Sunday, June 14, 2015

மேன்மக்கள்







நேற்றிரவு பெரியதாக தூக்கமில்லை. அதிகாலை நான்கு மணி வரை படுக்கையில் விழித்திருந்தது நினைவிருக்கிறது. விடிந்தால் தீபாவளி என்ற மனநிலையில் ஒரு பத்து வயது சிறுவன் எப்படி இருப்பானோ அப்படி படுத்திருந்தேன். மனதுக்குள் அப்படியொரு நிலைகொள்ளாத மகிழ்ச்சி.

நேற்றிரவுக்கு முந்தைய மாலை 2015-க்கான இயல் இலக்கிய விருதுகளுக்கு முதல் தடவையாக சென்றிருந்தேன். இயல் விருதுகள் கனடா தமிழ் இலக்கிய தோட்டம் என்கிற ஒரு வெகு திவீரமான தமிழார்வல அமைப்பால் காத்திரமான படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் உலகளவில் வழங்கப்படுவது. குறிப்பாய் ‘இயல் விருது’ எனப்படும் முத்திரை விருது ஒரு தமிழ்ப்படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதாக தரப்படுவது. அது இந்த வருடம் ஜெயமோகன் அவர்களுக்கு.

என்னைப் போன்ற ஃபேஸ்புக் பதிவனுக்கு இந்த திவீர இலக்கிய அமைப்பில் இடமோ, ஜோலியுமில்லை. எனினும், சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிடும் பெருந்தவத்தை செய்து வரும் திருமூர்த்தி ரங்கநாதன் புண்ணியத்தில் (”நல்லா எழுதுறீங்க, நீங்க இந்த இலக்கிய சர்க்கிள்க்குள்ள வரணும்”) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஐயா அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். எனக்கு திருமூர்த்தி, தமிழறிவிலறிஞர் வெங்கட்ரமணன் தவிர ஒருவரையும் தெரியாது வேறு. சற்று பயந்துகொண்டே தான் விழா நடக்கும் ஹோட்டலுக்கு போனேன்.

பயந்தது போலவே தான் சூழலும் இருந்தது. விருது விழா நடந்த இடம் ஒரு மூன்று/நான்கு நட்சத்திர ஹோட்டல். விருது அழைப்பிதழில் Semi formal எனக்குறிக்கப்பட்டிருந்ததை பறைசாற்றும் வகையில் பலரும் கோட்சூட்டில் வந்திருந்ததை ரிசப்ஷனிலேயே பார்த்தேன். நான் சட்டையை இன் கூட செய்யாது போயிருந்தேன். நல்லவேளை என் அலைபேசியை காரில் மறந்திருந்தேன். அதை எடுக்க போகும்போது காரில் எதற்கும் இருக்கட்டுமென வேலைக்காக வைத்த ப்ளேசர் ஆபத்பாந்தவனாய் கைகொடுக்க, சட்டையை இன் செய்து அதை அணிந்துகொண்டு உள்ளே போனேன். பெயரை சரிப்பார்த்துக்கொண்டு சட்டையில் ஒட்டிக்கொள்ள பெயர் அட்டை எல்லாம் தந்தார்கள்.

விழா அரங்கு கிட்டத்தட்ட நிறைந்திருந்தது. எனக்கு சற்று பின்னால் தான் உட்கார இடம் கிடைத்தது. விருதுகள் கவிதை,மொழிபெயர்ப்பு என பல துறைகள் சார்ந்து தரப்பட்டுக்கொண்டிருந்தது. ராணுவ ஒழுங்கோடு ஒவ்வொரு விருதுக்கும் ஓரிரு நிமிட அறிமுகம், விருது வழங்குதல்,இரண்டு நிமிடம் தாண்டாத ஏற்புரை என விழா விறைப்பாக நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் agenda அச்சடிக்கப்பட்டிருக்க, அதற்கு இம்மி பிசகாமல் விழா நடக்க எனக்கு ஏக வியப்பு.

என் கண்கள் ஜெயமோகன் அவர்களை தேடியது. மேடையேறிய சிலர் “ஜெயமோகனுக்கு வணக்கம்” என கீழே முன்வரிசையை பார்த்து சொன்னது பார்த்தேன். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. கடைசியாக விழாவின் முத்தாய்ப்பான இயல் விருது வழங்கும் தருணத்துக்கு வந்தது.

ஆனால் ஜெயமோகன் உடனே மேடையேறி விடவில்லை. அவரை பற்றிய ஒரு சம்பிரதாய அறிமுகம் (”இவர் நாகர்கோவிலில் ..வருடம் பிறந்தார்” போல) மற்றும் ஜெமோவின் படைப்புகளை பற்றிய ஒரு சிறப்புரை, பரிசு தர வந்திருந்த வெள்ளைக்கார எழுத்தாளரை பற்றிய ஒரு அறிமுகம், அதற்கு பின் அந்த வெள்ளைக்காரரின் உரை என தொண்ணூறுக்கும் நூறுக்கும் இடையேயான டெண்டுல்கரின் இன்னிங்ஸ் போல் சற்றே நீண்டது.

எனக்கோ தாகம். அரங்கின் பின்னால் தண்ணீர் இருக்குமா தெரியவில்லை. வெள்ளைக்காரர் எப்படியும் 2 நிமிடங்கள் பேசுவார் என தெரிந்ததால் பின்னால் போய் தாகத்தை தணித்து வந்தமரவும், ஜெமோ அவர்கள் மின்னல் போல் எங்கிருந்தோ மேடையில் தோன்றவும் சரியாக இருந்தது. அவருக்கு இயல் விருதும், கனேடிய பாராளுமன்ற விருதும் (ஆசியாவுக்கு வெளியேயான முதல் தமிழ் எம்பி ராதிகா சித்சபேசன் வழங்க) பெற்றுக்கொண்டார். சம்பிரதாய புகைப்பட தருணங்கள் முடிந்து தன் ஏற்புரையை துவங்கினார்.

மெல்லிய குரல் தான் ஜெயமோகனுக்கு. ஒரு சம்பிரதாயமான தமிழ்ப்பேச்சாளருக்கான உசத்திய குரலோ, gait அல்லது உடல்மொழியோ கிடையாது. ஆனால் அதில் என்னவோ நம்மை கட்டிப்போடும் த்வனி. மிருதுவான குரலில் மிகத்தெளிவான பேச்சு.

ஜெயமோகனின் பேச்சின் ஆதாரப்புள்ளி தன்னிறைவு, தன்முனைப்பு, தன்மகிழ்ச்சி. இதை இரு விஷயங்களை தொட்டு விளக்கினார். முதலாவதாக, எழுத்தாளர் ஆகுமுன் நாடோடியாக வடக்கு ட்ரைன்களில் செல்கையில் கிருஷ்ணமரபில், ஆட்டம்பாட்டத்தோடு, நித்யமகிழ்ச்சியோடு இருக்கும் கிருஷ்ணபக்தர்கள் தன்னை எவ்வாறு பாதித்தனர் எனக்கூறினார். பிறகு தன் பெற்றோர்களை இழந்து சிரமப்பட்ட வருடங்களில் தற்கொலை செய்துகொள்ள தண்டவாளத்தில் கிடந்த தருணத்தில், அவர் கண்ணில் பட்ட ஒரு புழு வாழ்வுக்கான அவர் பார்வையை எப்படி முற்றிலும் மாற்றியது என விளக்கினார். “ஒரு மிகச்சிறிய புழு தன் சர்வைவலுக்கான போராட்டத்தை கூர்மையாக செய்யும்போது, தன்னால் முடியாதா” என அன்றிலிருந்து ஒரு வலிந்து எடுத்த முடிவாக (conscious decision) "இனி என் வாழ்வில் துயரம் என்பது வெளியிலிருந்து இல்லை. என்னை ஒரு வெளிக்காரணி துக்கப்படுத்தவோ, சங்கடப்படுத்தவோ முடியவே முடியாது” என முடிவெடுத்து அது 25 வருடமாக எப்படி தன்னை இயக்குகிறது என அற்புதமாக விளக்கினார். தன் பழைய டைரிகளை புரட்டுகையில் எப்படி தன் ஒவ்வொரு நாளும் எவ்விதத்திலோ உருப்படியாக கழிந்திருக்கிறது, ஒன்று எழுதியிருக்கிறேன், இல்லை எழுத்துக்காக படித்திருப்பேன், பயணித்திருப்பேன் என்பதில் தனக்கு எத்தனை பெருமிதம். நான் எழுதுவதை யாரும் படிக்கவே போவதில்லையென்றாலும் எப்படி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பேன் என்றார்.

என் எழுத்து இங்கு தோற்றுப்போகிறது. இந்த செய்தியை ஜெயமோகன் சொன்ன விதத்தில் நூறில் ஒருபங்கை கூட மேலே நான் எழுதிய பத்தி சொல்லவில்லை என நானறிவேன். அவர் பேசப்பேச அத்தனை நெகிழ்ந்தேன். கைத்தட்ட சற்றே சங்கோஜப்பட்ட கூட்டமானதால் சில இடங்களில் தொடர்க்கைத்தட்டல்களை முடுக்கி வைத்தேன். நேர்த்தியாக பெய்யும் மழையாக தொடர்ந்த அவரது பேச்சு, மழை நின்று வெயில் எட்டிப்பார்ப்பது போல் ஒரு எதிர்பாராத தருணத்தில் சட்டென முடிந்தது.

நான் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன். இப்படியொரு அற்புத பேச்சை நான் கடைசியாய் எப்போது கேட்டேன் என நினைவில்லை.

தொடர்ந்த சுருக்க நன்றியுரையுடன் (8.30க்கு முடியவேண்டிய விழா 8.31 கூட அல்ல .8.30க்கே) முடிய கூட்டம் எழுந்து நகரத்துவங்கியது. நான் ஜெயமோகன் அவர்களின் குறுநாவல் தொகுப்பு ஒன்றை எடுத்துப்போயிருந்தேன். மேடையிலிருந்து இறங்கி கூட்டத்தோடு அளவளாவ துவங்கினார். புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது மட்டுமே என் குறிக்கோளாய் இருந்தது. வரிசையில் எனக்கான அவரின் கவனம் கிடைத்த போது கைகுலுக்கினேன். புன்னகைத்தார்.

“இதுல ஆட்டோகிராஃப் சார்”

இப்போது யோசிக்கையில் ஆட்டோகிராஃப் கேட்க அது அசந்தர்ப்ப தருணம். இருந்தும் பொறுமையாய் நின்றுகொண்டே போட்டார்.

“சார் நான் ரசனை ஸ்ரீராம்ன்னு”

”நீங்கதானா அது? இங்கயா டொராண்ட்டோலயா இருக்கீங்க?”

சத்தியமாய் இதை எதிர்ப்பார்க்கவில்லை நான்.

”உங்க பத்ரி சேஷாத்ரியோட புத்தக விவாதத்துல நான் கூட ஒரு பதிவு போட்டேனே. உங்களை கவனிச்சிருக்கேன்” எனத்தொடர்ந்து “இது என் வொய்ஃப் அருண்மொழி” என அறிமுகப்படுத்தினார்.

அவர் பேசப்பேச எனக்கு மகிழ்ச்சி கொப்பளிப்பு. என் இத்தனை நாள் கிறுக்கல்களுக்கான ஒரு அங்கீகாரத்தருணமாக உணர்ந்தேன். ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு யாரிடம் எடுக்கச்சொல்ல என விழிக்க வெங்கட்(ரமணன்) அதை புரிந்து அவர் கேமராவிலேயே எடுத்தார். பின்னால் கூட்டம் நான் வழிவிட காத்திருக்க முகமன் கூறி விலகினேன்.
என்னால் இப்பொழுதும் இது நிகழ்ந்ததென நம்பமுடியவில்லை. எனக்கு வேறு யாரையும் வெகுவாய் தெரியாதென்பதால் சற்று எட்ட நின்று அவரையே கவனித்துக்கொண்டிருந்தேன். சகஜமாய் பேசுவதை வலிந்து செய்யவில்லை அவர். ஒவ்வொருவரிடமும் ஒரு சிறுகுழந்தையின் உற்சாகத்தோடு, முகபாவனைகளுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சுபாவத்திலேயே இயல்பானவராக, நிறைவானவராக இருக்காவிடில் இது சாத்தியமில்லை.

சற்று நேரம் கழித்து அவரை சுற்றிய கூட்டம் சற்றே விலக மெல்ல அரங்கின் நடுவில் அவர் நடந்து வர நான் நிற்கும் இடத்திற்கருகில் வந்தார். மறுபடி என்னை பார்த்து அதே புன்னகை. மறுபடி அவரிடம் பேசும் சந்தர்ப்பம்.

“சார், இங்க உங்களுக்கு எல்லாம் சௌரியமா இருக்கா? உங்களுக்கு, ஃபேமிலிக்கு என்ன வேண்ணாலும் சொல்லுங்க சார்”

இப்போதும் ஏன் இதை கேட்டேன் எனத்தெரியவில்லை. பதட்டமோ என்னவோ உளறிவைத்தேன். ஊரிலிருந்து வந்த களைப்பு இன்னமும் இருக்குமே, அவருக்கான மற்றும் அவரது மனைவிக்கான உணவு, இதர தேவைகள் எல்லாம் சரியாக நடக்கிறதா, என்னால் ஏதும் சிறிதாய் செய்யமுடியுமா என்கிற ஆவலாதி. அவல் எடுத்துக்கொண்டு போன ஒரு குசேலன் மனநிலை எனக்கு. “எல்லாம் நல்லா பார்த்துக்கறாங்க ஸ்ரீராம்” என்றார் புன்னகைத்துக்கொண்டே. தொடர்ந்து வெங்கட் அவர் வீட்டுக்கு என்னை அழைத்திருக்க, கிளம்பலாமா என கேட்க, நானும், வெங்கட்டும் ஜெயமோகன் அவர்களிடம் சொல்லிக்கொண்டு விடைப்பெற்றுக் கொண்டோம்.

ஜெயமோகன் அவர்களை நான் நிரம்ப வாசித்தது இல்லை. அறம் சிறுகதைகள், வெகுசில குறுநாவல்கள், இணைய கட்டுரைகள் தாண்டி அறிந்தது இல்லை. அவரின் ஒரு தேர்ந்த,திவீர வாசகன் மனநிலையில் நான் இயல் விருதுகளுக்கு செல்லவும் இல்லை. ஆனால் ஒருவரின் ஐந்து நிமிட பேச்சு, சுபாவம் இத்தனை நேர்மறை தாக்கத்தை உண்டாக்கும் சாத்தியம் உண்டா எனில் வெகு நிச்சயமாக ஆமென சொல்வேன்.

ஜெயமோகன் எழுத்துக்களின் பன்முகத்தன்மை, விஸ்தீரணம், அதில் உள்ள செய்திகளின் அடர்த்தி பற்றி பலருக்கு வியப்புண்டு.

ஆனால்,

எனக்கு ஜெயமோகனின் எழுத்துக்களில் உள்ள செய்தியை விட பெரிய செய்தியாக தெரிவது, அவர் வாழ்க்கையே. அவர் வாழ்க்கையை அணுகும் விதமே. வாழும் முறையே.

His life is his biggest message.
++++++++++++++++




Saturday, June 13, 2015

எச்சத்தாற் காணப்ப படும்



ஒரு கையகல அட்டை. போஸ்ட்கார்ட் அளவில். குட்டிகுட்டியாய் ஸ்டாம்ப் குத்த ஏதுவாய் கட்டங்கள். பொக்கிஷமாய் இதை தன் ஸ்கூல் பேகின் குட்டி zipக்குள் வைத்திருப்பாள் குஷி.

பொதுவாய் இதை கையில் இறுக்கமாய் பிடித்திருப்பாள். இங்கு இன்னமும் கோடை காலம் சரியாய் வராத, மிதமான குளிரும், சிலுசிலுவென காற்றும் நிறைந்த காலைவேளைகள்.

எங்கள் வீட்டையும், பள்ளியையும் பிரிக்கும் பெரிய பார்க்கின் ஊடே நடக்கையில் பறந்துவிடப்போகிறதே என பயம் எனக்கு. பைக்குள்ளே வைத்திருந்து, பள்ளி வந்தவுடன் எடுத்துத்தருகிறேன் என்றால் கேட்பாளில்லை.

பள்ளியின் க்ரில்கம்பி போட்ட காம்பவுண்டுக்குள் நுழையும்போதே பரபரப்பாவாள். கண்கள் ஸ்டாம்ப் கேர்ளை தேடும். தேடிக்கண்டுக்கொண்டவுடன் எனை மறப்பாள். ‘வர்றேன்ப்பா’ ‘பை’ கூட வராது. பல பொடிசுகள் சூழ நிற்கும் சிறுமி கர்மசிரத்தையாக ஒவ்வொருத்தரிடமும் அட்டையை வாங்கி, ஒரு முத்திரையை குத்துவாள். ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல் குழந்தைகள் தத்தம் கிளாசுக்கு போகும்.

எதற்கிந்த கூத்து? பள்ளி குழந்தைகள் நடந்து பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க. குறிப்பாய் குளிர், உறைபனிகாலத்தில் பள்ளிச்சாலையில் வரிசையில் நின்று குழந்தையை இறக்கிவிடுவதற்குள் அத்தனை கார்க்கூட்டம் இருக்கும். கோடையிலாவது நெரிசல் குறையட்டுமே, குழந்தைகள் நடக்கட்டுமே என ஒரு அட்டையை கொடுத்து, நடந்துவரும் அன்றெல்லாம் ஒரு ஸ்டாம்ப் கிடைக்கும்.

சரி, மொத்தமாய் அட்டை முழுதும் ஸ்டாம்ப் கிடைத்தால் என்ன பரிசு கிடைக்கும்? ஒன்றுமில்லை. நல்லவேளை, குஷிக்கு அந்த கேள்வி வருவதேயில்லை.

முடிந்தவரை, காலை மீட்டிங் இல்லாத நாட்களில் அவளை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு நடப்பது வழக்கம். அவள் கந்தாயத்தில் என் உடற்பயிற்சி வாட்ச்சில் 2 கிமீ நடைப்பயிற்சி கணக்கு ஏறும் என்பதால் எனக்கும் உவப்பே.

பத்தாதற்கு அவளுடன் பேசிக்கொண்டே போகலாம். நமக்கு மிகச்சிறியதாய் தோன்றும் விஷயங்களை, கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பேசிக்கொண்டே வருவாள். “Don't you know about the Earth project? Seriously" என பெரியமனுஷித்தனத்தோடு எதையாவது சொல்லிக்கொண்டே வருவாள். நான் கேட்டுக்கொண்டே, அவளின் பின்க் கலர் பேகை லஜ்ஜையின்றி என்னவோ அதற்காகவே ஜென்மம் எடுத்தாற்போல் என் முதுகில் மாட்டிக்கொண்டு நடப்பேன். சந்தோஷ மனநிலையில் இருந்தால் மெலிதாய் துள்ளிக்குதித்துக் கொண்டே வருவாள். எதற்கோ ஒரு ஸ்கிப்பிங் கயிறு போன்ற ஒன்றையும் எடுத்துவருவாள். தெருவில் துள்ளிக்குதித்து நடப்பது நின்ற வயதில் நாம் பெரியவர்களாகிறோம்.

பல நாட்கள் பள்ளிக்கு நடந்து போனாலும் ஸ்டாம்ப் கிடைக்காது. பல இடையூறுகள். பள்ளிக்கு வகுப்பு வாரியாக பல வாயில்கள் என்பதால், ஸ்டாம்ப் கேர்ள் எங்காவது போய் நின்றிருப்பாள். குஷி தன் தோழி யாரையாவது ஆள் சேர்த்துக்கொண்டு அவளை தேடுதேடு என தேடுவாள். நான் அங்கேயே மருகுவேன். ‘நீ கிளம்பு’ என்பதுபோல் பார்ப்பாள். குஷி பள்ளிக்குள்ளே போகும்வரை எனக்கு நிம்மதியில்லை.

இல்லை, சில நாட்கள் ஸ்டாம்ப் கேர்ள் இருக்கமாட்டாள். அல்லது நாங்கள் கொட்டுவாயில் பள்ளிக்கு போய் சேர்ந்திருப்போம். நேரமாகிவிட்டது என வகுப்புக்கு கிளம்பியிருப்பாள். குஷி உன்னால் தான் நான் தாமதமாய் வந்தேன் என என்னை முறைப்பாள். அவள் ஏழரை மணி வரை தூங்கியது, பாத்ரூமில் கனவு கண்டது, ஒரு டம்ளர் பாலை அரைமணிக்கூர் குடித்தது போன்றவற்றை சொல்வதில்லை நான். அன்பிற்குரியவர்களிடம் தர்க்கம் தேவைப்படுவதில்லை.

நேற்றும் இப்படித்தான். 8.25 ஆகிவிட்டது. இனி பள்ளிக்கு நடந்துசெல்ல வாய்ப்பில்லை. ஆனால் குஷி அன்று நடந்து செல்வதை வெகுவாக எதிர்ப்பார்த்திருந்தாள். அவள் அட்டை நிரம்ப அவளுக்கு தேவை ஒரேயொரு ஸ்டாம்ப். முதல்நாள் இரவிலிருந்தே அதை பற்றிய நினைப்பு . இன்று நடந்து செல்வது சாத்தியமில்லை என உணர்ந்தவுடன் அழத்தயாராய் இருந்தாள். கண்கள் சட்டென கலங்கிவிடும் இயல்பினள்.

“சரி, அப்பா உன்ன ஸ்கூல் பின்னாடி இருக்குற இடம் வரை பாதி தூரம் கார்ல கொண்டுவிடுவார். அங்கருந்து நடந்துபோவியாம். நேரத்துக்கு போயிடலாம். நடந்தமாதிரியும் இருக்கும்” மனைவி எனக்கு ஜாடை கொடுத்துக்கொண்டே சொன்னாள். பலநேரங்களில் ஆபத்பாந்தவனாய் காத்துவிடுவாள்.

குஷி அரைமனதாய் சம்மதித்தாள். ஒரு கிலோமீட்டர் தான் என்பதால் சடுதியில் காரை பள்ளி மைதானத்தை பார்த்துக்கொண்டிருக்கும் தெரு முக்கு ஓரத்தில் நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தோம். அதுவரை பள்ளிக்கு நடந்து வந்தவர்கள் வரும் பாதையில் நாங்களும் இணைந்தோம். பள்ளி காம்பவுண்டுக்குள் நுழைந்தோம். பரவாயில்லை நேரத்துக்கு வந்தாயிற்று. 

எப்போதும் போலான காலை எட்டரை மணி பரபரப்பு. ரெயின்கோட் அணிந்துகொண்டு, பள்ளிக்கு வரும் கார்களை திறந்துவிட்டு ‘ஜருகண்டி’க்கொண்டிருந்தனர் ஆசிரியர்கள். ”சீக்கிரம் சீக்கிரம்”என நடத்திக்கூட்டிக்கொண்டு வரும் பெற்றோர்கள். ஆங்காங்கே விளையாடிக்கொண்டு, அரட்டை அடித்துக்கொண்டும், பள்ளிக்குள்ளே நுழையும் கடைசி நிமிடம் வரை விளையாடும் ஆசையில் குழந்தைகள்.
ஸ்டாம்ப் கேர்ள் இன்னமும் இருந்தாள். குஷியின் கண்களில் திடீர் மலர்ச்சி. "There she is" என ஓட்டமாய் ஓடினாள். நான் அவள் பையை தூக்கிக்கொண்டு பின்னாலேயே நடந்தேன். ஸ்டாம்ப் சிறுமியிடம் என்னவோ பேசினாள், சிரித்தாள்.

அப்போது தான் ஸ்டாம்ப் அட்டையை மறந்துவிட்டாளே என உறைத்தது. நான் ஸ்கூல்பேகை திறந்து அந்த அட்டையை எடுத்து குஷியையும், அந்த சிறுமியையும் நெருங்கினேன்.

”வெயிட்..அதெதுக்கு? உள்ள வைப்பா” என சற்றே கடுக்கடுத்து குஷி அவளிடமிருந்து விலகினாள். ”அவள் என் கிளாஸ் தாம்ப்பா. அதான் போய் பேசினேன்”

”சரி ஸ்டாம்ப் வாங்கிக்கலையா குஷி?”

“நான் தான் இன்னிக்கு முழுசா நடக்கலையே”

குழந்தைக்கு நேர்மையை கற்றுத்தர வேண்டாம் நாம்.
இருப்பதை..

குஷி பள்ளிக்குள்ளே போய்விட்டிருந்தாள். நான் அவள் போன திசையை பார்த்துக்கொண்டிருந்தேன்.

+++++++

Tuesday, June 9, 2015

தங்க்லீஷ் என்றோர் இனமுண்டு



ஆங்கில காமிக்ஸ் உலகில் The Bizarro World என ஒரு பாப்புலரான சிரீஸ் உண்டு. அதாவது நமது உலகை போலவே, ஆனால் வேறு முகம் கொண்டு இயங்கும் தனி உலகம். ஒரு தலைகீழ் Parallel Universe என சொல்லலாம்.

போலவே தமிழ்நாட்டில் இருந்து சோஷியல் மீடியாவில் இயங்குபவர்களில் இரண்டு உலகம் உண்டோ என தோணும். அதாவது, நம்மை போல் தமிழில் எழுதுபவர்கள். இன்னொரு வகை தங்க்லீஷ் க்ரூப்புகள். தமிழ்ச்சூழலில் இயங்குவார்கள். தமிழ்ச்சினிமா, இசை, பிரச்சனைகளை பேசுவார்கள். ஆனால் தமிழில் டைப்படிக்காத தங்க்லீஷ் க்ரூப்புகள்.

சரி, இருவரும் தமிழர்கள் தானே, டைப்படிக்கும் மொழி தானே வேறு என நினைத்தால் அது தான் இல்லை. ரசனை, விருப்பு வெறுப்பு சார்ந்து பல நுண்ணிய வேறுபாடுகள் உண்டென தெரிகிறது. சுருக்கமாய் தங்க்லீஷ் என ஒரு இனமுண்டு, தனியே அவருக்கோர் குணமுண்டு.

1. Macha என டைப்புவார்கள் மச்சானுக்கு. இந்த ‘மச்சா’ கலாச்சாரம் எங்கிருந்து வந்ததென புரியவில்லை. நானும் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து பல ஊர்களில் சென்னை வரை வசித்திருக்கிறேன். ’மச்சா’ என யாரும் விளித்து கண்டதில்லை. (ஐ)ஐடி என வந்து செட்டிலான வட இந்திய க்ரூப்களிருந்து வந்ததென நினைக்கிறேன்..

2. பொதுவாய் சென்னையை தாண்டி (அதுவும் மத்திய,தென்சென்னை) கண்டுகொள்ளமாட்டார்கள். பத்து நாட்களுக்கு ஒருமுறை ‘Chennai is a city. Madras is an emotion' பகிர்வார்கள். 10 things Chennaiites should not miss போன்ற Buzzfeed, Scoopwhoop லின்க்குகளை பகிர்வார்கள். அதில் ஃபில்ட்டர் காப்பி, மெரினா பீச், ஸ்ட்ரீட் கிரிக்கெட் படங்கள் கட்டாயம் இருக்கும்.

3. NRI என்றால் ஊருக்கு லீவுக்கு போன முதல் வாரம் “Reading The Hindu with filter coffee in Balcony. #Bliss" இல்லை பெசண்ட் நகர் பீச்சில் பானிபுரி, கரும்புஜூஸ், பன்னீர் சோடாவோடு ஸ்டேடஸ் போடுவதன் சாத்தியக்கூறுகள் அதிகம்.

4. கிரிக்கெட்டில் இங்கிலாந்து - கென்யா டெஸ்ட் மேட்ச்சை தேடிப்பிடித்து ஸ்கோர் பகிர்வார்கள். இல்லை கங்குலி காலத்தில் க்ரெக் சேப்பலோடு வந்த சண்டை பற்றிய cricinfo கட்டுரையை அலசுவார்கள். IPL என்றால் ’விசில் போடு’ போன்ற அரதப்பழசான ஸ்லோகன்களோடு CSKவை சப்போர்ட் செய்வார்கள்.

5. விளம்பர தட்டிகளில் உள்ள ஆங்கிலப்பிழைகளை ஃபோட்டோ எடுத்து வைரலாக பரப்புவார்கள். “Satish BEDS Deepika" ஷேர் செய்து கெக்கெபிக்கே ஸ்மைலி போடுவார்கள். ஊர்ப்பக்க ஹோட்டல் மெனுக்களில் உள்ள பிழைகளை (Gopi Manjuri) எடுத்துப்போடுவார்கள். ஹிந்தியும் தெரிந்தவர்களாக இருந்தால், எப்படி அது GoPi இல்லை GoBi என ரகுதாத்தாவாக கிளாஸ் எடுப்பார்கள்.

6. ஊர்ப்பக்கம் ஏதும் ட்ரைவ் போனால் திருமண வாழ்த்து, காதுகுத்து ஃப்ளெக்ஸ் போர்டுகளை ஃபோட்டோ பிடித்துவைத்துக்கொள்வார்கள். அதில் வரும் “Super Boy's" "Lover Boy's" ”Thala Army" போன்ற டெர்மினாலஜிகளை ஷேர் செய்து கிகிள் செய்வார்கள்.

7. பொதுவாய் எல்லா கமல் படங்களையும் Classic, WhyKamalIsGod என கொண்டாடுவார்கள். அதுவும் மைக்கேல் மதனகாமராஜன், நாயகன் காலம் தான் விருப்பம். வயது சற்றே கம்மி இல்லை யூத்தாக காண்பிக்க வேண்டுமென்றால் “THALAIVAR ROCKS IN LINGAA" என்பார்கள். அஜீத், தனுஷை ஏற்றுக்கொள்வார்கள். அதென்னவோ விஜய்யை ரொம்ப சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

8. ரஜினியை கொண்டாடினாலும், நார்த்தீஸ் பரப்பும் Chuck Norris வகை ரஜினி குறட்டை விட்டால் பூகம்பம் வரும் டைப் மொக்கை காமெடி, கார்ட்டூன் படங்களை பரப்பி அகமகிழ்வார்கள்.

9. காமெடியை ரசிப்பார்கள். ஆனால் கவுண்டரை தாண்டி வரமாட்டார்கள். #WhyGounderIsGod ஒரு உசிதமணி டேக். அதிலும் கவுண்டரின் ரேர் காமெடிக்குள் எல்லாம் புகுந்து புறப்படமாட்டார்கள். மேலோட்டமாய் வாழைப்பழ காமெடி, சத்தியசோதனை என்பதற்குள் முடித்துக்கொள்வார்கள். கொஞ்சமாய் வடிவேலுவை சேர்த்துக்கொள்வார்கள். கிரேசிமோகனை எவர்க்ரீனாய் கொண்டாடுவார்கள்.

10. சமீப காலங்களில் இவர்களுக்கு தக்காளி தொக்காய் இருப்பது விஜயகாந்த். அவரின் சமீபத்திய வீடியோக்களை விட நரசிம்மா காலத்து சீன்கள், ஃபைட்டு வீடியோக்களை #Gaptun என மறவாது டேக் போட்டு மகிழ்வார்கள். டீ.ஆர் மீம்கள், gifகளும் மேலதிக விருப்பத்தோடு பகிர்வார்கள்.

11. திடீரென சனிக்கிழமை காலை Chennai Streetfood culture என SLRஉடன் கிளம்பிவிடுவார்கள். மயிலாப்பூரில் ரோஸ்மில்க் விற்கும் கடை, கற்பகாம்பாள் மெஸ், ராயர் மெஸ், அடையாரில் பஜ்ஜி போடுமிடம் என தென்சென்னைக்குள்ளேயே  ஜோலியை முடித்து ஃபில்ட்டர் காபி ஆவியுடன் இன்ஸ்டாகிராமில் படம் போடுவார்கள்.

12. அவ்வபோது Am at Landmark quiz, Singer Karthik rocks at #IITSaarang, Amish Tripathi at CrossWord என ஸ்டேடஸ் போடுவார்கள். ஜஸ்டின் டிம்பர்லேக், ப்ரூனோ மார்ஸ், டெய்லர் ஸ்விஃப்ட்டின் புதிய சிங்கிள்ஸ் வந்தால் Vevo லின்க் ஷேர் செய்து சிலாகிப்பார்கள்.

13. வகிடெடுத்து வாரிய, புட்டிக்கண்ணாடி போட்ட பீட்டர் என நினைத்துவிடக்கூடாதே, நாங்களும் தரைலோக்கலு என காட்டவேண்டுமென #WuthaDei என கொஞ்சம் பேட்வர்ட்ஸ் பேசுவார்கள் (அர்த்தம் புரிந்தோ, புரியாமலோ).

14. அநாதையான நாய்க்குட்டிகள் சாரி Puppies தத்தெடுத்துக்கொள்கிறீர்களா ஒன்லி 25000 என சின்ன காக்காய் முட்டை போல் நெட்டில் கடைவிரிப்பார்கள். ஆனால் ஒருவர் கூட அவர்களே தத்தெடுத்து நான் பார்த்ததில்லை.

15. அரசியல் என்றால் மோடியை சிலாகிப்பார்கள். ராகுலை பப்பு என்பார்கள். பிஜேபிக்கு எதிரி ஆனதிலிருந்து கேஜ்ரிவாலை வைவார்கள். பொதுவாய் கலைஞரை தாத்தா என அழைப்பார்கள். பொதுவாய் ஈழம், இடஒதுக்கீடு, கூடங்குளம், காவிரி, முல்லைப்பெரியாறு, ஊழல் வழக்கு எந்த சமூக, அரசியல் பிரச்சனையானாலும் சரி, ’அம்மா சரி, கலைஞர் தவறு’ என்ற ஒற்றைவரி நிலைப்பாடுக்குள் அடக்கிவிடுவார்கள்.

+++++++