக்கு என்பது தேவையே இல்லாதது என்பது சொன்னபிறகே உறைத்தது.

“..Sure. How would do you like to have that?"

அவன் ஒரு வினாடிக்கும் குறைவாய் தயங்கினது போல் இருந்தது. அது என் கற்பனையா, உண்மையா தெரியவில்லை. எவ்வளவு ஓசிக்காப்பி வாங்கிக்கொள்வாய் என நினைத்தானோ? அவன் மறுத்திருந்தால் என்ன செய்திருக்கமுடியும் என்னால்? எதற்கு கேட்டு தொலைத்தேன்?

இரப்பது இறப்பதை விட கடினமானதோ? இரப்பவரது உயிர் தினமும் போய் போய் வருகிறதோ?

வெளியே வருகையில் காப்பி கோப்பைகள் கையில் அதனியல்பை தாண்டி கனமாக இருந்தது.

++++++++++++