Wednesday, June 20, 2012

தொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல்

பாகம் 1 (விஜயசாந்தி ஸ்பெஷல்): ( இங்கே) 


தெலுங்கு டப்பிங் படங்களில் விஜயசாந்தியை சொல்லிவிட்டு டாக்டர் ராஜசேகரை பற்றி ’சொல்லாட்டி போனா’,  இந்த பிளாகே கொந்தளிப்பாகி “லா அண்டு ஆர்டர்” கெட்டுப் போய்விடும்.
 1989 டிசம்பரில் தான் ‘இது தாண்டா போலிஸ்” என்ற அதிசயம் நிகழ்ந்தது.

ஒரு unique டைட்டிலா, தூர்தர்ஷனில் 10 நிமிஷத்துக்கு ஒரு முறை வந்த ‘ஹேய்ய்ய்ய்ய், இதுதாண்டா ப்ப்ப்ப்ப்ப்ப்ப்போஓஓஓலிஸ்” விளம்பரமா, பொங்கல் ரிலீஸ் காத்திருப்பில் சினிமா வெறியர்களுக்கு இது ஸ்டாப்கேப் படமாக பட்டதா என தெரியவில்லை. மெல்லிசாய் சீறி, பின் பட்டையை கிளப்பும் 5000 வாலாவாக, சடசடவென தமிழ்சினிமாவில் ராஜசேகர் எரா துவங்கியது.


ராஜசேகர் யாரென சுருக்கமாக பார்த்துவிடுவோம். அடிப்படையில் தமிழர். சென்னைவாசி. டாக்டருக்கு படித்து அமிஞ்சிக்கரையில் ப்ராக்டிஸ் செய்தவர். பாரதிராஜாவின் புதுமைப்பெண்ணில் அறிமுகமாகி,  தமிழர்கள் கைவிட, மனவாடுகளால் மனதார ஏற்றுக்கொள்ளப்பட்டவர். ஒரு களையான முகம் என்பதை தவிர  எந்த பெரிய காந்தமும் இல்லைதான். ஆனால் ஒரு பொறி இருக்கும். அசமஞ்சத்தனம் இருக்காது. கோபத்தை அச்சு அசலாக பிரதிபலிப்பார். எம்ஜியார் போல் உதட்டு ரத்தம் வரும்வரைக்கும் எல்லாம் நோ வெய்ட்டிங். மான்புமிகுவோ, மாமூலான ரவுடியோ/போலீசோ, பொளேரன்று முதல் அடி இவருடையது தான்.

ராஜசேகர் ஆக்சன் ஹீரோவாகினும் பாடி பில்டரெல்லாம் கிடையாது. குறைந்தபட்ச ஆர்ம்ஸ் கூட கிடையாது. நெஞ்சை விடைத்து, கையை புடைத்து ஒரு பயில்வான் ஃபீல் கொண்டு வந்துவிடுவார். மூஞ்சை மூஞ்சூரு போல் முறுக்கி  முறைத்து ஒரு அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தி விடுவார். நடை கந்தன் கருணை சிவாஜி ரேஞ்சுக்கு, எலக்ட்ரிக் ட்ரைன் சுவர் நோட்டிசில் உள்ள வியாதிகள் வந்தது போல், காலை அகட்டி வீரமாக நடந்தால் தியேட்டரில் ரசிகன் புல்லரிப்பான்.

அவர் குரல் இருக்கிறதே..அடடா..காந்தர்வ குரல். சாய்குமார் என்பவர் இதற்கென்றே பிறவி எடுத்திருப்பார்.  தமிழை சுந்தரத்தெலுங்கில் பேசியிருப்பார். ராஜசேகரே டபுள் பேமெண்ட்டுக்கு ஓவராக்டியிருக்க, இவர் டப்பிங்கில் இன்னும் உணர்ச்சிவசப்படுவார். பின் சாய்குமாரே, அடப்போங்கடா என ஹீரோவாக மாறினார். அந்தப்புரத்தில் சௌந்தர்யா ஜோடியாக வருவாரே..அவரே தான்.

டப்பிங் படங்கள் genre என்ற வகையில் ராஜசேகர் ஒரு ட்ரெண்ட் செட்டர்.
ராஜசேகர் படங்கள் நாளன்னைக்கு புரட்சி வந்துவிடும் என்ற லெவலிலேயே இருக்கும்.அவர் படங்களின் படி, தொண்ணூறுகள் ஆரம்பத்தில் ஆந்திராவில் கொடூரமான அரசியல்/சமூக சூழல் நிலவியிருக்கவேண்டும். கிரேப்ஜூஸ் குடிப்பது போல ரேப்ஸ் நடந்திருக்கவேண்டும். “ஸ்பாட்டு வைப்பது, மர்டர் செய்வது” போன்ற கோர்ஸ்களை முடித்து, ஐடி கம்பெனி போல இளைஞர்கள் அடியாளாய் சேர்ந்திருக்க வேண்டும். எம்ஜியார் இறப்புக்கு பிறகு தமிழ் அரசியலும் சட்டசபை அடிதடி என சிலாக்கியமாக இல்லாதது வசதியாக போய்விட்டது.  வெட்டி ஆபிசர்கள் காலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துவிட்டு, மதியம் ராஜசேகர் படம் பார்த்துவிட்டு, மாலை தலைவலியோடு வீட்டுக்கு வந்து, இரவு 4  “ஏய் அரசே” கவிதை எழுதுவான்கள் (எழுதியிருக்கிறேன் :)). சுருக்கமாக, ”எல்லாரும் ஃப்ராடுங்க சார்” என்ற யுனிவர்சல்  கோபத்தை நன்கு  முதலீட்டாக்கியது ராஜசேகர் படங்கள் எனக்கொள்ளலாம்.


ராஜசேகர் படங்களில் டெக்னிக்கலாக ரொம்ப மெனக்கெடல்கள் எல்லாம் கிடையாது. படம் அழுக்காக, எடிட்டிங்லாம் “இங்கே வெட்டிங், அங்கே ஒட்டிங்” லெவலிலே தான் இருக்கும். பாடல்கள் பொதுவாக நாராசம். ராஜாவை முறைத்துக்கொண்ட, ரஹ்மான் வராத காலக்கட்டத்தில் வைரமுத்து “என் கிரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்” லெவலில் தெலுங்கு வாயசைப்புக்கு பாடல் எழுதிருப்பார்.

கதைகள், கேரக்டர்கள் ஒரே டெம்ப்ளேட் தான். ராஜசேகர் போலீஸ்கார், ஆர்மிக்கார், நேவிக்கார் என ஏதோ ஒன்று. மூக்கின் மீது கோவம். பார்க்கிறவனையெல்லாம் 2 தட்டு. நல்ல/கெட்ட அரசியல்வாதி, மனைவி சாவு, பழிவாங்கல், ஜெய்ஹிந்த் என படம் ஒவர்.  அமைச்சர் தேசியக்கொடியை தலைகீழாக தொங்கவிட்டு  போகிறாரா? காரை நிறுத்தி சட்டையப்பிடி. போலீஸ் ஸ்டேஷனில் மிரட்டலா? கண்ணை உருட்டி 2 அறை விடு. ப்ராப்ளம் சால்வ்ட்.

கேரக்டர்கள் எனப்பார்த்தால் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு சிலபல அரசியல்வாதிகள், மாவா மோவாயில் வழிய ‘ஸ்பாட்டு’ வைக்கும் தாடி அடியாள், சகட்டுமேனிக்கு மெயின் வில்லனை ஓட்டும் காமெடி வில்லன் (குறிப்பாய், இப்படத்திலிருப்பவரை ஒய்.ஜி.ம்ஹேந்திரா வாய்சில்  கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள்),  வேவு பார்த்து சாவும் ஒரு ஜோல்னா ஜர்னலிஸ்ட், ”உங்க கோவத்தை கண்ட்ரோல் பண்ணுங்க” என சொல்ல ஒரு காக்கி சூட் DIG, வில்லனால் சாவதெற்கென்றே ஒரு மனைவி (முக்கால்வாசி ஜீவிதா), ஒரு செல்லமகள் அவ்வளவே. ரொம்பக்காலத்துக்கு 2 சீன் வந்து செத்துபோற ஹீரோயின் தானே என தன் மனைவி ஜீவிதாவை வைத்து ஒப்பேற்றினார். லெவல் கூடியபிறகு அமலா, மீனா என தன்னை ”அம்மாடி அம்மோவ்” என துரத்திக் காதலிக்க ஆள் சேர்த்துக்கொண்டார்.

இந்த இடத்தில் டப்பிங் படங்களில் அவர் கரியர் கிராஃபை பார்ப்போம்.
அடிப்படையில் இதுதாண்டா போலீஸ் ஒரு மொக்கை கதை. முதல் காட்சியிலிருந்தே ஒரு நல்ல முதல்வரை கவிழ்க்க நினைக்கும் நம்பர் 2. நம்பர் 2 என்றால் மலச்சிக்கல் இல்லை. மனச்சிக்கல் தரும் ஒரு ஹோம் மினிஸ்டர். சிஎம்மின் பழைய மாணவனான ’இன்ஸ்பெக்டர் விஜய்’ அவரை உயிரைக்கொடுத்து காத்து ‘அ டெடிகேசன் டு சின்சியர் போலீஸ் ஆபிசர்ஸ்’ என ஸ்லைடு போட்டு சுபம். அவ்வளவே அவ்வளவு தான் கதை. ஆனால் குத்துமதிப்பாய் போரடிக்காது போகும்.

எதுக்கோ தமிழில் பேயோட்டம் ஓடியது இப்படம். அங்குசம் என தெலுங்கில் ஹிட்டடித்து, ராஜசேகர் உட்பட பலருக்கு டப்பிங் பொறி தட்ட, உடனே பொட்டியை தூசு தட்ட, அது சொப்பனசுந்தரி காராய் பலருக்கு மாறி, கடைசியில் ராஜசேகரே டப் செய்து செம கல்லா கட்டினார். டிசம்பரில் வந்து பொங்கல் படங்களையெல்லாம் தாண்டி ஓடியது. பொங்கலும் நடுவுல இல்லைன்னா கோடில சம்பாதிச்சுருப்பேன் என ஒரு சமீப பேட்டியில் பெருமூச்சு விடுகிறார்.

இங்கு ஒரு செய்தி. நாம் அனைவரும் சிலாகிக்கிறோமே ரமணாவின் புள்ளிவிவர டயலாக். அது அச்சு அசலாய் “நூத்துக்கு 40 பேரு சாகிறாங்க” கடைசி லைன் உட்பட இதுதாண்டா போலீசில் முதல்வர் கேரக்டர் சொல்வது !

இ.தா.போ ஓடினாலும் ஓடியது..தேன்கூட்டை கலைத்தது போல், அவர் நடித்த அத்தனை திராபை படங்களும் அடுத்தடுத்து வர ஆரம்பித்தன. என்னவோ நேரடி தமிழ்ப்படம் வருவது போல விகடனில்  இரண்டாவது படமான “மன்னிக்க வேண்டுகிறே”னுக்கு பெரிய கவரேஜ். பிறகு ‘நான் மந்திரியானால்’, ‘மீசைக்காரன்’, ‘ஆம்பளை’, ‘எவண்டா உங்க MLA” என லைன்கட்டி ஒன்றரை டஜன் ராஜசேகர் படங்கள் வந்தன.

என்ன மேட்டரென்றால், இதில் பல படங்கள் செம போங்கு. ஒன்று அவரது ஆரம்பக்கால ஓடாப்படங்கள். இல்லை, அரைவேக்காடுகள். அதிலும் குறிப்பாக மீசைக்காரன். ராஜசேகர் ஒரு குமுதம் இதழை “தயாரிக்க” அதில் கவர்ஸ்டோரி போட்டு பெப் ஏற்றப்பட்ட படம். ராஜசேகரும் தன் பட்ஜெட் லெவல் ஏறியதில் அந்நாள் நடிப்பு சூறாவளியான பேபி ஷாமிலியை தன் மகளாக 4 நாள் கால்சீட்டில் பிடித்துப்போட்டு எடுத்தார். ஒரு சேதி என்னவென்றால் போஷாக்கான சரத்குமார் ராஜசேகரிடம் பல்பு வாங்கும் ஒரு சிரிப்பு போலீசாக இப்படம் நெடுக வருவார்.
அடித்து பிடித்து படம் பார்க்க போன ரசிகன் பாதிப்படத்துக்கு ராஜசேகர் 'இல்லாட்டி போயி’ டரியலானான். ஒரு நல்ல அமைச்சர் “தேக்கோ தேக்கோ சாரே ஜஹான்சே அச்சா, ஆண்டவன் இயற்கை அன்னைய படைச்சா(ன்)” என்று பாடி(?), டூர் போய் கடத்தப்படுவதையே வைத்து பாதி படம் ஒப்பேற்றினார்கள்.

விஷயம் என்னவென்றால், ராஜசேகருக்கு செம ஆக்சிடண்ட் படத்தில். 75 வருட இந்திய சினிமா வரலாற்றில் இல்லாத வகையாக, திடீரென ஒரு சேசிங்கில் ஸ்க்ரீன் ஃப்ரீஸ் ஆகி ஜூம் ஆகும். “டாக்டர் ராஜசேகருக்கு ஆக்சிடெண்ட் ஆன நாள், இடம் இது தான்” என ஒரு ஹைதிராபாத் முட்டுச்சந்தை காட்டுவார்கள். அப்புறம், ஒன்னுமே நடக்காதது போல் படம் திரும்ப ஆரம்பிக்கும். என் கணிப்பில் எஸ்.ஏ.சிக்கு “இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்”க்கு இதுவே இன்ஸ்பிரேசனாக இருந்திருக்க வேண்டும். ஒரு சீனில் தலை நரைத்த கெட்டப், இன்னொன்றில் இளமையாய் என மீசையை தவிர மீசைக்காரனில் எந்த கண்டினியுடியும் இருக்காது. இவ்வளவு இருந்தும் மீசைக்காரன் திண்டிவனத்தில் 75 நாள் ஓடியது என கார்க்கி மூலம் அறிகிறோம்.

பின் பலப்படங்கள் பல்ப் வாங்க, கொஞ்சம் கேப் விட்டு ரிலீஸ் செய்த “எவனாயிருந்த எனக்கென்ன” அவருக்கு கடைசியாக ஒரளவுக்கு ஓடிய படமாக இருக்கவேண்டும். பின் மெய்க்காப்பாளன், போனவருடம் இதுதாண்டா போலீஸ் 2 (வந்ததாவது தெரியுமா உங்களுக்கு) என அதற்குப்பிறகு தமிழில் இன்று வரை வெற்றி கைக்கூடவில்லை.

இன்று ராஜசேகரின் சினிமா கரியர் அல்மோஸ்ட் ஒவர். ஆட்சியை காப்பாற்றுவதை விட்டுவிட்டு மீரா ஜாஸ்மினோடு ’மருதாணி’ என தங்கை சப்ஜெக்ட் எடுக்கிறார். அதையும் டப் செய்து பார்க்கிறார். தெலுங்கிலேயே தூக்குடுவை நேரடியாய் பார்க்கும் தமிழன், ராஜசேகர் படத்தை கண்டுக்கொள்வதில்லை. அரசியலில் முட்டிமோதுகிறார். கிட்டத்தட்ட எல்லா கட்சியிலும் இருந்துவிட்டார். இப்போது ஜெகன்மோகன் கட்சி என ஏஜன்சி செய்தி. சிரஞ்சீவியை ஏதோ சொல்லப்போய், இவர் சினிமாவில் குத்தும் ஊமைக்குத்தை இவருக்கே குத்திவிட்டார்கள் மெகாஸ்டாரின் ஃபேன்வாடுகள். சிரஞ்சீவி வீட்டுக்கே போயி நியாயம் கேட்டு, அவரும் நமுட்டு சிரிப்போடு தன் ரசிகர்களை அமைதிக்காக்க சொன்னார். இவர் போறாத காலம், நடிகை சோனா முதற்கொண்டு “கண்டமனூர்க்காரர் என்னை கண்டம் பண்ணிட்டார்” என புழுதி தூற்றுகிறார்கள். வயதாக ஆக, தன் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளும் விதத்தில் சற்று சறுக்கிவிட்டார் என்றே சொல்லலாம்.

எது எப்படியோ, ரைஸ்மில்லில், வெங்காயமண்டியில் வந்த பணத்தில் ராஜசேகரின் படத்தை டப் செய்து அவரால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என அந்தஸ்தும், லாபமும் அடைந்த பலரும் இன்றும் அவர்க்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கக்கூடும்.

அதைவிட முக்கியம், ராமாநாயுடு, NTR, நாகேஸ்வர ராவ், அல்லு அரவிந்த் என 3,4 குடும்பங்களின் பிடியில் பெண்ணெடுத்து, பெண் கொடுத்து, படம் எடுத்து, படம் கொடுத்து இன்று வரை உழலும் தெலுங்கு சினிமாவில், ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்று தனியாளாய் ஜெயித்த தமிழன் என்ற வகையில் ராஜசேகருக்கு அவர் க்ளைமேக்சில் அடிக்கும் விறைப்பான சல்யூட் உரித்தாகட்டும்.

(அடுத்து  ஸ்டைலிஷான ’உதயம்’ எரா படங்கள், அதுக்கு நேர் காண்ட்ராஸ்ட்டான அல்லுடு மஜாக்கா வகைகளை பார்ப்போம்) 

முடிந்தால் ஒரு வரி பிடித்திருக்கா, இல்லையா என சொல்லுங்கள். Feedback is important for my கலைச்சேவை  you know ;-)