Sunday, February 22, 2015

பிள்ளைப்பருவம்



2002-ம் வருடம். அமெரிக்கா வந்த புதிது. ஏற்கனவே ஆன்சைட் வந்து செட்டிலாகியிருந்த 4 தமிழ்ப்பசங்கள் இருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டில் ஐக்கியமானேன். இன்றோடு ஐவரானோம் (ஆனா மச்சி நீ ஹால்ல தான் படுத்துக்கனும்) என அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

பொதுவாய் ஆன்சைட் பசங்கள் தங்கும் வீடுகளில் காலேஜ் போல் எல்லாரும் ஒரே வயதில் இருக்கமாட்டார்கள். அவரவர் அனுபவம், வயது, விசாவிற்கேற்ப ஆன்சைட் வந்திருப்பார்கள். என் ரூமிலும் பாரி என்று ஒருவர் மட்டும் சீனியர். அப்போதே Tech Leadஆக இருந்தார். மற்ற 4 பேரும் கிட்டத்தட்ட ஒரே வயது. பாரியை மட்டும் “வாங்க போங்க” என்றே அழைப்போம். சமைக்காவிட்டால் வடிவேலு வெ.ஆ.மூர்த்தியை வைவது போல் நாசூக்காய் “என்ன பாரி, உங்க டர்ன்கிறதை மறந்துட்டீங்களா? உங்க தால் கொடுமைய செய்யுங்க” என லைட்டாய் மானபங்கம் செய்வோம்.

ஒரு நாள் சினிமாவோ, ஒரு டிவி ஷோவை பற்றியோ லன்ச்சில் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு கான்சப்ட் சொன்னார். “நம்ம வாழ்க்கையை படமா எடுக்கனும்டா. இப்ப காலைல கிளம்பி ஆபீஸ் வர்றோம்ல. அப்ப ஏதோ ட்விஸ்ட் இருக்கப்போகுதுன்னு ஆடியன்ஸ் நினைப்பான். ஆனா ஒன்னும் நடக்காது. மதியம் இது மாதிரி லன்ச் சாப்பிடும்போது நமக்குள்ள ஏதோ  சண்டை வரப்போகுதுன்னு நினைப்பான், ஆனா ஒன்னும் வராது. அப்புறம் வீட்டுக்கு போனப்புறம்” என தொடர்ந்தார். அப்போது கொஞ்சம் வேடிக்கையாகவும், நிறைய மொக்கையாகவும் இருந்தாலும் பாரி என்பதால் சிரித்து வைத்தோம். எங்களில் இருவருக்கு அவ்வருடம் அப்ரைசல் செய்தார் என நினைவு.

ராதாரவி மேடைகளில் சொல்வது போல் “எதுக்காக இதை சொல்றேன்னா”, இதை அதே 2002ம் வருடம் ஒரு அமெரிக்க டைரக்டர் நடத்திக் காட்டவே ஆரம்பித்துவிட்டார். (யாரு டைரக்டர்ன்னு கேக்கிறீங்களா? I'll link later. அட அவர் பேரே லின்க்லேட்டர் தான்)

Boyhood.

2002-இல் அப்போது 6 வயதாய் இருந்த ஒரு சிறுவனை மையப்படுத்தி, அவனின் அப்பா, அம்மா, அக்கா என வெகுசில நடிகர்களோடு ஒரு படத்தை ஆரம்பித்தார். அந்த பையன் வளர வளர மெல்ல 12 வருடங்கள் படத்தை எடுத்து 2014-இல் ரிலீஸ் செய்தார். மேசன் (Mason) என்கிற அந்த சிறுவன் தன் 6 வயதிலிருந்து வளர்ந்து 18 வயதில் காலேஜ் போவது தான் கதை.

அவ்வளவே அவ்வளவு தான் கதை.  ஆனால், அமெரிக்கா உருகி உருகி இந்த படத்தை கொண்டாடியது.

படத்தின் மிகப்பெரிய USP இந்த 12 வருடம் தொடர்ச்சியாய் ஒரே நடிகர்களை வைத்து படமெடுத்த கான்சப்ட் தான் என்றாலும், அதனால் மட்டும் இப்படம் கொண்டாடப்படவில்லை.  கரெக்டாய் அமெரிக்காவை குறிவைத்து அடிக்கும் வெளிகிரக ரோபாட்கள், தாலிபான்களிடமிருந்தோ, ரஷ்யர்களிடமோ தாய்நாட்டை காப்பாற்றி கெட்டவார்த்தை பேசிக்கொண்டே சாகும் மிலிட்டரி ஹீரோ படங்களை தாண்டி, ஒரு சராசரி அமெரிக்கனின் வாழ்க்கையை அச்சு அசலாய் காட்டியதே படத்தின் தனித்தன்மை.

அமெரிக்க வாழ்வினை பற்றி நமக்கு பல கற்பிதங்கள் உண்டு. பொதுவாகவே உறவுகள்,செக்ஸ் போன்ற விஷயங்களில் ஒழுங்கீனமானவர்கள்,பெரிதாய் விழுமியங்கள் (வேல்யூஸ்) இல்லாதவர்கள்,  குடும்பம்,குட்டி பந்தபாசம் எல்லாம் குறைவு,  சுயநலக்காரர்கள் என பலப்பல.

அதில் பெரியதாய் உண்மையில்லை.

ஒரு சராசரி அமெரிக்கன் வாழ்க்கையில் எதுவுமே given இல்லை. எதையும் பிரயத்தனப்பட்டே அடைகிறான். சொகுசெல்லாம் ப்ராட் பிட், ஆஞ்சலினா ஜோலி போன்றவர்கள் குழந்தைகளுக்கு வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஒரு அமெரிக்கன் 10 வயதில், வீட்டில் பாத்திரம் தேய்க்க, புல் பிடுங்க, பனி தள்ள பழக்கப்பட ஆரம்பிக்கப்படுகிறான்/ள். இது பாக்கெட் மணிக்காக கூட அல்ல. “உனக்கு கூரை தருகிறேன். சோறு போடுகிறேன். நீயும் பொறுப்போடு இரு” என உணர்த்துவதற்காக. பள்ளிகளில் bullying (உடல்/மன ரீதி துன்புறுத்தல்கள்) உண்டு. ஹைஸ்கூல் வரும்போது பேட்டை பீட்சா கடையிலோ, மளிகைகடையிலோ அவர்கள் டீஷர்ட்டை போட்டுக்கொண்டு குறைந்தபட்ச ஹவர்லி ரேட் கூலிக்கு உழைப்பான். கக்கூஸ் வரை கழுவுவான். நன்கு படித்தால் அரசுக்கல்லூரியில் சல்லீசாய் படிப்பு என்பது கிடையாது. கல்லூரிப்படிப்பு வெகு காஸ்ட்லி. பெற்றோர்களுக்கு சுமாரான வேலையென்றால், தம்பி நீ காசு சேர்த்து படிச்சுக்கோப்பா என அனுப்பிவிடுவார்கள்.

அதற்காக, பெற்றோர்கள் அவர்கள் கடமையை செய்கிறார்கள் இல்லை என்பதில்லை. நாம் இப்போது சொல்லும் “ஐடில வேலை நிரந்தரம் இல்லை. பென்ஷன் கிடையாது” மோஸ்தரில் தான் அமெரிக்காவே 60,70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகிறது. கவர்ன்மெண்ட் வேலையே நிரந்தரம் கிடையாது. பிரவேட் கம்பெனி போல் அரசே திவாலாகிவிட்டது என மொத்தமாய் layoff செய்வார்கள். ஒரு அமெரிக்கன் ஸ்டூடண்ட் லோனில் வாழ்க்கையை ஆரம்பிப்பவன், கார் லோன், 30 வருடம் மார்ட்கேஜ் (வீட்டு லோன்), பிறகு கடைசிக்காலத்தில் தன் வைத்தியம், முதியோர் விடுதி, கல்லறைக்கும் சேர்த்தே பணம் கட்டிவிட்டு தனியே செத்துப்போவான்.

கஞ்சா குடிக்கியாகவோ, அக்யூஸ்டாகவோ ஆகாத ஒரு நல்ல அமெரிக்கன் தன் குடும்பத்துக்காக உழைப்பதில், குழந்தைகளை வளர்ப்பதில் நம்மைவிட எவ்விதத்திலும் குறைந்தவனல்ல. இங்கு மனைவி மட்டும் கர்ப்பம் சுமப்பவளல்ல. "We are pregnant" என்பதே பதம். நம்மை விட அவர்களின் priorities சற்றே மாறுபடலாம். தன் டாஸ்மாக் கணவனை சகித்துக்கொண்டு ஒரு பெண் இங்கு வாழ்வதை போல் நடக்காது. போடா என டைவர்ஸ் கொடுத்துவிட்டு, கௌதம் மேனனின் சிங்கிள் மதர் போல் காலையும்,மாலையுமாய் 2 வேலை பார்த்து தன் பசங்களை வளர்த்து, அதே சமயம் தனக்கான துணையையும் தேடியடைவாள் ஒரு அமெரிக்கள்.

அப்படிப்பட்ட ஒரு தாயின் வாழ்க்கையாகவும் Boyhood படத்தை காண இயலும். அவளின் உறவுச்சிக்கல்கள், மணமுறிவுகள், கிளாசிக் அமெரிக்க "Your children and my children are playing with our children" வாழ்க்கைமுறை, இதனூடே அவள் தனக்கான படிப்பு, வேலை என சுய அடையாளத்தை தேடிக்கொள்வதாகவும் படம் நகர்கிறது. முதல் கணவனின் (குழந்தைகளின் பயலாஜிக்கல் தகப்பன்) பொறுப்பற்றத்தனம், மறுகணவனின் குடிப்பழக்கம், மறுமறுகணவனின் சிற்றப்பன் கொடுமை, கணவன் கொடுமை செய்கிறான் எனத்தெரிந்தும், அவனது குழந்தைகளை காக்கமுடியாது தன் குழந்தைகளை மட்டுமே காக்க முடிந்த அமெரிக்க ‘கார்டியன்’ சட்டச்சிக்கல்கள் என இவ்வாழ்க்கை முறையின் சிக்கலான முடிச்சுகளையும் தொட்டுச்செல்கிறது படம்.

மேசனின் அக்காவாக வருபவளின் நடிப்பும், அவளின் துடுக்குத்தனமான பேச்சும், அட்டிட்யூடும், வளர்ந்த பின் தன் தம்பியின் மீதும், அம்மாவின் மீது வரும் அக்கறையுமாய் வெகு இயல்பு. ஒரு பெண்குழந்தையை இங்கு பெற்று வளர்ப்பதால் நன்கு தொடர்புப்படுத்திக்கொள்ள முடிகிறது. மேசனின் (பெற்ற) அப்பா கதாபாத்திரம் ஒரு அற்புதம். பெரிய பொறுப்பில்லாமலும், கொஞ்சம் கையாலாகத்தனத்தோடும் இருந்தாலும், குழந்தைகள் மேல் பேரன்போடு இருக்கிறான். சம்பிரதாய தகப்பன்த்தனத்தோடு இல்லாது விளையாடுகிறான், அவர்கள் மனதை படிக்கிறான். வெகு நாசூக்காய் வாழ்வை புரிய வைக்கிறான். எனக்கு என்னை திரையில் பார்ப்பது போல் இருந்தது.

படத்தில் வசனங்கள் மிகபெரிய பலம். வெகு இயல்பாகவும், அதே சமயம் எளிதில் கடந்துவிடமுடியாததாகவும் உள்ளது. பசங்களை வளர்த்து ஆளாக்கி, மகன் வீட்டை வெளியேறும் தருணத்தில் தாய் கேட்பாள் “சில மோசமான திருமணங்கள். எப்படியோ பாடுபட்டு உங்களை வளர்த்துட்டேன். இப்ப வீட்டை விட்டு போறீங்க. இனி? சாவுக்கு வெயிட் பண்ணனுமா? வாழ்க்கைன்றது அவ்வளவே அவ்வளவு தானா? இதுல என் வாழ்க்கை எங்க போச்சு?”. படத்தை pause செய்துவிட்டு பேஸ்த் அடித்தாற்போல் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். வெறும் 13 வருடங்கள் இங்கு வாழ்ந்து, ஒரு இரண்டுங்கெட்டான் வட அமெரிக்க வாழ்க்கை வாழும் எனக்கே இப்படியென்றால், ஒரு அமெரிக்கனுக்கு அவனையே திரையில் பார்த்துக்கொள்வது போல இருக்குமென நினைக்கிறேன்.

12 வருடங்கள் எடுத்த படமென்பதால் சுப்பாண்டி மண்டை போல் இருக்கும் ஆப்பிள் கம்யூட்டர்,காலத்துக்கேற்ப மாறும் செல்ஃபோன்கள், கார்கள், அமெரிக்க தேர்தல்கள், புஷ், ஒபாமா என மாறும் அதிபர்கள், இராக் போர், அமெரிக்க வாழ்வின் நாடித்துடிப்பான பேஸ்பால், கேம்ப்பிங் என Forrest Gump சாயலோடு காலமாறுதல்களையும் உறுத்தாது தொட்டுச்செல்கிறது.

நிதானமாய் 166 நிமிடங்கள் எந்த அவசரமும் இல்லாது ஓடுகிறது இல்லை நடக்கிறது படம். ஆனால் இன்னும் 166 நிமிடங்கள் போயிருந்தாலும் பார்த்திருப்பேன்.

நம் வாழ்க்கை முடியவேண்டும் என நாம் நினைக்கிறோமா என்ன?

+++++++++++++

Friday, February 20, 2015

டங்காமாரியும் ஊதாரியும் பின்னே ஞானும் - நாகிர்தனா பார்ட் 2




முதல் தடவை கேட்கும்போது “பாட்டாடா இது? பாட்டே இல்ல. எனக்கிந்த பஞ்சாயத்துல மரியாதை இல்ல. கேட்டா யூத்துக்கு பிடிக்கும்பாங்க” என நாற்காலியை விசிறிவிட்டே போனேன்.

ஒத்துக்கறேன். தாய் பத்தினிங்கிறதை ஒத்துக்கறேன். ஆனா நெக்ஸ்ட்டு மீட் பண்ண பண்ண, பாடல் நாக்குப்பூச்சி போல் நாடி,நரம்பெல்லாம் ரட்சகன் நாகார்ஜுனா போல் ஊடுருவியது. இப்போதெல்லாம் “அம்ம பாட்டுதேன்” என இதையே முதலில் போடுகிறேன்

எது? டங்காமாரி.

ஏன்? பார்த்துருவோம் மச்சி..

முதலில், ஹாரிஸ் ஜெயராஜ். ஹாரிஸை திட்டுவது காந்தியை திட்டுவது போல் ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது. என்னவோ யாருக்குமே அவர்களுக்கென ஒரு பாணி இல்லாதது போல் “எல்லாம் ஒரே மாதிரி இருக்குபா” என ஒரே மாதிரி சொல்வார்கள். இந்தியில் இப்போது சார்ப்பான மீசிக் புள்ள அமித் த்ரிவேதி. ரேண்டமாய் அவரின் ஒரு பத்து இந்திப்பாட்டை கேளுங்கள். இல்லை ஒரு இந்திக்கார “அமித்”துக்கு 10 தமன்/இமான்/அனிருத் பாட்டை போட்டு காட்டுங்கள். இன்னாபா எல்லாம் ஒரேமாதிரிக்கீது என்று தான் கமெண்ட் வரும். மற்றவர்கள் ஒரே டைப்பில் போட்ட ஆறு பாட்ட்டை சேர்த்து கோர்த்து பாடினால் ’மெட்லி’யென்பார்கள். ’டெட்லி சாங் கும்ஸ்” என்பார்கள். ஆனால், ஹாரிஸென்றால் ஜெட்லியாகிவிடுவார்கள். காப்பி விஷயத்தில் ஹாரிஸ் ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல. மற்றவர்கள் முற்றும் துறந்த முனிவர்களும் அல்ல என்பதே நிஜம். மறுப்பீர்களேயானால், ட்ரிப்ளிகேன் கூகிள் ராவுத்தரிடம் வெத்தலையில் மை போட்டு பாருங்கள்.

சரி, பாட்டுக்கு வருவோம். “அஞ்சல” எல்லாம் மெட்ரிகுலேசன் ஸ்கூல் ஆண்டுவிழாவில் மைலாப்பூர் பையன்கள் ஆடுவது. கானா என்றோ குத்து என்றோ ஒத்துக்கவே மாட்டேன். உண்மையில் ”திருனெல்வேலி அல்வாடா”வுக்கு பிறகு இப்பாடலில் தான் அக்மார்க் குத்து குத்தியிருக்கிறார் ஹாரிஸ். ஃபீல்டில் ஃபேட் ஆகிறார் என்பவர்களையும் சேர்த்து ஊமக்குத்து குத்தியிருக்கிறார். வெகு கேட்ச்சியான ட்யூன், சரியான பீட்ஸ், நேர்த்தியான ஆர்கெஸ்ட்ரேஷன், ஆடிக்களைத்தவர்கள் மூச்சு வாங்குவதற்காகவே ராக்கம்மா கையத்தட்டு “ம்ம்ம்” ஹம்மிங் போல் நடுவில் வரும் நாதஸ்வரம் என எல்லாம் நாதஸ்வரம் சீரியல் லைவ் எபிசோட் போல கனகச்சிதம்.

அடுத்த முக்கியமான காரணம், பாடல் வரிகள். ஜாலியாய் எழுதுறேன் என பலர் இப்போது கோவம் வருவது போல் காமெடி செய்கிறார்கள். அதில் முதன்மை பா.விஜய். ஜாலி எல்லாம் வாலியோடு போச்சு. இப்போதைக்கு சுகுர்ராய் ஓரளவு ஸ்மைல் வரவைப்பதை போல் எழுதுவதில் விவேகா தேறுவார். இந்தப்பாடலை எழுதியது ரோகேஷ் என்ற அசிஸ்டண்ட் டைரக்டர். கே.வி.ஆனந்தின் ஒன் ஆஃப் தி சிஷ்யப்புள்ள. அனேகன் ஆடியோ விழாவில் தனுஷ் நடிகர்களின் தேசிய குணமான தன்னடக்கத்தோடு கூப்பிட அசோசியேட்களின் தேசிய உடையான ஜீன்ஸில் அதைவிட தன்னடக்கத்தோடு மேடையேறினார்.


கானா பாடல்களுக்கு என ஒரு தராசு உண்டு. தொழுதூர் மோட்டல் “மாம்பழம் விக்குற கண்ணம்மா’ லெவலுக்கு தரைடிக்கட்டா இருக்கனும், ஆனால் அரைடிக்கட்களுக்கு மட்டுமாய் titillating-ஆக இருக்கப்படாது.  OMRக்கு ஹெட்ஃபோனிக்கொண்டே போகும் ஜெண்டில்மென் தலைவாசுக்கும் பிடிக்கனும். என்னை போன்ற ராஜாவோடு பால்யம், ரகுமானோடு பதின்மம் என வளர்ந்த புள்ளைங்களுக்கு சற்று சுத்தபத்தமாக புழங்குவது போலவும் இருக்கனும். கே.வி.ஆனந்தின் சிஸ்யப்புள்ள இதை நன்கு பேலன்ஸ் செய்திருக்கிறார். “அயுக்கு மூஞ்சி மீனாச்சி, மூஞ்சை கழுவி நாளாச்சி..ஆடப்போறேன் மங்காத்தா, தொர்த்தின் வருது எங்காத்தா..” எல்லாம் கேர்ள்ஃப்ரெண்டோடு காபி ஷாப்பில் வரம்பு மீறாது குறும்பு செய்வது போல் நின்று விளையாடுகிறது.

“பலான கை ரேகா..அது லுக்கு விடும் ஷோக்கா..உன்ன ஆக்கிடும்டா பேக்கா..நீ கழட்டிக்கடா நேக்கா’ போன்றவை மேலே சொன்ன மைல்டு ஸ்மைலை வரவழைத்தால், அடுத்த வரியில் ”பொண்ணுங்களை கேவலமா எண்ணாத மச்சி..உன் கூட வந்து பொறக்கலையா அக்கா தங்கச்சி” என தத்துவத்தையும் தூவி பேலன்ஸ் செய்கிறது பாடல். கிட்டத்தட்ட எல்லா வரிகளுமே, ஜெயா டிவி ‘தேன்கிண்ணத்தில்’ போடப்படும் கண்ணதாசன் - விசு காலத்து பாடல்கள் போல் மீட்டருக்கும், மேட்டருக்கும் கச்சிதமாய் விழுந்திருக்கிறது.

ஒரு விருந்தின் டெசர்ட் போல், I saved the best for the end.


அது, பாடகர்கள். 3 பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல் இது. பல்லவி போன்ற மெயினான வரிகளுக்கு மரணகானா விஜி, ஏவிஎம்ராஜன் சிவாஜிக்கு ஒத்து ஊதுவது போல் தொடரும் வரிகளுக்கு தனுஷ், சரணத்தில் DSP,மணிசர்மா க்ரூப்பின் நிலைய வித்வான் நவீன் மாதவ் என மூவரணி.

இப்பாடலின் வைல்ட்கார்ட் மரணகானா விஜி தான்.

ஹாய் மதன் போல் ’இன்ஃபாக்ட் பார்த்தீங்கன்னாக்க’, இப்பாடலில் விஜியின் வரிகள் மட்டும் உயர்ந்த சுருதியில்,ஏழரை கட்டையில் இருக்கும். தனுஷ் வரிகள் எல்லாம் சேஃபாய் லோ பிட்ச்சில் அமைய, நவீன் மாதவ் எல்லாம் தனுஷால் சரணம் சமாளிக்கமுடியாமல் இறக்கப்பட்ட லோ-ஆர்டர் பேட்ஸ்மென். தனுஷும், நவீன் மாதவும் ஒன்றும் சும்மா இல்லை. விஜி வரிக்கு வரி சிக்சாய் பறக்க விட, இருவரும் பாந்தமாய் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்கின்றனர். குறிப்பாய் நவீன் தன் 4 வரிகளை ஸ்லாக் ஓவர் ஜடேஜா போல் அடித்தே ஆடியிருக்கிறார்.

இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த தனுஷையும், நவீனையும் போதுமான அளவு அலசிவிட்டதால் மரணகானா விஜிக்கு வருவோம்.

கானா பாடகர்கள் என எடுத்துக்கொண்டால் முன்பு தேவாவின் தம்பி சபேஷ் சரியாய் கானாவுக்கான குரல், உச்சரிப்பு மீட்டரை பிடிப்பார். இப்போது கானா பாலா, அந்தோனிதாசன் என பலருண்டு. இவர்களுக்கெல்லாம் நன்கு பாட வரும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் குரல் ஓரளவுக்கு மேல் பேசாது. ஹோம் ‘பிட்ச்’ தாண்டி வெளியில் சோபிக்காது. பிட்ச் பிரச்சனையின்றி ஏழரை கட்டையில் பாடக்கூடிய வேல்முருகன் போன்றவர்களுக்கு சென்னை வழக்கில் சொடக்கு பால் ஆட தெரியாது.

இங்கு தான் எந்த பால் போட்டாலும் அடிக்கிறார் மரணகானா விஜி. விஜியை நாம் (நாம்னா நான் ஒருத்தன் தான். பன்மைல எழுதினாத்தான் ஒரு புதியதலைமுறை கட்டுரை எஃபக்ட் இருக்கும்) முன்பே கவனித்ததுண்டு. சொல்வதெல்லாம் உண்மைக்கு முன்பே “இப்படி பண்றீங்களேம்மா” என கதையல்ல நிஜம் செய்தாரல்லவா லட்சுமி? அதில் விஜி பிணத்தோடு வாழ்பவர் என விஜய்டிவி ‘பிதாமகன்’த்தனமாய் ஒரு எபிசோட் செய்தது. அதில் ‘கரைமேல் பிறக்க வைத்தானி’ல் எம்ஜியார் உபயோகித்த தப்பட்டையை அடித்துக்கொண்டு ’என்ன இழவுடா’ என சில இழவு கானா பாடல்கள் பாடினார்.


விஜியின் பெரிய பலம், அனந்த் வைத்தியநாதன்கள் சொல்லும் ‘டைனமிக்ஸ்’. தெர்மோ டைனமிக்ஸ் அல்ல, கொடுத்த காசுக்கு மேல் கூவும் தர்ம டைனமிக்ஸ். அதாவது “மச்சானை திண்ணையில மூடிப்படுக்கச்சொல்லு” என எஸ்பிபி giggleவாரே கடைசியில்? “எங்க அதை பண்ணு” என மனோ கேட்க பரத்கள் பாடி ஷவர் வாங்குவார்களே..அந்த மிக்ஸ். இந்தப்பாடலுக்கு தேவையான சென்னை ஸ்லாங், உச்சரிப்பு, பாடும் விதம் என எல்லாமே கச்சிதமான (டைன)மிக்சிங்கில் கொடுத்திருப்பார் விஜி.

இல்லேம்பீங்களா? பாடலின் 4.07 மார்க்கரில் “பொட்டு பூவு வெஸ்ஸுகினு புடவய தான் கட்டிகினு”வை கவனியுங்கள். அவரை போல் அக்மார்க்காய் “வெஸ்ஸுகினு” பாடும் இன்னொருவரை காண்பியுங்கள். என் ஒரு paycheque-ஐ தருகிறேன். ஆச்சா, அடுத்து கடைசி “ஆடப்போனேன் மங்காத்தா, தொர்த்தின் வருது எங்காத்தா”வுக்கு வாருங்கள்.  4.47இல் மைக்ரோவினாடியில் எங்காத்தாவில் வரும் கிக்லிங்கை கண்டுகொண்டீர்களா? இதை வரவழைக்க சூப்பர்சிங்கர்கள் தடவப்போகிறார்கள். அப்படி பாட முடிந்தால், முடிந்தவுடன் ஒரகடம் வீட்டை TDS இல்லாமல் கொடுத்து விடுங்கள் விஜய் டிவிக்காரர்களே.

அட ஆளே நார்த் மெட்ராஸ், கானா பாடுறது கஸ்ட்டமா ‘எல்லாம் ஐவாஸ்’ என தில்லுமுல்லு ஷார்ட்நேம் சுப்பி போல் சொன்னீர்களேயானால், நோ நெவர். ஒவ்வொரு பல்லவியின் முடிவிலும் விசுவின் சம்சாரம் கேசரி போல் டகுடகுவென வழுக்கிச்செல்லும் “உன்ன அட்ச்சிடுவேன் மெரள” போன்ற கடைவரிகளை கவனியுங்கள். ப்ளாக்தண்டரில் லொங்குலொங்குவென ட்யூபை மேலேறி எடுத்துச்சென்று, அங்கிருந்து கீழே தள்ளிவிட ட்யூப் வழுக்கிக்கொண்டு குபுக்கென முதல் பள்ளத்தில் விழும் போது ஜெர்க் ஆவோமே, அதை அவர் குரலில் கொண்டு வந்திருக்கிறார் விஜி. இதான் கர்னாடிக்ல கமகம், சினிமாப்பாட்டுல சங்கதி, ஹிந்தில சித்தாரேய்..

மொத்தத்தில் மரணகானா விஜி மரண மாஸ்.


பொதுவாய், இப்பாடல் பல வயது கடந்த, கடப்பவர்களுக்கு கடுப்பாவதை கவனிக்கிறேன். இப்பாடலை இடக்கையால் தட்டிவிடுவது எளிது. யூத்ஸை திட்டுவதும் எளிது. கவனித்தீர்களேயானால், யூத்துகள் எல்லாவற்றையும் கொண்டாடிவிடுவதில்லை. இது கூட வந்த “அதாரு உதாரு” தல பாடலென்றாலும் இந்த அளவுக்கு கொண்டாடிவிடவில்லை. அவர்களும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு அரையடி ஸ்கேல் வைத்தே தான் இருக்கிறார்கள். கலவை சரியாய் இல்லாவிடில் மொக்கை என ஒரு வார்த்தையில் ஜோலியை முடிக்கிறார்கள்.

இதை சொல்லியே ஆகனும். “அறம் செய்வோம் புறம் செய்வோம்” என இன்று டீசண்ட்டாய் சொன்னாலும், நாமும் இதை விட மோசமான வரிகளை எய்ட்டீஸ், நைண்ட்டீஸில் கடந்து தான் வந்திருக்கிறோம். நமக்கெல்லாம் ‘பலான’ என்ற பதத்தையே அறிமுகப்படுத்தியது நாயகன் தான். ’வாராவதி இறக்கம்’ என்றால்,  “அமரன் வந்து நின்னா கிறக்கம்” என அடுத்த வரியை உங்கள் மனது ஆட்டோமேட்டிக்காய் இறக்குவதை நானறிவேன். ’இந்து’வை தாண்டி வந்து விடவில்லை எதுவும்.

நாமும் எல்லாம் கடந்துதான் வந்திருக்கிறோம். நம் பசங்களையும் கடக்க விடுவோம்.

ஜாலியாய் கவலையில்லாது ஊதாரியாய் இருப்பது ஒரு வயது வரை தான்.

அதுவரை டங்காமாரி ஊதாரியை ரசித்துவிட்டுத்தான் போவோமே.

+++++++++++

(இது பிடித்திருந்தால் இதுவும் பிடிக்கலாம் -> (நாகிர்தனா திரனனா - ஒரு மார்க்கமான இசைப்பார்வை)

Monday, February 16, 2015

0ºF

 (சீரோ டிகிரி ஃபேரன்ஹீட்)



அந்த ட்வீட்டை பார்த்திருக்கக்கூடாது. எல்லாம் அதில் ஆரம்பித்தது. பிழைத்துக்கிடந்தால் முதலில் ட்விட்டரையே தலைமுழுகனும். ஃபேஸ்புக்கையும் சேர்த்து. ஏன் இணையத்தையே. பிதற்ற ஆரம்பித்திருந்தேன்.

ஒரு சோகையான ஞாயிற்றுக்கிழமையாகத்தான் நாள் ஆரம்பித்தது. அனு வாரயிறுதிகளில் மட்டும் ஏதாவது வக்கனையாக சமைப்பாள். அவளை நேரில் கண்டால் ’ஞாயிறு மட்டுமா’ எனக்கேட்டு, ஒரு விவாகமுறிவுக்கு காரணமாகாதீர்கள். பிசிபேளாபாத் + உருளைக்கறி என தமிழக சைவர்களின் சம்பிரதாய சண்டே சமையல். சாப்பிட்டவுடன் நினைத்தது போல் சிறுதூக்கம் போட்டிருக்க வேண்டும். போடாது ட்விட்டரை எட்டிப்பார்த்ததில் ஆரம்பித்தது வினை.

”திருவாதிரை களி & கூட்டு  pic.twitter.com/K9CBaivBUh”

நிலாமகள் போட்ட ட்வீட். அதாவது சமைத்ததை படமெடுத்து போட்டது. களி குழையாது திரிதிரியாய் படத்தில் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.

நிலாமகள் உண்மையான பெயர் என்னவாக இருக்கும்? அது இருக்கட்டும். இன்னைக்கு திருவாதிரையா?

நிலாமகளுக்கு மென்ஷன் செய்து கேட்டதில் ஆமாம் என பதில். அம்மாவுடன் இருந்தவரை திடீரென ஒரு நாள் சம்பிரதாய சமையல் இல்லாது அசட்டுத்தித்திப்புடன் ஒரு களியும், ஏழுகறி கூட்டும் சமைத்தால் அன்று திருவாதிரை. அனு எப்படி மறந்தாள்? பொதுவாய் இது போன்றவற்றை மறப்பாளில்லை. என்னை விட பக்திக்காரி. ஆனால் கேட்க இயலாது. வேலையும், குழந்தையுமாய் என்னைவிட அவளுக்கு நெருக்கடி ஜாஸ்தி.

அட, திருவாதிரை என்றால் கோவிலில் ஆருத்ரா தரிசனம் இருக்குமே?

தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கு இயல்பாகவே சிவனிடம் ஒரு வாஞ்சை உண்டு. சிவன் சற்று கடுகடு சாமி. முருகா, கணேசா, கிருஷ்ணா என கொஞ்ச முடியாது. ஏண்டாப்பா படுத்தற என்ற உரிமைமீறல்கள் செய்ய இயலாது. ஆனால் உள்ளுக்குள் நெக்குருக வைக்கும் சாமி.

”நான் ஈவினிங் கோவிலுக்கு போறேண்டி”

“நான் வரமுடியாது. வந்து..”

”புரியுது. நான் போறேன்”

“சிவசத்தியநாராயணாவா, கற்பக விநாயகரா?”

“சிவசத்தியநாராயணா கோயில் தான்”

வசிப்பது டொராண்ட்டோ, புலம்பெயர் தமிழர்களின் தலைநகரம் என்றபடியால் கோவில்களுக்கு பஞ்சமில்லை. வசித்த பேட்டையிலேயே சாமிக்கு ஒன்றாய், இனக்குழுவுக்கு ஒன்றாய் கோவில். வட இந்திய ராம் மந்திர் ராமநவமிக்கு, சதுர்த்தி என்றால் கற்பகவிநாயகர், எல்லா சாமிக்கும் வேகமாய் சலாம் போட்டு லட்டு பிரசாதம் என்றால் குஜராத்தி ஹிந்து சபா என இந்த ஊர் ஒரு அகண்ட பாரத விலாஸ்.

சிவசத்தியநாராயணா கோவில் நம்மூர்க்காரர் கோவில். சந்துரு குருக்கள் என்ற வேலூர் பக்க ஐயர் ஒருவர் முதலில் தான் வந்து காலூன்றி, கரணம் போட்டு ஒரு குடவுன் கட்டடத்தை கோவிலாக மாற்றி, இளையாண்குடி ஆதீனத்திலிருந்து சல்லீசாய், ரிலீஜியஸ் ப்ரீஸ்ட் விசாவில் 2 பையன்களை வரவைத்து மைக்கில் சத்தமாய் ருத்ரம் சொல்லவைத்து, ‘அர்ச்சனா ஸ்பான்ஸர்ஸ் ப்ளீஸ் பய் டிக்கட் இன் ஆபீஸ்’ என கல்லா அவர் கண்ட்ரோலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் கோவில்.  உள்ளே நுழைந்தால் நம்மூர் கோவில் போலவே இருப்பதால் எனக்கு பிடித்தம்.

ஆறுமணி நடைதிறப்புக்கு கிளம்புவதற்குள் இருட்டி விட்டிருந்தது. மணி ஐந்தரை கூட ஆகியிருக்கவில்லை. கனடாவின் குளிர்காலத்துக்கென ஒரு குரூர முகம் உண்டு.

”ஸ்னோ பெய்யறது வெளில. எப்படி போவ?”

“ரொம்பல்லாம் இல்ல. அப்படியே போயிடுவேன். இன்னிக்கு ட்ராஃபிக் இருக்காது”

“அப்படியே வர்றப்ப வால்மார்ட்ல வாங்கிடு” என லிஸ்ட் வந்தது. 

முக்கால்வாசி பாப்பாவுக்கான பள்ளி உணவுத்தேவைகள். பாப்பாவுக்கென்றால் தட்டிக்கழிப்பதில்லை. “என்ன பாப்பா பாப்பான்னுட்டு? எட்டு முடியப்போகுது” என்பதையும் சட்டை செய்வதில்லை.  

அவசரமாய் கிளம்பியதில் உடனே கவனிக்கவில்லை. சற்றுப்போன பிறகே காரின் பெட்ரோல் இண்டிகேட்டர் கடைசிக்கோட்டுக்கும் வெளியே விட்டுவிட்டு ஒளிர்வது தெரிந்தது. விட்டுவிட்டு ஒளிர்வது பிரச்சனையில்லை. தொடர்ச்சியாக ஒளிர்ந்தால் தான் ஓடும் ஆயுசு கம்மி.

பெட்ரோகனடா அட்டை என்ற வஸ்து கையில் இருந்தததால் அவர்கள் பன்க்கை தேடிக்கொண்டே ஓட்டினேன். லிட்டருக்கு 3 செண்ட் சேமிக்கலாம். அதாவது இந்த ஊர் 3 பைசா. மொத்தமாய் 50 லிட்டர் போட்டால், ஒன்றரை டாலர். ஒரு ப்ளாக் காப்பிக்காச்சு. சாலையின் நான் போகும் பக்கத்தில் ஒரு பெட்ரோகனடாவும் தென்பட காணோம். வேறு சில கம்பெனிக்காரர்கள் பன்க் தான் கண்ணில் பட்டது. வேண்டாம், ஒரு லிட்டருக்கு 3 செண்ட். ஒரு வரக்காப்பியாச்சே. 

கோவிலுக்கு போய்விட்டு வரும் வழியில் ஒரு பெட்ரோகனடா பார்த்த ஞாபகம். அதுவரை தாங்கும். என் காரை பற்றி எனக்கு தெரியும். ஒரு நண்பனை போல், வாழ்க்கைத்துணையை போல், வண்டியும் பழகிவிடுகிறது. தேவைகள், அதீத அழுகைகள், எச்சரிக்கைகளை புரிந்துகொள்ள முடிகிறது. புரிந்து உதாசீனப்படுத்தவும் முடிகிறது.

கோவிலில் மிதமான கூட்டம். ஆருத்ரா தரிசனம் முடிந்துவிட்டிருந்தது. ஒரு தேர்ந்த பொம்மலாட்டகாரன் ஆட்டுவிப்பது போல், மக்கள் சாமி கும்பிட்டு விட்டு, பிரகாரம் சுற்றிவந்து, நவக்கிரகம் சுற்றி, உண்டியலில் காசு போட்டு, பிரசாதம் வாங்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். கழுகுப்பார்வையில் ஒருநாள் எந்த கோவிலையாவது கவனிக்க வேண்டும். மனம் ஏன் இப்படி கண்டதும் யோசிக்கிறது? இன்று சிவனை கவனிப்போம்.

சிவலிங்கத்துக்கு பட்டுவேட்டி கட்டியிருந்தார்கள். கொஞ்சம் நன்றாகவே வேண்டிக்கொண்டேன். போனவருடம் பட்ட பாடு அப்படி. வாழ்க்கை கடுமையாக மாறமாற மனம் எந்த உதவியையும் ஏற்க தயாராகிவிடுகிறது. கடவுளிடம் இறைஞ்சுதல் அதில் முதன்மையாய் போய்விடுகிறது. கோவிலை விட்டு கிளம்புகையில் பிரசாதத்துக்கு வைத்த களியை கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டேன்.

”சௌக்கியமோன்னோ”

கோவில் ஆபிசில் சந்துரு குருக்கள் தென்பட்டார்.

“சௌக்கியம் மாமா”

“வர்றதில்லையே ரொம்ப. வேலையோ?”

“ஆமாம் மாமா, சரி கெளம்பறேன்”

“ம்ம்ம்”

சந்துரு குருக்கள் தொடர்ச்சியாய் சத்தியநாராயணபூஜை, ஆஞ்சநேயருக்கு வடமாலை, வைகுண்ட ஏகாதசி, அபிஷேகம் என பலதுக்கும் 50,100 டாலர் என உபயதாரராய் இருக்கச்சொல்லிக்கேட்டு சலித்திருந்தார். என் கோவில் செலவுகள் 2, மிஞ்சிப்போனால் 5 டாலரை தாண்டுவதில்லை. முழு அபிஷேகத்தை உட்கார்ந்து இருமணிக்கூர் பார்க்கவும் பொறுமையில்லை. இவனால் கோவிலுக்கு பெரியதாய் பிரயோஜனமில்லை என நினைத்தோ என்னவோ, ரொம்ப சௌஜன்யமாய் சிரிப்பதில்லை இப்போதெல்லாம்.

யோசித்தபடி வண்டியை கிளப்பினேன். அடுத்தது வால்மார்ட். இல்லை பெட்ரோல். ஒரு கிலோமீட்டரில் டாம்க்கன் ரோடு சந்திப்பில் ஒரு பெட்ரோகனடா உண்டு. காரின் வயிற்றை ரொம்ப காயப்போடக்கூடாது. ஏற்கனவே வண்டியை பெரியதாய் பராமரிப்பதில்லை. சரியாய் துடைப்பது கூட இல்லை. ஆனா பாவம், ஒரு பழகிய குதிரை போல் அமைதியாய் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறது.

இப்போது கார் தானாய் மெதுவாகச் செல்ல தொடங்கியிருந்தது. என்ன நடக்கிறது என நொடியில் புரிந்தது. 

“டேய், இப்போ வேணாம். பாலத்தை தாண்டினா..”

வண்டி கேட்பதாயில்லை. விக்குவது போல சற்று அலைந்து, ஆக்சிலேட்டரை தாண்டிய சுதந்திரத்தோடு மெல்ல ஊர்ந்து நின்றே விட்டிருந்தது. சிறிது தூரத்தில் பெட்ரோகனடா ஒளிர்ந்தது. பாலம் ஏறியிருந்தால் பன்க். அடச்சை..

மனம் வேகமாய் யோசித்தது. ஒளிர்ந்து அமிழும் எமர்ஜென்சி லைட்டை முதலில் போட்டேன்.  கும்மிருட்டில் பின்னால் வேகமாய் வந்த கார்க்காரர்கள் இடிப்பது போல் வந்து, சுதாரித்து, மனதுக்குள் திட்டி, முறைக்க ஒளியில் என் முகம் தேடி, அடுத்த லேனுக்கு நகர்ந்துகொண்டிருந்தார்கள். யாரும் நிறுத்தவில்லை, என்ன ஏது என கேட்கவில்லை. ரோட்டில் ஈ,காக்கா இல்லை. அருகில் ஒரு சாலையோர விளக்கு கூட இல்லை.

ஹீட்டர் ஃபேன். அந்த சனியன் தான் காரணம். என் கணிப்பில் இன்னும் 5 கிலோமீட்டராவது ஓடவேண்டியது. வண்டியின் ஹீட்டர் ஃபேன் பெரியதாய் வைத்து அது மிச்சமிருந்த பெட்ரோலை வேகமாய் குடித்திருக்கிறது. 
வண்டியின் அத்தனை லைட்களையும் அணைத்தேன். சாவியை திருப்பி மறுபடி இயக்க முற்பட்டேன். கொஞ்சம் ஓடினால் போதும். ம்ஹூம் கார் கிளம்புவதாயில்லை.

வெளியே பனி சற்றே தடித்த வெண்துகளாய் சீராக பெய்து கொண்டிருந்தது. குளிரை பொருட்படுத்தாது வண்டியை விட்டுவிட்டு பன்குக்கு நடக்கலாம். ஆனால் காரை அப்படியெல்லாம் விட்டுவிட்டு போகக்கூடாது. போனாலும் நம்மூர் போல் 2லிட்டர் கோக் பாட்டிலில் பிடித்து தரமாட்டான்கள். யாரையேனும் அழைத்தேயாகவேண்டும். ஒழுங்காய் வருடாந்திர கார் ரோட்சைட் சர்வீஸ் எடுத்துத்தொலைத்திருக்கலாம். இப்போது கூப்பிட்டால் வந்து ஒரு லிட்டர் பெட்ரோல் தர 50, 60 டாலர் தாளித்துவிடுவார்கள். ஒன்றரை டாலர் சேமிக்க ஆசைப்பட்டு 60$ செலவு..

நண்பர்கள் யரரையாவது அழைக்கலாமா என ஃபோனை நிமிண்டினேன். சட்டென கணேஷின் ஞாபகம் வந்தது. இப்படியாவது எனக்கு முதல்முறையல்ல. முன்பொரு முறையும் இதே போல் வண்டி நின்று உதவியிருக்கிறான். என்னத்துக்கோ வீட்டில் ஒரு கேனில் 5 லிட்டர் பெட்ரோல் வைத்திருப்பான். கொஞ்சம் கறாராய், முன் ஜாக்கிரதையாய் வாழ்பவன்.

“மச்சி சொல்லுடா”

”வீட்லதான் இருக்கியா? கேஸ் தீர்ந்து போச்சு வெளீல. வெச்சுருக்கியா?”

“அடப்பாவி மறுபடியுமா? ஒரு 2 லிட்டர் இருக்கும். எங்க இருக்க?”

“சிவசத்தியநாராயணா கிட்டக்க. டாம்கன் ரோடு பாலத்துக்கு கொஞ்சம் முந்தி”

“சிவா டெம்பிளா? அங்கதான் கெளம்பிட்டிருக்கோம்”

”ஓ எப்போ வர்ற?”

”சித்ரா குழந்தைகளை கிளப்பிட்டிருக்கா. அங்கயே இரு ஸ்ரீ. ஒரு 15 மினிட்ஸ்குள்ள வந்துருவேன். பரவாயில்லைல?”

”மச்சி கொஞ்சம் சீக்கிரம் வாடா”

சற்று உயிர் வந்தது. பிரச்சனைகளுக்கு அருகிலேயே தீர்வுகளும் ஒளிந்திருக்கிறன.

ஆனால் தீர்வுகளுக்கு நம்மை முடிந்தவரை சோதிக்க பிடிக்கும் போலும்.

வண்டியை மொத்தமாய் அணைத்திருந்த படியால் மெல்ல உள்ளே குளிர் ஊடுருவ தொடங்கியிருந்தது. குளிரில் 15 வருடம் இருந்து பழகிப்பழகி குளிரை அலட்சியப்படுத்த தொடங்கியிருந்தேன். கோவிலில் எளிதாய் கழட்டுவதற்கு தோதான தேசலான ஷூவை போட்டுக்கொண்டு வந்தது பிசகு. முதலில் கால்விரல்கள் விறைக்கத் தொடங்கின. உஷ்ணம் வேண்டி ஷூவுக்குள் கால்விரல்களை உராய்ந்தேன். பொதுவாய் இதுபோன்ற குளிர்கால காத்திருத்தலில் ஒன்றுக்கு வேறு வந்துவிடும். இன்று பரவாயில்லை.. இல்லை அதை யோசிக்கக்கூடாது. யோசித்தால் வந்துவிடும். ஆமாம், அதெப்படி யோசித்தால் வந்துவிடுகிறது? ஷுகர் ஏதும் இருக்குமோ?

டேய்..வந்து தொலைடா சீக்கிரம்.

சொன்ன 15 நிமிடங்கள் ஆகியிருந்தது. அலைபேசியின் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருந்தது மனதும், கண்ணும். மனம் பதினைந்தாவது நிமிட முடிவில் ஒரு தீர்வை எதிர்பார்த்திருந்தபடியால், அதற்கு மேல் தாங்கமுடியாது பரபரக்க தொடங்கியிருந்தது. குளிர் தாங்கமுடியாது போய்க்கொண்டிருந்தது. உடம்பை குறுக்கிக்கொண்டேன்.

டேய்..வந்து தொலைடா சீக்கிரம்.

வெளியே -18 டிகிரி செல்ஷியஸ் காட்டியது அலைபேசி. -18 டிகிரி செல்சியஸ் என்றால் 0 டிகிரி ஃபேரன்ஹீட் வருமே? F = 9/5C + 32, C = (F-32)5/9 இந்த இரு ஃபார்முலாக்களும் மறப்பதேயில்லை ஏனோ.

டேய்..வந்து தொலைடா சீக்கிரம்.

இருபத்தைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. ஜாக்கெட்டில் இருந்த தலையை மூடும் ‘ஹூடி’யை இழுத்துவிட்டுக்கொண்டேன். குளிர் தாங்கமுடியாது போய்க்கொண்டிருந்தது. க்ளவ்ஸை தாண்டி கைவிரல்கள் குளிரில் வலிக்கத்துவங்கியிருந்தன. உடல் தானாய் நாய் மேல் தண்ணீர் பட்டவுடன் சிலிர்த்துக்கொள்வது போல் சீரான இடைவெளியில் சிலிர்த்து அடங்கியது. எதிர்வழியில் வரும் ஒவ்வொரு காரின் ஒரு நொடி வெளிச்சத்திலும் கணேஷின் காரை கண்கள் தேடியது.

டேய்..வந்து தொலைடா சீக்கிரம்.

வீட்டிற்கு போனவுடன் அனு என்ன சொல்வாள்? அவளிடம் சொல்லலாமா? சொல்லாது இருக்கமுடியுமா என்ன? கோவிலில் எத்தனை நேரம் இருப்பேன், வால்மார்ட்டில் எப்போது இருப்பேன் எல்லாம் ஒரு கணக்கில் வைத்திருப்பாள். அவளிடம் எதுவும் மறைக்க முடிவதில்லை வரவர. மனதில் நினைப்பதை கூட சொல்லிவிடுகிறாள்.

”அப்பவே சொன்னேன், ஸ்னோல போகாதன்னு”

“அப்பவே சொன்னேன் ஒழியுது 70 டாலருக்கு ரோட்சைட் சர்வீஸ் வாங்குன்னு”

“அப்பவே சொன்னேன் கேஸ் போட்டுக்கோன்னு”

”அப்பவே சொன்னேன்..”

அவள் திட்டினால் கூட பரவாயில்லை. சனியன் வீட்டுக்கு போகவேண்டும். இங்கேயே உறைந்து சாவதற்கு அது பரவாயில்லை. எவனோ ஒரு சைனீஸ்காரன் குடும்பத்துக்காக ஒரேகானில் 3 நாட்கள் குளிரில் அலைந்து செத்தானே? இப்போது மூக்கில், உதட்டில் இருக்கும் ஈரப்பதமும் உறைய ஆரம்பித்திருந்தது. மூக்கை உறிஞ்சினால் ஐஸ் கெட்டித்துப் போய் கர்கர்ரென ஒலி வந்தது. உடல் தனக்கு தேவை வேப்பம், அதை எப்படியாவது கொணர் என சமிக்ஞையாய் சொல்கிறது.

டேய்..வந்து தொலைடா சீக்கிரம்.

எதிர்பக்க சாலையில் ஒரு கார் வந்து நின்றது. கணேஷ் தலை தெரிந்தது. வெகுவேகமாய் இறங்கினேன். வெளியில் காற்றோடு சேர்த்து இன்னும் ஏகத்துக்கு குளிர்ந்தது. சாலையை கடந்து அவன் காரை அடைந்தேன். அவனும் இறங்கி காரின் ட்ரன்க்கை திறந்திருந்தான். ஒரு கேனை எடுத்து நீட்டினான்.

“மச்சி, 2 லிட்டர் இருக்கும்னு நினைக்கிறேன். இனி நீ பார்த்துப்பல்ல? இல்ல இருக்கனுமா?”

உள்ளிருந்து சிறிய வெளிச்சத்தில் சித்ரா புன்னகைக்க முற்பட்டாள். குழந்தைகள் கார் நின்றது தெரியாது விழித்தன. அவர்களை இதற்குமேல் படுத்தக்கூடாது.

“இல்ல பார்த்துப்பேன். நீ கெளம்புடா. ரொம்ப தேன்க்ஸ்”

அதற்குப்பின் ரோட்டை கடந்து, என் காரின் டேன்க்கை திறந்து, கேனில் இருந்த பெட்ரோலை கொட்டி, டேன்க்கை மூடி, காரை உயிர்ப்பித்தது கனவு போலவே நிகழ்ந்தது. ’இர்றா, வழிய வழிய உனக்கு ஊத்தறேன்’ என கறுவிக்கொண்டே பெட்ரோகனடாவுக்கு வந்து, மேல் பத்திகளில் பிரசித்திப்பெற்ற 3 பைசா சேமிப்பு அட்டையை தேய்த்தால் ஸ்க்ரீன் கிறீச்சிட்டு உள்ளே கடையில் ஆளை பாரு என்றது. 

இத்தனை கஷ்டப்பட்டதுக்கு அந்த 3 பைசாவை விடுவதாயில்லை. ‘பே இன்சைட்’ தேர்வு செய்து காரின் பெட்ரோல் டான்க்கை திறந்து, அதன் வாயில் பம்ப்பை திணித்தேன். கையில் பம்ப்பை இறுகப்பிடித்திருந்த ஒவ்வொரு நொடியும் குளிரில் கை விறைத்தது. அதை உணராது வண்டி அதன் பாட்டுக்கு 1,2 என மெல்ல 55 லிட்டரை நிதானமாய் குடித்து, நிரம்பியவுடன்  ஏப்பம் போல் ஒரு சிறு ஒலியோடு குடிப்பதை நிறுத்திக்கொண்டது. டான்க்கை மூடி பன்க்குக்கு நடுவாந்திரமாய் இருந்த சிறுபொட்டிக்கடைக்கு வேகமாய் குளிரில் நடந்தேன். 

“பெட்ரோகனடா கார்டு ஆகலை வொர்க்” 

கோர்வையாய் பேசமுடியவில்லை. குளிரில் உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. 

”ஆமா ப்ராப்ளம் இருக்கு. ஆனா உள்ள வேலை செய்யும். நம்பர் 7 தானே? பிரச்சனையில்ல. இங்க பே பண்ணிடுங்க”

தெளிவான ஆங்கிலத்தில் சொன்னான் கடையில் இருந்தவன்.

சரியென வெளியேற எத்தனித்தேன். கிளவுஸ்க்குள்ளேயும் விரல்கள் விறைத்து கதவை திறக்க சிரமப்பட்டேன்.

”இருங்க. அந்த vent கீழ நில்லுங்க ஒரு நிமிஷம்”

”என்ன?”

“இல்ல சூடா காத்து வரும் அதுக்கு கீழே”

கடையில் இருந்தவனை இப்போதுதான் முழுதாய் பார்த்தேன். வட இந்தியனா, பாகிஸ்தானியா என சொல்லமுடியாத ஒரு தெற்காசியன். இளைஞனாக இருந்தான். இங்கு படிக்கிறான் போலும்.

“கைய தூக்கி அந்த வெண்ட் கிட்ட காட்டுங்க. இன்னும் பெட்டர்”

“இல்ல வெளில கொஞ்சநேரத்துக்கு குளிர்ல இருந்தேன். அதான் தாங்கமுடியலை”

புன்னகைத்து “ரிலாக்ஸ் மை ஃப்ரெண்ட்” என்றான்.

சொன்னதுபோல் கையில் நேரடியாய் உஷ்ணக்காற்று பட்டவுடன் அதற்காகவே காத்திருந்தாற்போல் விரல்கள் தன்னிச்சையாக விரிந்து சூட்டை வாங்கிக்கொண்டது.

”குளிர் இப்போ பரவால்லியா” ஹிந்தியில் கேட்டான்.

“ரொம்ப. உயிரே வந்தது போல இருக்கு” என்றேன் புன்னகைத்தபடி.

இப்போது உரையாடல் அறுபட்டு ஒரு அடர்த்தியான மௌனம் நிலவியது. அதற்கு மேல் ஒரு பெட்ரோல் கடைக்காரனிடம் என்ன பேச? க்ரெடிட்கார்ட் மிஷினின் சிறுசத்தம் கூட பெரிதாய் கேட்டது. பெட்ரோலுக்கு காசு தந்து கிளம்ப எத்தனித்தேன்.

“இப்போ என் ஷிஃப்ட் முடியற நேரம்” என மௌனத்தை கலைத்தான்.

இதை எதற்கு என்னிடம் சொல்கிறான் எனத் தெரியவில்லை.

“என்ன?”

“இல்ல என் ஷிஃப்ட் முடியற நேரம். இனிமே கடை இருக்காது. வெளில கேஸ் ஸ்டேஷன் மட்டுந்தான்”

“நல்லது குளிருக்கு இதமாய் வீட்டுக்கு போய் தூங்கு” சின்னதாய் சிரித்தேன்.

“உடனே எங்க போறது? வெளில குப்பையை மூட்டைக்கட்டி, சாமானை உள்ள வெச்சுட்டு, கொஞ்சம் ஸ்னோ க்ளியர் செஞ்சு, பஸ்சை பிடிச்சு…” என்னோடு பேசிக்கொண்டே வெளியே வந்தான்.

“ஹ்ம்ம்..சரி பார்ப்போம்” என என் காருக்கு நடந்தேன். 

வெளியில் விற்பனைக்கு அடுக்கியிருந்த இஞ்சின் ஆயில் கேன்களை ஒவ்வொன்றாய் கடைக்குள்ளே கொண்டு போக தொடங்கினான். விழுந்திருந்த பனியை காற்று புழுதி போல பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. காற்றின் வேகத்துக்கு கடையின் கண்ணாடி கதவை அவன் அழுத்தி திறக்கவேண்டியிருந்தது ஒவ்வொரு முறைக்கும். திறந்த வேகத்தில் அவன் கேனோடு உள்ளே நுழைவதற்குள் காற்றில் படார் என சாத்திக்கொண்டது

அவனை நோக்கி நடந்தேன்.

அவனோடு நானும் சில இஞ்சின் ஆயில் கேன்களை எடுத்து உள்ளே வைக்க ஆரம்பித்தேன்.

குளிர் இப்போது அவ்வளவாக தெரியவில்லை.

++++++++++


(ஜனவரி மாத ‘தமிழ்’ மின்னிதழில் வெளிவந்த என் சிறுகதை இது)


Sunday, February 8, 2015

என்னை அறிந்தால்



“நாங்க 2 பேரு. அனுவுக்கு நான். எனக்கு அனு. We were made for each other. நிறைய ஊர் சுத்துவோம், படம் பார்ப்போம். ஒருநாள் எங்க வாழ்க்கைல குஷி வந்தா. It changed everything for the better. படத்துக்கு போறது குறைஞ்சுது. எங்க வாழ்க்கையே கவுதம் மேனன் படம் மாதிரி ஆச்சு. Then one day, என்னை அறிந்தால் வந்தது. For old times sake, we went to it”.

மேல் பத்தியை ஹஸ்க்கி வாய்ஸில் படித்துக்கொள்ளுங்கள். என்னை அறிந்தால் பற்றிய ரைட்டப்பை இப்படி ஆரம்பிப்பது தானே சரியாக இருக்கமுடியும்? Lets go with the flow.

நேரடியாக பாய்ண்ட்டுக்கு வருவதென்றால் என்னை அறிந்தால் மிகவும் தரமான அவுட்புட். ரொம்ப நாட்களுக்கு பிறகு மிகவும் ரசித்துப்பார்த்த படமாய் வந்திருக்கிறது.

அஜீத்தின் ஸ்பெஷாலிட்டி அவரின் grace. அதை அவர் ரசிகர்கள் மட்டுமல்ல, பொது ரசிகர்களும் ரசிக்கும்படி மிக அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் மேனன். அஜீத்தை இவ்வளவு கிரேஸ்ஃபுல்லாக, கம்பீரமாய் காண்பிக்க இனிவரும் இயக்குநர்கள் திணறப்போகிறார்கள். The bar's been raised. 4 வெவ்வேறு முக அமைப்புகளில் வருகிறார். எல்லாமே பளிச். அவரின் சமீப வருடங்களின் அத்தனை பெர்ஃபார்மன்ஸையும் என்னை அறிந்தால் தூக்கிச்சாப்பிட்டு விடுகிறது. கவுதமு அஜீத்தை செதுக்கிறாப்போல, பாண்டியா !!

Having got Ajith out of the way, கவுதம் மேனனுக்கு வருவோம். ஒரு சேசிங்கிலோ, சண்டைக்காட்சியிலோ ஹீரோ ஒருவரை காப்பாற்றுவது பெரிய/புதிய விஷயமல்ல. அதற்கு முந்தைய, பிந்தைய சீன்களின் காத்திரம், உண்மைத்தரமே அந்த சண்டைக்கு ஒரு வீரியத்தை, அர்த்தத்தை கொடுக்கும். இதில், ஒரு நண்பனின் குழந்தையை காப்பாற்றி விட்டு, வசனமில்லா ஷாட்களில், அந்த நண்பன் அணைத்துக்கொள்ள, ஒரு கூச்சத்தில் அஜீத் அதை ஏற்றுக்கொள்ள..கவுதம் சொல்லி செய்தாரா, அஜீத் நடிப்பா..என்ன ரசவாதமோ? It's magical.

போலவே, அஜீத்துக்கும் அவர் மகளுக்குமான காட்சிகள். Subtle & underplayed. உண்மைக்கு மிக அருகில். அனுஷ்காவை வீட்டிற்கு கூட்டிவந்து, மெல்லிய பின்னணி இசையில் அப்பாவும் மகளுமாய் சப்பாத்தி தட்டும் மாண்டேஜ் காட்சிகள்..கவித கவித. போலவே, Ajith's proposal to Trisha. வே.வியின் “ஆ வெல், இனி நீயும் மாயாவும் என் சொத்து” பழைய வொயினின் இன்னொரு கிளாஸ் தான். இருந்தாலும் நல்ல aged red wine அலுக்குமா என்ன?

கவுதம் படங்கள் sophisticated, A செண்ட்டர்களுக்கானது, செயற்கையானது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு ‘தென்சென்னைத்தனம்’ உண்டு தான். ஆனால் அதுவும் ஒரு வாழ்க்கைமுறை தானே? கிட்டத்தட்ட நாம் அனைவருமே ஒரு உயர்தென்சென்னை வாழ்க்கைக்கு தானே நகர யத்தனிக்கிறோம்?

போலவே, காவல்துறையை இவ்வளவு அழகாய், ’அட போலீஸ் வேலை அவ்ளோ ஒன்னும் மோசமில்லப்பா’ என எண்ணுமளவுக்கு காண்பிக்க ஆரம்பித்தவர் அவரே. எல்லோரும் முத்துக்கருப்பன் டிஐஜி லெவலில் அதிகாரிகளை காட்ட, மீசையில்லாத Asra Garg டைப் அதிகாரிகளை காட்டுபவர் கவுதம். அஸ்ரா கர்க்-களும் உள்ளடக்கியது தானே காவல்துறை?

கவுதம் படங்களின் இன்னொரு பலம் டீடைலிங். எந்த தமிழ்ப்படத்திலும் எந்த ஆஸ்பத்திரி, ரூம் நம்பர், எந்த தெரு என சொல்லமாட்டார்கள். ஆனால் கேரக்டர்கள் கரெக்டாய் போய் சேர்ந்துவிடுவார்கள். கவுதம் இதற்கு நேரெதிர். மின்னலேயில் கூட விவேக் ரீமாசென் அட்ரசை கண்டுபிடிப்பதில் ஃபோன் ஏரியா கோட் வைத்து லாஜிக் வைத்திருப்பார். அஜீத் இதில் ‘ராயப்பேட்டை பீட்டர்ஸ் ரோட் ப்ரிட்ஜுக்கு வாங்க. ஆபோசிட்ல ராங்சைடுலயே வாங்க” என்றளவுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்கிறார். இது சினிமா பாஷையில் படம் சற்று lag ஆகும் தன்மையை கொடுக்கலாம். ஆனால் அதுதான் யதார்த்தம்.

எனக்கு படத்தில் விவேக்கும் நிரம்ப பிடித்தது. சொல்வது 6,7 பன்ச் தான் என்றாலும் (அதில் சால்ட்ன்பெப்பர் போன்றவை அவர் திணிப்பு), It all worked big time. அருண்விஜய் நடிப்பை தாண்டி ஒரு brilliant, shrewd choice. படத்தின் ஓட்டம்,சேசிங் காட்சிகளில் டெம்பொ ஏற்ற ஒரு அத்லெட்டிக் வில்லனுக்கான தேவையை சரியாக பூர்த்தி செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவு, இசை இரண்டுமே ப்ரில்லியண்ட். Harris is back. அந்த நண்பர் மகளை காப்பாற்றும் சீக்வன்ஸ் முழுவதுமே பின்னணி இசைக்கான பாடமாக வைக்கலாம். பாடல்கள் surprisingly ஸ்க்ரீனில் இன்னமுமே எடுபடுகிறது. ‘அதாரு உதாரு’ அந்த ஸ்மார்ட் போடா போடி டைரக்டர் விக்னேஷ் எழுதினதாமே (VIPயில தனுஷின் மெயின் இஞ்சினியராக கலக்கின தம்பி அவுருதான்).

மற்றபடி, It's not a perfect movie. No movie is. கவுதமே சொல்வதுபோல் அஜீத்தும், ரத்தினமும் திடீரென கூப்பிட்டு ஆர்டர் கொடுத்ததால் கதை ‘பண்ணப்பட்ட’ படமே. அவரின் மற்ற பட சாயல் உண்டு. அதனாலென்ன? யாருக்கு தான் சாயலில்லை? சரவணபவனுக்கு அதே சாம்பார் டேஸ்ட்டை எதிர்ப்பார்த்து தானே போகிறோம்?

என்னை பொருத்தவரை, ஒரு நல்ல ஜனரஞ்சக படமென்பது, When I come out of the movies, I must be totally charged & pumped up. மண்டே தைரியமா ஆபீஸ் போறாமாதிரி ஒரு ஃபீலிங்கை கொடுக்கனும். இந்த ஹீரோ மாதிரி ஒரு நாளாவது கெத்தா வாழனும்டா என எண்ண வைக்கனும்.

என்னை அறிந்தால் அதை சாதித்திருக்கிறது.

சாதித்த அஜீத் + கவுதம் மேனனுக்கு வாழ்த்துக்கள். You guys nailed it.

Friday, February 6, 2015

நீராலானது உடம்பு

 முன்னொரு காலத்துல ஒரு ராஜா இருந்தான். அது நாந்தான். காலம்பற எழுந்து பல்லை தேய்ச்சுட்டு நன்னா திக்கா காப்பி போட்டு குடிச்சுட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பானாம்.

ஒருநாள் காப்பி குடிக்கறச்ச கரடி மாதிரி ஒருத்தர் சொன்னாராம் “படவா, ஃபேஸ்புக், வாட்சாப்ல வாட்டர் தெரபி ஃபார்வேர்ட் எல்லாம் படிக்கிறதில்லையா? வெறும் ஜோக் தான் கேப்பியா? காலம்பற எழுந்தோன்ன முதல்ல ஒரு மொட்டைத்தம்ளர் ஃபுல்லா ஹாட் வாட்டர் குடிடா.. மூலம், பௌத்திரம், துரிதஸ்கலிதம், விரைவீக்கம்னு எலெக்ட்ரிக் ட்ரைன் நோட்டீஸ்ல ஒட்டின எந்த வியாதியும் வராது”ன்னாராம். அடடே, ஈசியா இருக்கறதேன்னு ஃபாலோ பண்ண ஆரம்பிச்சானாம்.

இப்படியே போயிண்டு இருக்கறச்ச, இன்னொருத்தர் “அம்பி, உனக்கு நெய்வேலி அனல்மின் நிலையம் மாதிரி உஷ்ண உடம்பு”ன்னாராம். ”அதுக்கு, தொப்புள்ள எண்ணெய் வெச்சுக்கனுமா சார்”ன்னு கேட்டானாம். “நோ வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணில நைட்டு ஊறவெச்சுட்டு காலம்பற குடி. அது கேஸ், உஷ்ணம், கெட்ட சமாச்சாரம் எல்லாம் எடுத்துரும். காலைல ஃப்ரீயா போகும்”ன்னாராம்.

சரி, வாழ்க்கைல ரொம்ப அடிப்பட்டுருக்கார் போலருக்கு, சரியாத்தான் சொல்வாருன்னு இவனும் முதல்ல வெந்தய வாட்டர், அப்புறம் ஹாட்வாட்டர்னு குடிக்க ஆரம்பிச்சானாம். அதாரு சைடுல மாணிக்கம் நம்பரை கேக்கறது? மாணிக்கம்னா வாய் கோணிக்கும்..

இப்படியே இருக்கறச்ச, அதே கரடி ஃப்ரெண்டுகிட்ட “நான் ஃபிட்டாறதுக்கு
ஜிம்முக்கு போகனுமாமா, நான் கம்பு சுத்தனுமாமா, பஸ்கி தண்டால்லாம் எடுக்கனுமாமா. வேற ஏதும் உபாயம் உண்டா ஸ்வாமீ”ன்னு கேட்டானாம். அதுக்கு அவர் சொல்றார் “ஒரு கிளாஸ் ஹாட் வாட்டர்ல லெமனும், ஹனியும் போட்டு குடிடா. ஜிம்முக்கு போகாமலே தொப்பை குறையும். லிவருக்கு நல்லது.”ங்கிறார். சரின்னு, அதையும் ஃபாலோ பண்ணா, அது மளிகைக்கடைக்காரன் லிவருக்குன்னு அப்புறம் தான் தெரிய வர்றது.

இன்னொரு நாள், வயசாயிண்டே போறது, ஸ்வீட்லாம் சாப்பிடாதேன்னு ஆத்துகாரி ஸ்ட்ரிக்ட்ரா சொல்றா ஸ்வாமின்னோன, “உங்களுக்கு வெண்டைக்காய் புடிக்குமாஆஆஆ”ன்னு அவர்ட்டருந்து ஒரு முக்கியமான கேள்வி வந்து விழறது. அடடே, வெண்டக்காய் ஃபேவரைட் வெஜ்ஜி ஆச்சே..ரோஸ்ட் பண்ணா நன்னா வெச்சித் திம்பேனே”ன்னானாம்.

அதுக்கு அவர் “அபிஷ்டு, அது அப்படியில்ல. 2 வெண்டக்காயை குறுக்கால வெட்டி ஒரு கிளாஸ் தண்ணில ஊறவெச்சு, காலம்பற அது ஊறின தண்ணியையும், அந்த வெண்டைக்காயையும் சாப்பிட்டா சுகர்லாம் வரவே வராது”ன்னார். அடடே தேவலையேன்னு, நாலாவதா ஒரு கிளாஸ்ல தண்ணிய ரொப்பி வெண்டைக்காயை ஊறவெச்சு சாப்பிட ஆரம்பிச்சான். அது கொழகொழன்னு குத்திப்புடுங்க, அதை உள்ள தள்றதுக்கு கடேசியா இன்னொரு கிளாஸ் தண்ணி குடிக்கவேண்டி போறது.

இப்படி அஞ்சு கிளாஸ் தண்ணிக்கப்றம், ஒரு கிளாஸ் காப்பியும், டிபனுக்கு இன்னொரு கிளாஸ் ஓட்ஸ் கஞ்சியும் குடிச்சுட்டு, காலம்பற மீட்டிங்குக்கு போய் உட்கார்ந்தா,முட்டிண்டு வர்றது. மீட்டிங்கா, லாங் சைஸ்ல போயிண்டே இருக்கு. இவனுக்கா ஆத்திரமா வர்றது..சரின்னு எழுந்து நாசூக்கா போயிட்டு வந்தானாம். போயிட்டு வந்து உக்கார்றானாம். கொஞ்சநேரத்துல மறுபடி முட்டிங் டவுன். மறுபடி கெட்டிங் அப். பாஸ் ப்ராஜக்ட் எப்படி போறதுன்னு கேட்க, இவன் “நிக்காம போறது”ன்னானாம்.

இதை வாட்ச் பண்ணிண்டே இருந்த பாஸ் கேட்டாராம்

“ஏண்டா, நம்ம ஆபீஸ்ல ப்ராஜக்ட் பார்க்க வர்றியா, பாத்ரூம் பார்க்க வர்றியா”