Wednesday, May 15, 2013

அரைக்கிழவனின் வியாக்கியானம்


ஆச்சு. இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா?). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய டப்பா மாறுகிறது. குறுந்தொப்பை நிரந்தரம். Midlife crisisக்கான அறிகுறிகள் லேசுபாசாய் தென்படுகிறது.

இது ஒரு taking stock of life பதிவு. இந்த 35 வயதில் நான் கற்றதும்,பெற்றதும் என்ன?


35 வயதில் என்ன சாதித்தாய் என்றால் ஒன்றுமில்லை. கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கிறேன் (touch wood). அமெரிக்காவில் ஊர் ஊராய் ஓடி, திரவியம் தேடி, தங்கைகள் திருமணத்துக்கு தோள் நின்று, களைத்து, வடக்கே கனடாவில் ஒதுங்கி, வீடு வாங்கி, நல்லது/கெட்டதுக்கு 4 நட்புக்கள் சேர்த்து, செந்திலை புரிந்திருக்கும் கரகாட்டக்கார கவுண்டமணியாய் ஒரு மனைவியும்,  ”தங்கமீனாய்” ஒரு மகளும், குடியுரிமைக்கு (டாஸ்மாக் அல்ல) காத்திருத்தலுமாய் வாழ்க்கை ஓடுகிறது.

கரியர்,வேலை என லௌகீக விஷயங்களில் ஒரு தெளிவு வந்த்திருக்கிறது. நான் 'சுந்தர் பிச்சை' மெட்டிரியல் இல்லை என உணர்கிறேன். ”எங்கப்பா என்னை படிப்புக்கப்புறம் வேலைக்கு போக சொன்னாரு, PhDயா படிக்கவெச்சாரு?” என சப்பைக்கட்டு கட்டுகிறது மனசு, IIT நுழைவுத்தேர்வில் பரம கோட்டு அடித்ததை மறந்துவிட்டு. ஆனால், பொதுவாய் கூடப்படித்தவர்களின் linkedin பக்கங்களை அவதானிக்கையில், ரேசில் பின் தங்கிவிடவில்லை என நிம்மதி.

பணம் இன்னும் அந்நியமாய் போய்விடல்லை. தேவைகளும் குறைந்தபாடில்லை. அதுக்கு சுஜாதா போல் 70 வயது ஆகியிருக்கனுமோ என்னவோ? ஆனால் வாத்தியார் சொல்வது போல் priorities மாறியிருக்கிறது.
காலையில் களைப்பின்றி எழுந்து நிம்மதியாய் வெளியே போனால் சுகம் என சொன்னதன் அர்த்தம் புரிகிறது. பணத்தைவிட நிம்மதி முக்கியம் என உணர்கிறேன். நேரம்,நோக்கம் ஏதுமின்றி சனிக்கிழமை காலை மனைவி/மகளை கட்டிக்கொண்டு சும்மா படுத்திருக்க பிடித்திருக்கிறது.

உடல்நலம் பெரிதாய் பாதகமில்லை. இதுவரையில். ஆனால், 8 மணி ட்ரைனுக்கு 7.55க்கு பார்க்கிங்கில் இருந்து ஓடமுடிவதில்லை. மூச்சிரைக்கிறது. மசால்வடை அவ்வளவு எளிதில் ஜீரணமாவதில்லை. இளைத்தபின் போடுவேன் என்ற பேண்ட்டுகள் சிரிக்கின்றன. தலைவாரிய பின் பேசினில் கிடக்கும் முடிகள் பீதியை கிளப்புகின்றன.

உடலை கவனிக்கனும் என புத்திக்கு தெரிகிறது. ஆனால் 15 டாலர் பஃபேக்கு போன வயிற்றுக்கோ, பார்ட்டிக்கு போன மனசுக்கோ தெரிவதில்லை. திடீரென வீறுகொண்டு 8 கிலோமீட்டர் நடக்கிறேன். முளைக்கட்டின பயிரை உண்கிறேன். பின்னிரவில் பசித்து குர்குரேவயும் தின்கிறேன். இடும்பைக்கூர் என் வயிறும்,நாக்கும்.

ரசனை சார்ந்த விஷயங்களிலும் முன்போல் பரவலாக தொடர முடிவதில்லை. புதிதுபுதிதாய் வரும் பாடகர்களை அடப்போங்கடா என விட்டு விடுகிறேன். எம்பி3 தேடி அலைவதில்லை. ஐட்யூனில் ஆர்கனைஸ் செய்வது நேரவிரயமாக தெரிகிறது. கேடிபில்லா கில்லாடி ரங்காக்களை மிகச்சரியாய் பத்து நிமிடங்களில் அணைத்துவிட முடிகிறது. நமக்கென்று ஒரு ஃபோகஸ் இசை, புத்தக விருப்பத்தை எடுத்துக்கொண்டு அதில் உழன்றுவிட விழைகிறேன். ராஜா,கம்பர் என வேலிப்போட்டுக்கொண்ட சொக்கன்களை பொறாமையோடு நோக்குகிறேன்.

கேட்ஜட்ஸ் இன்னும்  மோசம். Tab வகையறாக்களை பாவிக்க பிடிப்பதில்லை. லேப்டாப் ஏதேஷ்டம். 5 வருடங்களில் லேப்டாப்பே இருக்காதாமே என்பது கிலியாக இருக்கிறது. வாட்சாப் புரியமாட்டேங்கிறது. புரிய என்ன இருக்கிறது என்றார் ஒருத்தர். ஹ்ம்ம், இல்லை, இப்பவும் புரியலை.


இளைஞர் என்ற நிலை கிட்டத்தட்ட(!) போயாகிவிட்டது. நிறைய பேர் பொதுவாய் சின்னவர்களாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். குறிப்பாக சமூகவலைதளங்களில். ட்வீட்டு, FB ஸ்டேடஸ்களின் தொனியை வைத்தே பொடிப்பசங்களை கணிக்கிறேன் (Thala Ajith is Mass வகையறாக்கள்).  துள்ளுபவர்களை கமல் போல் “பொடிப்பசங்களா..யார்கிட்ட” என கடக்க முடிகிறது. இணக்கமான இளையர்களிடம் உரிமையில் ஒருமையில் இயல்பாய் தாவ முடிகிறது. சமவயதினரிடம் “கொண்டக்கடலை ஊறவெச்சு சாப்பிடனுமா, ஊறவெச்ச கொண்டக்கடலைய சாப்பிடனுமா” என டயட் பேச்சுக்கள் அதிகரிக்கிறது.  சமூகவிழாக்களில் “பொண்ணுக்கு கல்யாணம்ங்கிறது பெரிய பொறுப்பு சார்” க்ரூப்பிலும், முதல்/இரண்டாம் குழந்தை பெற்ற நண்பனை கொஞ்சம் லேசுபாசாய் ரசாபாசமாய் ஓட்டும் க்ரூப்பிலும் இரண்டிலுமாய் பால்மாறி பேசமுடிகிறது.

மனதும்,புத்தியும் பக்குவப்படவில்லை. ஆனால் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருக்கிறது. பிரச்சனை நேரங்களில் ”என்ன இப்ப” என சற்று விலகி சாதக,பாதகங்களை அலசமுடிகிறது. மானம், மரியாதைக்கு எங்காவது பங்கம் வந்தால் சுர்ரென்று கோபம் வருகிறது. குறிப்பாக உறவுகளிடம். இன்னமும் விவரம் கேட்பீர்கள்யேயானால் குறிப்பாக மாமியார் வீட்டு உறவுகள் ;-)



காமம் ஆசாபாசங்கள் சற்று மட்டுப்பட ஆரம்பித்திருக்கிறது. இவ்வளவு தானா இது, அடப்போங்கடா என்ற இடத்துக்கு வந்தாயிற்று. உழைத்துக் களைத்து தூங்கும் மனைவியை தொந்தரவு செய்ய முயலுவதில்லை. யதேச்சையாக செய்வது போல் அவள் தோளை பிடித்துவிடுகிறேன். உடல் தாண்டி, அவளுக்கிருக்கும் பிரச்சனைகள், முன் நரைகள்,உணர்வுகள், ஸ்ட்ரெஸ், மோசமான அதிகாரி, கனவுகள் எல்லாம் சேர்த்ததுதான் மனைவி என புரிகிறது. அதற்காக வாரயிறுதி இரவுகள் இல்லாமலும் இல்லை.

தீவிர கடவுள் தொழல்கள், தத்துவ தேடல்கள் ஆரம்பித்திருக்கிறது. எதற்கும் சக்திவிகடனில் குருப்பெயர்ச்சி பலன் கும்பத்துக்கு என்ன போட்டுருக்கான் என பார்த்து விடுகிறேன்.  எனக்கான ஒரு கொழுகொம்பை தேடி பிடித்துக்கொள்ள வேண்டும் என புரிகிறது. கர்மா, முக்தி என தத்துவகுழப்பங்கள் தாண்டி சிம்பிளாய் நல்லவனாய் இருந்துவிடுவது ஈசியாக படுகிறது. பொதுவாய் நமக்கு பிடித்தமானவர்களிடம் ஒரு உண்மையான வாஞ்சை,அக்கறை தோன்றுகிறது. நண்பனுக்கு பிரச்சனை என்றால் அடடா என ஒரு பதட்டம் வருகிறது. மெய், மெய்நிகர் இரண்டு உலகிலேயும் அந்த அக்கறை இயல்பாய் வருகிறது. ஒருத்தரை புண்படுத்தி,குழிபறித்து ஓரெழவும் ஆகப்போவதில்லை என புரிகிறது.

சாவை பற்றிய பயம் இன்னும் வரவில்லை. ஆனால், பொட்டுன்னு போனால் மனைவி/மகள் என்ன செய்வாள், என் உடலை ஐஸ்பொட்டியில் ஃப்ளைட் ஏத்த ஆள் வருமா என்ற பயம் உண்டு. இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்டுகளை முன்போல் சூச்சூ என விரட்டுவதில்லை . வெள்ளைக்காரன் போல் Will (உயில்) எழுதிவைத்துவிடலாமா என திவீரமாய் யோசிக்கிறேன். எங்கு ரிடையர்மெண்ட் வாழ்க்கை (”ஃப்ளோரிடால ஷாந்தினிகேதன்னு ஒரு தேசி கம்யுனிட்டி இருக்காமே”, “என் கட்டை புதுக்கோட்டை கீழரெண்டாம் வீதில தான் வேகும்”) என்பதான சம்பாஷனைகள் அவ்வபோது நடக்கின்றன.

ஆகக்கூடி, என் வாழ்க்கை கிளாசில் தண்ணீர் இப்போது நட்டநடுவில். அதை Half empty அல்லது Half full என இருவாறாக பார்க்கலாம்.

நான் இரண்டுமின்றி தண்ணீரும்,காற்றும் சந்திக்கும் கோட்டினை உற்று நோக்குகிறேன். மெதுவாய் குறையும் அப்புள்ளியில் உண்மையாய் வாழ்ந்துவிட பார்க்கிறேன்.

ஏதோ எனக்கு தெரிந்த ஜென்.

சாப்பிட்டா கீழ மொய் எழுதனும்..பொண்ணப்பெத்தவன் பாருங்க ;-)