Monday, August 26, 2013

ராஜா என்கிற ஆர்.டி.பர்மன்

இது இசைஞானி இளையராஜாவின் மேகா பாடல்களை பற்றிய விமர்சனம் அல்ல. விமர்சிக்க எனக்கு தகுதியில்லை.




பாலிவுட்டில் ஆர்.டி.பர்மன் என்றொரு இசை லெஜண்ட். 60களில் அறிமுகமாகி ஹிந்தி இசையுலகின் ஜாம்பவான் 70களில். ஆர்.டி.பர்மன் பாடலை, கிஷோர்குமாரின் வெண்கல குரலில், தலையை ஆட்டிக்கொண்டு பாடிய ராஜேஷ்கண்ணாவை, இந்திய திரையுலகின் முதல் ‘சூப்பர்ஸ்டார்’ஆக்கி அழகு பார்த்தான் ரசிகன்.  ‘பஞ்ச்சம்’என செல்லமாக அழைக்கப்பட்ட ஆர்.டி.பர்மனின் எனக்கு பிடித்த ஒரு பாடல்  இது.

நிற்க,ஆர்.டி.பர்மன் 80களில் திடீரென மார்க்கெட் இழந்தார்.பப்பிலஹரி கால டிஸ்கோ எராவில் காணாமல் போனார். ஒருபடம் விடாது அவரை புக் செய்த ப்ரட்யூசர்கள், ஆளை மாற்றினர். கயாமத் சே கயாமத் தக் போன்ற படங்களுக்கு புக் செய்து கழட்டிவிட்ட கதைகள் உண்டு. ஆனால், பேட்டிகளில் அவரை லெஜண்ட் என்றனர் (கமல் ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல).

அப்படிப்பட்ட ஆர்.டி.பர்மன், ஃபீல்ட் அவுட்டான 10 வருடங்களுக்கு பிறகு, 1994இல் 1942 லவ் ஸ்டோரி என்ற பீரியட் படத்துக்கு இசையமைக்கிறார். பாடல்கள் பெரிய ஆரவாரம் இன்றி வெளிவருகிறது. ஒவ்வொரு பாடலும் சொல்லிவைத்தாற்போல் அத்துணை புதிதாய், அமர்க்களமாய். கிறுகிறுத்துப் போகிறான் ரசிகன். ட்யூனாகட்டும், இசைக்கோர்வையாகட்டும், தாளக்கட்டாகட்டும்..கிறங்கிப்போகிறான் ரசிகன்.

ஆனால் படம் வெளிவரும் முன், ஆர்.டி.பர்மன் இறந்து போகிறார். ஒரு அசுர சாதனை செஞ்சுட்டு அதுக்கான பலனை பார்க்கறதுக்கு முன்ன செத்துப்போறான் மனுஷன் ! ஃபிலிம்ஃபேர் எப்போதுமில்லாத பழக்கமாய் posthumousஆக 3 அவார்டுகள் கொடுத்து அவரை கௌரவிக்கிறது. தன்னை ஒதுக்கிய பாலிவுட்டுக்கு தன்னை நிரூபித்து விட்டே இவ்வுலகை விட்டு மறைகிறான் ஒரு மகா கலைஞன்!

எனக்கு மேகா அவ்வுணர்வை தந்தது. Raja is back. ராஜா ஆர்.டி.பர்மன் ஆகவேண்டாம். நீடூழி வாழ்ந்து இன்னும் குறைந்தது 25 ஆண்டுகள் தன் புதிய ராஜபாட்டையில் பயணிக்கட்டும்.

எனக்கு ராஜாவை மிகவும் பிடிக்கும். பின் எழுபதுகளில் பிறந்த யாருக்கு பிடிக்காது? ஆனால் 2000த்திற்கு பிறகான அவர் பாடல்களை எவ்வளவு ரசித்தேன் என சொல்லத்தெரியவில்லை. வால்மீகி,ஸ்ரீராமஜெயம் எனத்தேடிதேடி கேட்டாலும் எங்கோ ஒரு சிறுகயிறு அறுந்தது. நீ தானே என் பொன்வசந்தம் எல்லாம் அந்நியமாக அறிமுகமாகி, மெல்ல மனதில் குடியேறிக்கொண்டது வேறு கதை.

ராஜா மேகாவில் ஆடியிருப்பது இசை தாண்டவம். விண்டேஜ் ராஜா. ராஜா காலத்தோடு சேர்ந்து பயணிக்கவில்லை என்றெல்லாம் அவரின் பின்னடைவுக்கு காரணமாக சொல்வார்கள். அதெல்லாம் கப்சா. அடிப்படையில் ராஜாவிடம் ரசிகன் ரசித்தது அவர் ட்யூன்களை. அதிலுள்ள உருக்கத்தை. ஆர்க்கெஸ்ட்ரா, இண்டெர்ல்யூடில் 100 வயலின் போன்ற ஜரிகைகள் எல்லாம் பிறகு. மேகாவில் ராஜா அவ்வகையில் தன்னை மீட்டெடுத்திருக்கிறார். அடிப்படையான ட்யூன்கள் ஒவ்வொன்றும் நின்று விளையாடுகிறது, புகுந்து புறப்படுகிறது.

போலவே, இசைக்கோர்வைகள். கேட்டுப்பழகின ‘அட இந்தப்பாட்டு மாதிரி இருக்கே’இசைத்துணுக்குகள்..ஆனால் எவ்வித துருத்தலுமின்றி, இக்காலத்துக்கான மோஸ்தரில் அந்த ரசவாதம் நிகழ்ந்திருக்கிறது. இசையை விவரிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பாடல்களை பட்டியல் போட்டு, இது பாஸ், ஆவரேஜ் எனப்போவதில்லை. பாடல்களை கேட்டு, உங்கள் முத்தை நீங்களே எடுங்கள். எனக்கான முத்துக்கள் ‘ஜீவனே’ மற்றும் ‘முகிலோ மேகமோ’ (ராஜா பாடியது, ராஜா குரலுக்கான bias உண்டெனக்கு). சொல்லப்போனால் ஆல்பத்தில் உள்ள 5 புதிய தனிப்பாடல்களில் ‘கள்வனே’ தவிர மற்ற எல்லாமே நல்முத்துக்கள். Who knows, that might grow on me too..

ராஜா பாடல்களில் ரசிகன் ரசிப்பது ராஜாவை இல்லை. தன்னை. தன் ரசனையை. அவரின் இசை தன் வாழ்வானுபவங்களோடு போடும் முடிச்சுகளை, தன் கிளறும் நினைவுகளை, குழந்தை கையில் உள்ள முடிக்கமுடியாத ஐஸ்க்ரீமாய் உள்ளங்கையில் உருகி ஓடும் மனதினை. அவ்வகையில் மேகா ஒரு உச்சக்கட்ட தனிமனித அனுபவம். ஜன்னல் ஓர விரைவுப்பேருந்தின் காற்றில் எங்கோ, ஏதோ ஞாபகங்களில் நெகிழ்ந்துருகி, தன்னை இழக்கும் தருணம்.

மேகாவுக்கான ஒரு டீசரில், ராஜா கடைசியில் “You got it?" என கேட்பார்.

யெஸ் ராஜா, வீ காட் இட் !