Tuesday, August 19, 2014

நோய்நாடி நோய் முதல் நாடி


அப்போது நான் +1 சேர்ந்திருந்தேன். பத்தாவதில் மிக நல்ல மார்க். சாதாரண அரசுப்பள்ளி தான். ஓம்பதாம் வகுப்பு வரை சுமார் மாணவனாக இருந்தவன், டெந்த்தில் எப்படி அந்த வேகம் வந்ததென்றே தெரியவில்லை. “டேய், படிப்பாளி ஆயிட்டடா” நண்பர்கள் மரியாதையாய் பார்த்தார்கள். அப்பாவிற்கு நம்பிக்கை வந்திருந்தது. +2விற்கு கேட்டதெல்லாம் வாங்கித்தரும் முனைப்பிலிருந்தார். தனி ஷேவிங் செட், அவரின் வேட்டிகள் அணிந்துகொள்ள, ஸ்கூட்டரை ஓட்ட, ஸ்கூலுக்கு 1,2 ரூபாய் கைச்செலவுக்கு என பல சலுகைகள் தந்திருந்தார்.

நியாயமாய் நான் +2விலும் அதே வேகத்தோடு படித்திருக்க வேண்டும். அப்போது எனக்கு ஒரு பிரச்சனை வந்தது. இந்த நெற்றி இருக்கிறதே, அதில் ஒரு பக்கத்தில் சிறிய சிறிய, தொட்டால் சொறசொறப்பாக இருக்கும் கட்டிகள் வர ஆரம்பித்தன. முதலில் பரு போன்றது என கண்டு கொள்ளவில்லை. சூட்டுக்கட்டி தானாய் போயிடும், எண்ணெய் தேய்ச்சு குளிடா என அம்மா சொன்னாள். கையாலே சொரண்டி எடுத்துவிடலாம் பார்த்தேன். அது இன்னும் உக்கிரமானது. சனியன் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வேறு வந்தது. நான் +2 வந்திருக்கையில் ஐந்து ரூபாய் காய்ன் சைசில், அதே தடிமனில் வளந்து விட்டிருந்தது. இப்போது யோசித்தாலும் எப்படி அவ்வளவு வளரவிட்டேன் என புரிபடவில்லை. சிறிய டவுனில் டெர்மடாலஜிஸ்டுக்கு எங்கே போவது? 80 வயது கிருஷ்ணமூர்த்தி டாக்டர் வேறு ப்ராக்டிசை நிறுத்தியிருந்தார். ஆயூர்வேத வேதா டாக்டர் மட்டுமே கதி. அவரின் கோரோஜன சூரணத்துக்கு வேலைக்காகவில்லை.


பசங்கள் கண்ணை பார்த்து பேசுவது குறைந்து ஒன்றரை இன்ச் மேலேயே வெறித்தனர். அது அருவருப்பாய் பட்டவர்கள் 2 நொடிக்கு மேல் என் முகத்தை பார்க்காது திருப்பிக்கொண்டனர். ’பரு மண்டையன்’ என பட்டபெயர் வேறு. சனியன் முதுகுல எங்கயாவது வந்திருக்கக்கூடாது. நெத்திலயா வரணும்? கெமிஸ்ட்ரி ராஜசேகர் சார் ”இன்னாய்யா ஆச்சு, ஆன்சர்லாம் கான்ஃபிடண்டா எழுத மாட்றியே” என மாடல் எக்சாமில் அங்கலாய்த்தார். எப்போதும் எனக்கு பின்னே வரும் சுந்தரம் என்னை முந்தத்தொடங்கினான். கார்த்தி, சீதாராமனும் கூட. பிசிக்ஸ் குமார் சார் ட்யூசனில் ராணிஸ்கூல் பிள்ளைகளை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. எங்கோ என் படிப்புக்கயிறின் கண்ணி அறுந்தது. கூட்டத்தோடு படித்தேன், படிப்பது போல் பாவ்லா. ஆனால், மனம் பருவை யோசிக்கும். சுயபச்சாதாபம் வரும். சேர்த்துவைத்து +2 ரிசல்ட்டில் காட்டியது. நினைத்த மார்க் வரவில்லை.


அப்பா உள்ளுக்குள் உடைந்திருந்தார். ஐஐடி கோச்சிங்குக்கு எல்லாம் மூவாயிரம் கட்டினேனே என அம்மாவிடம் நான் கேட்கும்படி பொருமினார். என்னை பார்க்க பிடிக்காததனாலோ என்னவோ எத்தை தின்னால் பித்தம் தெளியும் என உறவுகள் இருக்கும் ஊரில் காலேஜ் சீட், எண்ட்ரன்ஸ் என அனுப்பினார். டோட் 1 கவர்ன்மெண்ட் இஞ்சினியரிங் காலேஜ் கனவு கலைந்தது. அப்பா டோட் 2 கவுன்சிலிங்குக்கு கூட வரவில்லை. ”ஃப்ரீ சீட், அதுவும் வீட்லருந்து போயிட்டு வர்றமாதிரி காலேஜ் கிடைச்சா எடு, ஹாஸ்டலுக்கு தண்டம் அழமுடியாது” என கடுமையாக சொல்லி அனுப்பினார். தரமணி கவுன்சிலிஙில் நண்பன் என் கார்டியன் போல் கையெழுத்து போட, என் ஊரிலேயே சீட் கிடைத்தது. முதலில் ஆசைப்பட்ட கல்லூரி கிடைக்காமல், பிறகு வெயிட்டிங் லிஸ்ட்டில் அதுவும் கிடைத்தது.


ஆசைப்பட்ட பொறியியல் கல்லூரியில் சந்தோஷமாய் சேர்ந்தேன். ஆனால் அங்கு இப்படியொரு பிரச்சனை இருக்குமென முதலில் உணரவில்லை. +2 வரை பாய்ஸ் பள்ளி. முதன்முறையாக பெண் பிள்ளைகளோடு ஒரே கிளாசில், காலேஜ் பஸ்சில் ஒரு மணிநேர பயணம். நியாயமாய் சந்தோஷமான விஷயம். கலர் ட்ரெஸ், அப்பாவை அரித்து ஒரு கல்யாண மண்டப சேலில் வாங்கிய வுட்லேண்ட்ஸ் (போன்ற) ஷூவை போட்டுக்கொண்டு போகலாம். ஆனால் நெற்றியில் உள்ள 5 ரூபா காயினை என்ன செய்வது? எவ்வளவு யோசித்தும் புரிபடவில்லை. எஞ்சினியரிங் கிடைப்பதற்கு முன் சேஃப்டிக்கு சேர்ந்த ஆண்கள் கலைக்கல்லூரி பிஎஸ்சியே தேவலாமோ?


யோசித்தேன். பெரிய பக்திப்பழம் போல் கெட்டியாக விபூதியை குழைத்து பருவை மறைத்து பட்டையடித்து கொள்ள துவங்கினேன். பல படிப்பாளி பசங்கள் அப்போது பட்டை அடித்துக்கொள்வது வழக்கம் தான். அண்ணாமலை வந்த நேரம் வேறு. என்னையும் அப்படி நினைத்துக்கொள்வார்கள் என நினைத்துக் கொண்டேன். முடிக்கு எண்ணெய் வைப்பதை நிறுத்தினேன். ஃப்ரண்ட்டில் பம்பையாக நிறைய முடி வளர்த்தேன். ஒரே பக்கமாய் வகிடு எடுத்து சீவமாட்டேன். உச்சி மண்டையிலிருந்து அருவி கொட்டுவது போல் முடியை முன்நெற்றிக்கு கொண்டு வருவேன். பிறகு அதை யுடர்ன் அடித்து இன்னொரு சைடில் தள்ளி பருவை மறைப்பேன்.


ஆனால் இதற்கெல்லாம் தாங்காது. முதலில் பட்டை 11 மணி ரீசஸ் வாக்கிலேயே கரையத்துவங்கும். ஒரு பாக்கெட் கண்ணாடி வாங்கி பின்பாக்கெட்டில் வைத்திருப்பேன். பாத்ரூம் போனால் கக்கூசுக்குள் புகுந்து கொள்வேன். கண்ணாடியை எடுத்து பரு மறைந்திருக்கிறதா என பார்ப்பேன். துண்டுபேப்பரில் எக்ஸ்ட்ரா விபூதி வைத்திருப்பேன் அடுத்த ஷிஃப்ட் பட்டைக்கு. பஸ்சில் எந்த சீட்டில் உட்காருகிறோம் என்பது ரொம்ப முக்கியம். 3 சீட்டர் பக்கம் உட்காரவே மாட்டேன். ஒரு காற்றுக்கு என் குற்றால அருவி ஹேர்ஸ்டைலை இன்சமாம் லாஃப்ட் செய்வது போல் தூக்கி அஞ்சுரூபா காயினை காண்பித்து கொடுத்துவிடும். 2 சீட்டர் சைடில் தான் உட்காருவேன். ஆனால் அதிலும் ஜன்னல் பொசிஷன் ரொம்ப முக்கியம். ரொம்பவும் திறக்கமுடியாத கண்ணாடி, கொஞ்சூண்டு காத்து வரும் ஜன்னல் பெட்டர். இல்லையென்றால் இங்கும் முடியை தூக்கி கலைத்துவிடும்.


என் கிளாஸ் காயத்ரி திருச்சியில் என் வீட்டருகிலே இருந்தாள். நான் 2 பஸ் மாறி வரும் ரூட்டிலேயே அவளும் வருவாள். கூட்டம் அம்மும் கேகே நகர் 88ம் நம்பர் பஸ்சில் அவளுக்காகவோ என்னவோ தொங்கிக்கொண்டே வருவேன். அன்று நல்ல மழை நாள் என நினைவு. சொட்டச்சொட்ட நனைந்து அவள் பார்க்கும்படி தொங்கிக்கொண்டு வந்தேன். என்னவோ அவள் அன்று கூடுதலாய் என்னை கவனித்தது போல் இருந்தது. ஸ்டாப்பிங்கில் இறங்கியபிறகு காரணம் புரிந்தது. முடி முழுவதும் நனைந்து, கலைந்து என் அஞ்சுரூபா காய்ன் நெற்றிக்கண் போல் காட்டிக்கொண்டு தெரிந்தது. ஆண் முடிக்கு தண்ணீரை போன்ற அஜாதசத்ரு இல்லை.


உள்ளுக்குள் சுக்கூநூறாய் நொறுங்கினேன். காயத்ரிக்கு தெரிந்தால் ஹேமா, ஹேமாவுக்கு தெரிந்தால் தீபா, தீபாவுக்கு தெரிந்தால்..எத்தனை பேருக்கு தெரியுமோ? காயத்ரி நல்லவள் சொல்ல மாட்டாள் என நம்பினேன். ஆனால் சொல்லியிருப்பாள் போலும்.எல்லோருக்கும் தெரிந்ததிருந்தது, ஆனால் யாரும் காட்டிக்கொள்ளவில்லை. அது இன்னும் கிடந்து உறுத்தியது. அசிங்கம் அசிங்கம், இந்த முகம் அசிங்கம் என குணா கமல் அழுவதை என் போல் உலகில் யாரும் உணர்ந்து பார்த்திருக்க மாட்டார்கள். கொஞ்சநாள் கழித்து ஒரு தோழி கேட்டே விட்டாள் “எப்படி வந்துது அது? ஒன்னும் பண்ணலையா அதுக்கு”. அவள் முன் நிர்வாணமாய் நிற்பது போல் உணர்ந்தேன். என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவளே ’தில்லைநகர்ல ஒரு நல்ல டெர்மடாலஜிஸ்ட் இருக்காரு, வேண்ணா போய்ப்பாரு’ என சொல்லவும் செய்தாள்.


அப்பா கொடுக்கும் தினப்படி காசில் சேர்த்து, அந்த தோழியிடமே 30 ரூபாய் மேலுக்கு கடன் வாங்கி, அந்த சரும டாக்டரிடம் போனேன். ”Wartsப்பா இது, எப்படி வருதுன்னு எல்லாம் சொல்லமுடியாது. Hormonal imbalance. உபத்திரவமில்லாதது. ஆனால் மூஞ்சில வந்தது பிசகு. grafting பண்ணலாம்ப்பா. அஞ்சாயிரம் ஆகும். ஆனால் தழும்பு தெரியும். வீட்ல கூட்டிட்டு வா. இப்ப ரிசப்ஷன்ல 150 கட்டிடு” என எழுந்தார். அஞ்சாயிரமா, அப்பா ஏற்கனவே படுத்த படுக்கையாய் இருக்கும் பாட்டிக்கு வைத்தியம் பார்த்து கொண்டிருந்தார். ஏனோ அப்பாவிடம் இவ்விஷயத்தை சொல்லவேயில்லை. சொன்னால் கொடுத்திருப்பாரோ என்னவோ?


கல்லூரியில் இந்த பரு கொடுத்த அழுத்தம் தாங்கமுடியாது போய்க்கொண்டிருந்தது. கடைசிபெஞ்ச்சில் உட்கார துவங்கினேன். ஜமாவாக கூத்தடிக்கும் பசங்களோடு அல்ல. என்னை போலவே இண்ட்ராவர்ட்டாய் இருந்த சில மக்குப்பசங்களோடு. மிகச்சுமாரான மார்க்குகளோடு முதல் வருடம் தேறினேன். இரண்டாம் வருடம் கோர் க்ரூப் கோர்ஸ்களிலும் அடித்துபிடித்தே ஸ்டாம்ப் மார்க் (பாஸுக்கு 1 மார்க் கூட) வாங்கித்தேறினேன். ஒரு கோட்டு அடித்தேன். பெரிய நண்பர்கள் வட்டம் கிடையாது. காலேஜ் விட்டால் வீட்டருகில் இருந்த லெண்டிங் லைப்ரரியில் பாலகுமாரன் புத்தகம் படிப்பேன். கஷ்டஜீவனத்தில் அங்கு வேலைப்பார்க்கும் அக்காவிடம் கொஞ்சம் பேசுவேன். 2 பஸ் பிடித்து ஸ்ரீரங்கம் இஸ்கானுக்கு போய் தேமேவென உட்காருவேன். மூன்றாம் தடவை நாசூக்காய் துரத்தினார்கள்.

ஞாயிறு ஹிண்டு பேப்பரில் ”ஸெல்ஃப் கான்ஃபிடன்ஸ் & ஸ்பீக் இங்க்லீஷ்” ஓசி முதல் கிளாஸுக்கு அழைக்கும் ஹோட்டல் தேடிப்போவேன். சிறு தொழிலதிபர்கள் “ஐ ஆல்சோ காட் கான்ஃபிடண்ட். யு ஆல்சோ ஜாய்ன்” என ஆள் சேர்ப்பார்கள். செஷன் முடிந்து “டூ தவுசண்ட் ஃபைவ் ஹண்ட்ரட் கட்றீங்களா தம்பி” என கோட்சூட்டுடன் கோர்ஸ் நடத்துபவர் கேட்க மிரட்சியுடன் என் டிவிஎஸ் சாம்ப்பை தள்ளிக்கொண்டு வீடு திரும்புவேன். காவேரி தியேட்டரில் விஐபி படம் வந்திருந்ததது. என்னிடம் ஒருவரும் சொல்லாமல் காயத்ரி உட்பட என் கிளாஸ் கேர்ள்ஸ் பாய்ஸ் எல்லோரும் சேர்ந்து பார்த்த அன்று பாத்ரூமில் அழுதேன்.


“மேல ஒரு ஹோமியோ கிளினிக் வந்துருக்குறா ஸ்ரீராம். ஒரு தடவை இதுக்கு போயி பாரேண்டா” லெண்டிங் லைப்ரரி அக்கா சொன்னாள். போய்த்தான் பார்ப்போமே என போனேன். பிந்து நாயர் என ஒரு கேரளா டாக்டர். முப்பது வயது போன்ற தோற்றம். மெல்ல ஆராய்ந்தார். ரொம்ப பேச்சில்லை. பேசினால் நல்ல மலையாள வாடை. ஒரு லெட்ஜர் போன்ற நோட்டில் நிறைய எழுதினார். ஏதோ மருந்தில் ஊறவைத்த வெள்ளை இனிப்பு மாத்திரை தந்தார். 75 ரூபாய் வாங்கிவிட்டார். அப்போது எனக்கது பெரியதொகை. 2 பஸ் பிடித்து காலேஜ் போய்வருவது, வண்டி டோக்கன் என அப்பா வாரத்துக்கு 150 ரூபாய் தான் தருவார். அதில் டாக்டர் ஃபீஸுக்காக மிச்சம் பிடிக்க ஆரம்பித்தேன். எப்படியோ 10,15 நாட்களுக்கு ஒருமுறை மருந்து தீரும்போது அவரிடம் போய்விடுவேன். அதே அமைதியான ஆராய்தல், அதே லெட்ஜரில் என்னவோ எழுதுதல், அதே கசப்பு திரவத்தில் ஊறவைத்த ஜவ்வரிசி மருந்து. விடாமல் போய்விடுவேன். என்னவோ ஒரு நம்பிக்கை. என்னால் இயன்ற, என் சக்திக்கு எட்டிய ஒரே முயற்சி.


உண்மையில் இப்போது யோசித்துப்பார்த்தால் அந்த டாக்டரிடம் போன காலக்கட்டம் மஙகலாய்த்தான் நினைவில் இருக்கிறது. எப்போது நடந்தது, படிப்படியாக நடந்தததா, ஒரேடியாக நடந்ததா சரியாக தெரியவில்லை. ஒரு நாள் காலையில், என் நெற்றியில் பார்த்தால் அந்த ஐந்து ரூபாய் காய்ன் இல்லை. மற்றவர்களுக்கு இருப்பது போல் எந்த மேடுபள்ளமும் இல்லாத, சாதாரண, நேரான நெற்றி. கண்ணாடியில் அதை கண்ணெடுக்காமல் நெகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பல வருடங்கள் கழித்து கீழே வழித்து சீவாமல், தூக்கி சீவினேன். புதிதாய் பிறந்தது போல் உணர்ந்தேன்.


புதிதாக தான் பிறந்திருந்தேன். பொறியியல் மூன்றாம் வருடத்தில் இருந்து என் காலம் மாறியது. சிரிக்க ஆரம்பித்தேன். ஒன்றுவிடாமல் அத்தனை இண்டர்காலேஜ் சிம்போசியம், கல்ச்சுரல்ஸ் என கலந்துகொள்ள தொடங்கினேன். தனியாக யார் உதவியுமில்லாது 500 பேர் கொண்ட சபையில் ஒரு பொறியியல் விஷயத்தை விளக்க முடிந்தது, கேட்கும் கேள்விக்கு பயமில்லாது பதில் சொல்ல முடிந்தது. 10 நிமிட பேப்பர் பிரசண்டேஷன், முதல் பரிசு, கவரில் ரெண்டாயிரம் ரூபாய் காசு. ஹோட்டலில் பனீர் பட்டர் மசாலா சாப்பிட்டுவிட்டு சீட்டியடித்து ஏசி பஸ்சில் ஊருக்கு திரும்புவேன். பசங்கள் கடன் கேப்பான்கள். கல்லூரி சேர்மன் ரூமுக்கு அழைத்து நான் வாங்கிய ட்ராஃபியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். என்னை கண்டாலே முறைத்த HOD என் பேப்பரை கெஸ்ட் லெக்சர் எடுக்கச்சொன்னார். இதெல்லாம் பெரிசில்லை. காயத்ரி என்னிடம் “என்னடா இப்படி தைரியமா எல்லார் முன்னாடியும் பேசுற, டிப்ஸ் கொடுறா” என்றாள். கடைசி வருடம் ஒரு கேட்டகரியில் சிறந்த அவுட்கோயிங் ஸ்டூடண்ட் அவார்ட். கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் முடிவதற்குள்ளாகவே 3 ஆஃபர்கள். வேலை, அந்த வேலையினால் மனைவி என வாழ்க்கை நகர்ந்துவிட்டது.


என்னவோ எனக்காக கிளினிக் ஆரம்பித்ததுபோல் திடீரென பிந்து நாயர் கிளினிக்கை மூடிக்கொண்டு கிளம்பிவிட்டார். போகும் முன் அவருக்கு ஒரு ஒழுங்கான நன்றி சொன்ன நினைவில்லை. அவரை நினைக்கும்போதெல்லாம் மனதில் நமஸ்கரித்துக் கொண்டேயிருக்கிறேன். சத்தியமாய் இன்று எங்காவது அவரை பார்த்தால், நெடுஞ்சாங்கிடையாக காலில் விழுந்துவிடுவேன். அவர் அந்த கசப்பு ஜீனி மாத்திரையில் கரையில் இழுத்துப்போட்டிருக்காவிடில், வாழ்க்கை மாறியிருக்கும்.

டாக்டர்கள் உயிரை மட்டும் காப்பதில்லை. பலசமயம் நம் மானத்தையும். டாக்டர்கள் உடலை மட்டும் சரிசெய்வதில்லை. பலசமயம் நம் வாழ்க்கையையும்.

டாக்டர்கள் லேப்களோடு கூட்டு, கமிஷன், சேவை மனப்பான்மை இல்லை, ஹாஸ்பிட்டல்கள் கார்ப்பரேட் ஆகிவிட்டது என என்னன்னவோ விவாதங்கள். அவற்றில் எது உண்மை, எந்தளவு உண்மை அதெல்லாம் எனக்கு தெரியாது. அஞ்சான், ஃபேஸ்புக், காவியத்தலைவன், வீக்கெண்ட் எங்கே போகலாம், அப்ரைசல் என இன்று நம் மூளையை ஆக்கிரமிக்கும் அத்தனை விஷயங்களையும் ஒரேயொரு வியாதி, நோய்மை, ஒரு ஜலதோஷம் பின்னுக்கு தள்ளிவிடும் என்பது மட்டும் தெரியும்.

தர்க்கத்துக்கு மீறிய தொழில் மருத்துவம். கடவுள் நம்பிக்கையை போல். எனக்கு பிந்து டாக்டரை போல்.

முதுமை, தன் கடைசிக்காலங்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணங்கள் முப்பதுகளில் வர ஆரம்பிக்கும். என் கனவு என் மகள் டாக்டராகி ”என்னப்பா உடம்பை கவனிக்கவே மாட்டேங்குற” என திட்டத்திட்ட அவள் கையால் வைத்தியம் பார்த்துக்கொண்ட பெருமிதத்தில் சாகவேண்டும்.


அதற்குள் ஒருமுறை டாக்டர் பிந்து நாயர் காலில் விழுந்துவிட வேண்டும்.

+++++++++


(நீளத்துக்கு மன்னிக்கவும். குறைத்தால் சொல்ல வந்ததன் ஆன்மா கெட்டுவிடும் என தோன்றியது)

Monday, July 14, 2014

வெற்றி வேண்டுமெனில்

சமூக வலைத்தளங்கள், ட்விட்டர் போன்றவை பொதுவாக இடையறாத அரட்டைக்கச்சேரி என்றாலும் சில நேரங்களில் சில மனிதர்களால் சில நன்மைகளும் உண்டு.

இது நடந்து 2 வருடம் ஆகியிருக்கும். அப்போது இந்தியா போயிருந்தேன். பார்க்கும் நண்பர்களுக்கெல்லாம் குரு பாலகுமாரனின் ‘கடலோர குருவிகள்’ நாவலை அளித்துக் கொண்டிருந்தேன். அவ்வளவு பிடிக்கும் அந்த நாவல். குறிப்பாய் அதன் கடைசி 20 பக்கங்களில் உள்ள வாழ்க்கைப்பாடத்தை பற்றி ட்விட்டரில் பேச்சு வந்தது.

“வெற்றி வேண்டுமெனில் படிச்சிருக்கீங்களா” என கேட்டார் ஒரு பெண் நண்பர். தேர்ந்த படிப்பாளி.

”இல்லியே நாவலா, கட்டுரை தொகுப்பா?”

”கட்டுரை டைப் தான்”

“தேடிக் கண்டுகொண்டேன், என்னை சுற்றி சில நடனங்கள் மாதிரி வேற ஒன்னை நினைச்சுட்டு இதை சொல்றீங்களா?”

குருவின் ஆன்மீக நாவல்களில் நான் வீக். ஆனால் சமூக நாவல்கள், கட்டுரை தொகுப்புகளில் என் பரிச்சயம் மேல் ஒரு சிறுகர்வம் உண்டு. ‘தாமோதரன் பால்பண்ணை வெச்சு முன்னேறுற கதை தானே?’ ‘அமுதவல்லி மச்சினனுக்கு பொண்ணு பார்க்கிற கதை தானே’ என கேட்டுவிடுவேன்.

“இல்ல ‘வெற்றி வேண்டுமெனில்’ன்னே ஒரு புத்தகம் இருக்கு. தலைப்பு தான் சப்ஜக்ட்” என விளக்கினார் அந்த நண்பர்.

அய்யோ படிக்கனுமே..”முடிஞ்சா அனுப்ப முடியுமா, நான் 2,3, நாள்ள கனடா கிளம்பிருவேன்” அல்பம் போல் கேட்டுவிட்டேன்.

“பார்க்கிறேங்க. நான் இப்ப கொஞ்சம் பிசியா இருக்கேன்” என்பது போல் ஏதோ சொன்ன ஞாபகம். முகவரி வாங்கிக்கொண்டார். புத்தகம் ஏதும் வரவில்லை. நான் கனடா திரும்பிவிட்டேன்.

ஆனால் அனுப்பியிருக்கிறார். புத்தகம் வந்ததாக மாமியார் வீட்டிலிருந்து தகவல். அதை இங்கு வசிக்கும் ஒரு உறவினர் மனைவியிடம் கொடுத்தனுப்ப, அவர் அதை வாகாய் மறக்க, அங்கே இங்கே சுத்தி ஒன்றரை வருடம் கழித்து என்னிடம் வர, நான் அப்போது வீடு மாற, ஒரு பெரிய புத்தகத்தின் நடுவில் இது போய் மறைய, நான் தொலைந்துவிட்டது என்று நினைக்க..இந்த வாரயிறுதி ஒழித்தலில் கிடைத்தது. உடனே படிக்க உட்கார்ந்தேன்.

திருக்குறள் அதிகாரங்கள் போல் சோம்பல் அறுத்தல், கோபம் தவிர்த்தல் என்பது போல் 21 கட்டுரைகள். ஒவ்வொன்றும் நேரடியாக கத்தி பாய்ச்சும் வகையறா. என்னவோ என்னை கூட இருந்து வளர்த்தவர் போல், எனக்கே எழுதியது போல் இருக்கிறது ஒவ்வொரு கட்டுரையும். மிக எளிமையான, புரியும்படியான ’உருப்படனும்னா சொல்றத கேளு’ குட்டுக்கள், டு த பாய்ண்ட் சொல்லாடல்கள், உதாரணங்கள். கல்யாண விருந்து போல் ஆசையாய் உண்டு முடித்ததை, இப்போது மனமும், புத்தியும் மெல்ல ஜீரனித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாய் குரு பூர்ணிமா நாளன்று இதெனக்கு படிக்கக்கிடைத்தது யதேச்சை இல்லை. இங்கு காரணமில்லாது எதுவும் நடப்பதில்லை.

புத்தகத்தை அனுப்பிய ட்விட்டர் தோழி @devaseema ( www.twitter.com/devaseema ) யார், அவர் பெயர், ஊர், எப்படியிருப்பார் எதுவும் தெரியாது. ஆனால் ஆயுசுக்கும் அவரிடம் கடன்பட்டிருக்கிறேன்.

வாழ்க்கை நமக்கான பாடங்களை யார் மூலமாகவோ, எப்படியோ காட்டியேதான் விடுகிறது. பாடம் படிப்பதென்னவோ நம் பொறுப்பு.

படித்தேனா என்பதை காலம் சொல்லும்.

(புத்தக வெளியீடு: விசா பதிப்பகம்)

Friday, March 7, 2014

பெய்யெனப் பெய்யும் மழை

ஏதோ அவசர மீட்டிங்கென ஆறேமுக்காலுக்கு அனு கிளம்பிவிட்டாள். ”நீ இன்னைக்கு வீட்ல இருந்து வேலை பாரு, குஷியை கிளப்பி ஸ்கூல்ல விடு, ஏதும் சொதப்பிடாத” கடைசி வார்த்தையில் எக்ஸ்ட்ரா அழுத்தம். ஏழரைக்கு பெண்ணரசியை எழுப்பச்சென்றால், ஏழரையை கூட்டினாள். அசைத்தாலே உறுமினாள். வடக்குப்பட்டி ராமசாமியின் கடன் வசூலிக்க எழுப்பப்பட்ட செந்திலின் முகபாவனை. ஒரு மைக்ரோசெகண்டில் கையில் இருந்த அலைபேசியை கண்டாளோ, எழுந்தாளோ? 2 நிமிடம் நோண்ட விட்டேன்.  பாத்ரூமுக்கு போ என்றால் லஜ்ஜையோடு “நீ வராத, போப்பா”. மகள்கள் வளர அப்பாவை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறார்கள்.

”சரி,சீக்கிரம் ப்ரஷ் பண்ணிட்டு வா, போர்ன்விட்டா போடறேன்” சொல்லி 10 நிமிடம் ஆனது ஆளை காணோம். பார்த்தால் பேஸ்ட் பிதுக்க வராது, பேசினில் விரயமான பேஸ்டுடன், சிறுபயத்துடன் எனை பார்க்கிறாள். ”மணி எட்டாச்சு குஷி” என அரக்கபரக்க தேய்த்துவிட்டு,முகம் அலம்பி (காலையில் ஏனோ குளிப்பாட்டுவதில்லை), துணி மாற்றி,”நானே போட்டுக்கிறே”னுக்கு காத்திருந்து போர்ன்விட்டாவை கையில் திணித்தால் சூடாம். ஆத்துவதற்குள் ஸ்னோ பேண்ட்,ஜாக்கெட்,பூட்ஸ்,க்ளவ்ஸ், தொப்பி போட்டு இறுக்கினால் அங்கு குஷி காணாமல் போய் ஒரு எஸ்கிமோ நின்றாள். தொப்பிக்குள் தெரிந்த சொப்புவாய்க்குள் போர்ன்விட்டாவை இறக்கினால் மணி 8.15. அய்யோ, எட்டரைக்கு என் கான்ஃபரன்ஸ் கால். அவசரமாய் கதவை பூட்டி வெளியே வந்தால் ஒரே “புது வெள்ளை மழை”. அரவிந்தசாமியையும், மதுபாலாவையும் பனியில் புள்ளப்பெத்த பின் காட்டாதது மணிரத்ன துரோகம். உள்ளே நிறுத்த இடமில்லாத இந்த பண்ணையாரின் பத்மினி, மனுஷ்யபுத்ரனுக்கு முடி நரைத்தது போல் பனிமூடி இருந்தது. “வழுக்கிடாம வா குஷி” என அவளை பின்னிருக்கையில் போட்டுவிட்டு ஸ்னோ சுரண்டியை தேடினால் காணோம். கையாலேயே பரபரவென காரை பிரதட்சணமாய் வந்து ஐஸ் தட்டிவிட்டதில் சொல்லாத இடம் கூட குளிர்ந்தது. நல்லவேளை பள்ளி அருகில் தான். ஆனால் அரை கிமீ.க்கு முன் கார்களின் வரிசை. பீக் ஹவர் கிண்டி மேம்பாலம் போல் ஊர்ந்துதான் போகமுடிந்தது.  வெள்ளைக்கார ஊரில் ஆத்திரம் தீர ஹாரனாவது அடிக்கமுடிகிறதா? முடிந்தவரை பள்ளி வாயிலருகில் இறக்கிவிடலாமே என்றால் பேட்ரோலுக்கு நிற்கும் ‘மிஸ்’ ஜாடையில் முன்னமே இறக்கிவிடச்சொன்னாள். களேபரத்தில் குஷிக்கு டாட்டா காட்டமுடியவில்லை. சைடுமிர்ரரில் பொதுபொதுக்கென ஐசில் மெல்ல நடக்கும் குஷி தெரிந்தாள். பாவம் குழந்தை.




வீட்டுக்கு வந்து ஆபீஸ் நிகருலகுக்கு VPN வாயிலோனை கடந்து புகுந்து புறப்பட்டு நிமிர்ந்தால் 3 மணிக்கூர் ஆகிவிட்டிருந்தது. பசித்தது. காலையில் சாப்பிட்ட 2 விள்ளல் ப்ரெட் ஆயுளை எப்பவோ விட்டிருந்தது. சமைத்தால் என்ன? அதிசயத்துக்கு 2.30 வரை மீட்டிங் இல்லை. முள்ளங்கி சாம்பார், காலிஃப்ளவர் பொரியல் என எனக்கு பிடித்த,செய்யவரும் உணவில் நின்றது மனம். பருப்பை வைத்தேன். வேகுவதற்குள் முள்ளங்கியை நறுக்கினேன். புளிக்கரைத்து காய்,சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிட்டாயிற்று. காலிஃப்ளவரை வெட்டதுவங்கினால் மலையளவு சேர்ந்துவிட்டது. பாதியை இரவுக்கு குருமா செய்தால் என்ன? பொரியலுக்கு கடாய் (நாகரிகத்தில் தமிழர்கள் தொலைத்த வார்த்தை சட்டி) வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் வதக்கி, காலிஃப்ளவர் போட்டு, காரப்பொடி போட்டு தண்ணிவிட்டு வதங்கவிட்டு, இன்னொரு பக்கம் குருமாவுக்கு விழுது அரைத்து, அதை சோம்பு,பட்டை குருமா துணைநடிகர்களுடன் வெங்காயம்,தக்காளியுடன் சேர்த்து வதக்கி, கெட்டிப்பட ஒரு உருளை போட்டு, பட்டாணி சேர்த்து கொதிக்கவிட்டு, இதற்குள் விசில் விட்டிருந்த குக்கர் வெயிட் நீக்கி, வெந்த பருப்பினை சாம்பாரில் சேர்த்து, கொத்தமலை தழை தூவி இறக்கினால், சாம்பார்,பொரியல்,குருமா மூன்றும் துர்கா பட இண்டர்வல் ப்ளாக் ஷாம்லி,நாய்,குரங்கு போல் ஒன்றுகூடி ஒற்றுமையாய் நின்றுகொண்டிருந்தன.

அதற்குள் மணி ரெண்டாகிவிட்டதா என அவசரமாய் குளித்து,சாப்பிட்டுவிட்டு திரும்பினால், மணி மூன்று. அய்யோ, Day care அம்மணியிடம் சொல்லவே இல்லையே என அவசரமாய் ஃபோன் செய்து “குஷியை வீட்லயே விட்டுடுங்க, நான் வீட்ல தான் இருக்கேன்” என சொல்லி வாயை மூடுவதற்குள் மூனேகாலுக்கு குஷி வாசலில். வரும்போதே அகோரப்பசியோடு வந்தாள். சோதனையாய் எதைக்கேட்டாலும் வேண்டாமென முறைத்தாள். இவள் சாப்பிடவில்லையெனில் அவள் முறைப்பாள். அப்பங்காரன் பிழைப்பு. முட்டையை ஆம்லட்டாய் போட்டுக்கொடுத்து, நீயா விளையாடு என மிச்சசொச்ச வேலைக்குள் மூழ்கினால் “குஷி என்ன பண்றா” என SMS. ஒன்னும் பிரச்சனையில்லை, ஆனா சரியா ஏதும் சாப்பிடலை என முன்ஜாமீன் வாங்கினால் “பரவாயில்லை” என சௌஜன்யமாய் பதில். நிசமாத்தான் சொல்றியா என யோசிக்கையில் “கேளு..நான் வர ஆறு,ஆறரை ஆகிடும், இங்க பிசி” என பதிலுக்கு முன்ஜாமீன். அதானே பார்த்தேன்..

ஆறு மணிக்காய், ஆபீஸ் கடையை சாத்தி, பாவம் களைத்து வருவாளே என இஞ்சி டீ போட்டு, குஷிக்கு இன்னொரு போர்ன்விட்டா போட்டு நிமிர்வதற்குள் மனைவி வந்தாகிவிட்டது. மூவரும் ஆளுக்கொரு கப்புடன்  10 நிமிடம் மாடிப்படியில் அமர்ந்து How was your day கதையடிப்பதற்குள் 7 மணி பரதகிளாஸுக்கு நேரமாகிவிட்டிருந்தது. 60 கிமீ ஓட்டிக்கொண்டு வந்திருக்கும் அனுவை தொந்தரவு செய்ய மனமில்லாது நான் கூட்டிக்கொண்டு போய், தேவுடு காத்து எட்டரைக்கு திரும்பினால், காலையிலிருந்து பனி தள்ளாதது உறைத்தது. ஓர் இரவு அப்படியே விட்டாலும் பனி கெட்டிப்பட்டு வழுக்க ஆரம்பித்துவிடக்கூடும். க்ளவுசையும்,முண்டாசையும் அணிந்து -15 டிகிரியில் பனி தள்ளும் மம்பட்டியும், மோகன்லாலும் கொண்டு அள்ளிப்போட்டு, மேலதிகமாய் உரம் போல ஸ்னோ உப்பை தூவிவிட்டு நிமிர்ந்தால் மேலுக்கும் கீழுக்குமாய் புஸ்சுபுஸ்சுவென மூச்சிறைத்தது. நாற்காலியை விசிறிய தேவர்மகன் சிவாஜி போல் குறுக்கில் வலித்தது. கார்போஹைட்ரேட்டுக்கும், காலரிக்கும் வயிறு நாயாய் பறக்க ஆரம்பித்திருந்தது. அதற்குள் மணி ஒன்பதா என யோசித்துக்கொண்டே சப்பாத்தி ரெடியா என கேட்க யத்தனிக்கையில்..

“எனக்கொரு ஈமெய்ல் அனுப்பனும் அவசரமா, கொஞ்சம் சப்பாத்தி போட்டுடேன்”

என்னவோ பெண்ணீயம்,பெண்ணீயம் என கதைக்கிறீர்களே..இதான்யா பொன்னகரம்..