Monday, August 26, 2013

ராஜா என்கிற ஆர்.டி.பர்மன்

இது இசைஞானி இளையராஜாவின் மேகா பாடல்களை பற்றிய விமர்சனம் அல்ல. விமர்சிக்க எனக்கு தகுதியில்லை.




பாலிவுட்டில் ஆர்.டி.பர்மன் என்றொரு இசை லெஜண்ட். 60களில் அறிமுகமாகி ஹிந்தி இசையுலகின் ஜாம்பவான் 70களில். ஆர்.டி.பர்மன் பாடலை, கிஷோர்குமாரின் வெண்கல குரலில், தலையை ஆட்டிக்கொண்டு பாடிய ராஜேஷ்கண்ணாவை, இந்திய திரையுலகின் முதல் ‘சூப்பர்ஸ்டார்’ஆக்கி அழகு பார்த்தான் ரசிகன்.  ‘பஞ்ச்சம்’என செல்லமாக அழைக்கப்பட்ட ஆர்.டி.பர்மனின் எனக்கு பிடித்த ஒரு பாடல்  இது.

நிற்க,ஆர்.டி.பர்மன் 80களில் திடீரென மார்க்கெட் இழந்தார்.பப்பிலஹரி கால டிஸ்கோ எராவில் காணாமல் போனார். ஒருபடம் விடாது அவரை புக் செய்த ப்ரட்யூசர்கள், ஆளை மாற்றினர். கயாமத் சே கயாமத் தக் போன்ற படங்களுக்கு புக் செய்து கழட்டிவிட்ட கதைகள் உண்டு. ஆனால், பேட்டிகளில் அவரை லெஜண்ட் என்றனர் (கமல் ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல).

அப்படிப்பட்ட ஆர்.டி.பர்மன், ஃபீல்ட் அவுட்டான 10 வருடங்களுக்கு பிறகு, 1994இல் 1942 லவ் ஸ்டோரி என்ற பீரியட் படத்துக்கு இசையமைக்கிறார். பாடல்கள் பெரிய ஆரவாரம் இன்றி வெளிவருகிறது. ஒவ்வொரு பாடலும் சொல்லிவைத்தாற்போல் அத்துணை புதிதாய், அமர்க்களமாய். கிறுகிறுத்துப் போகிறான் ரசிகன். ட்யூனாகட்டும், இசைக்கோர்வையாகட்டும், தாளக்கட்டாகட்டும்..கிறங்கிப்போகிறான் ரசிகன்.

ஆனால் படம் வெளிவரும் முன், ஆர்.டி.பர்மன் இறந்து போகிறார். ஒரு அசுர சாதனை செஞ்சுட்டு அதுக்கான பலனை பார்க்கறதுக்கு முன்ன செத்துப்போறான் மனுஷன் ! ஃபிலிம்ஃபேர் எப்போதுமில்லாத பழக்கமாய் posthumousஆக 3 அவார்டுகள் கொடுத்து அவரை கௌரவிக்கிறது. தன்னை ஒதுக்கிய பாலிவுட்டுக்கு தன்னை நிரூபித்து விட்டே இவ்வுலகை விட்டு மறைகிறான் ஒரு மகா கலைஞன்!

எனக்கு மேகா அவ்வுணர்வை தந்தது. Raja is back. ராஜா ஆர்.டி.பர்மன் ஆகவேண்டாம். நீடூழி வாழ்ந்து இன்னும் குறைந்தது 25 ஆண்டுகள் தன் புதிய ராஜபாட்டையில் பயணிக்கட்டும்.

எனக்கு ராஜாவை மிகவும் பிடிக்கும். பின் எழுபதுகளில் பிறந்த யாருக்கு பிடிக்காது? ஆனால் 2000த்திற்கு பிறகான அவர் பாடல்களை எவ்வளவு ரசித்தேன் என சொல்லத்தெரியவில்லை. வால்மீகி,ஸ்ரீராமஜெயம் எனத்தேடிதேடி கேட்டாலும் எங்கோ ஒரு சிறுகயிறு அறுந்தது. நீ தானே என் பொன்வசந்தம் எல்லாம் அந்நியமாக அறிமுகமாகி, மெல்ல மனதில் குடியேறிக்கொண்டது வேறு கதை.

ராஜா மேகாவில் ஆடியிருப்பது இசை தாண்டவம். விண்டேஜ் ராஜா. ராஜா காலத்தோடு சேர்ந்து பயணிக்கவில்லை என்றெல்லாம் அவரின் பின்னடைவுக்கு காரணமாக சொல்வார்கள். அதெல்லாம் கப்சா. அடிப்படையில் ராஜாவிடம் ரசிகன் ரசித்தது அவர் ட்யூன்களை. அதிலுள்ள உருக்கத்தை. ஆர்க்கெஸ்ட்ரா, இண்டெர்ல்யூடில் 100 வயலின் போன்ற ஜரிகைகள் எல்லாம் பிறகு. மேகாவில் ராஜா அவ்வகையில் தன்னை மீட்டெடுத்திருக்கிறார். அடிப்படையான ட்யூன்கள் ஒவ்வொன்றும் நின்று விளையாடுகிறது, புகுந்து புறப்படுகிறது.

போலவே, இசைக்கோர்வைகள். கேட்டுப்பழகின ‘அட இந்தப்பாட்டு மாதிரி இருக்கே’இசைத்துணுக்குகள்..ஆனால் எவ்வித துருத்தலுமின்றி, இக்காலத்துக்கான மோஸ்தரில் அந்த ரசவாதம் நிகழ்ந்திருக்கிறது. இசையை விவரிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பாடல்களை பட்டியல் போட்டு, இது பாஸ், ஆவரேஜ் எனப்போவதில்லை. பாடல்களை கேட்டு, உங்கள் முத்தை நீங்களே எடுங்கள். எனக்கான முத்துக்கள் ‘ஜீவனே’ மற்றும் ‘முகிலோ மேகமோ’ (ராஜா பாடியது, ராஜா குரலுக்கான bias உண்டெனக்கு). சொல்லப்போனால் ஆல்பத்தில் உள்ள 5 புதிய தனிப்பாடல்களில் ‘கள்வனே’ தவிர மற்ற எல்லாமே நல்முத்துக்கள். Who knows, that might grow on me too..

ராஜா பாடல்களில் ரசிகன் ரசிப்பது ராஜாவை இல்லை. தன்னை. தன் ரசனையை. அவரின் இசை தன் வாழ்வானுபவங்களோடு போடும் முடிச்சுகளை, தன் கிளறும் நினைவுகளை, குழந்தை கையில் உள்ள முடிக்கமுடியாத ஐஸ்க்ரீமாய் உள்ளங்கையில் உருகி ஓடும் மனதினை. அவ்வகையில் மேகா ஒரு உச்சக்கட்ட தனிமனித அனுபவம். ஜன்னல் ஓர விரைவுப்பேருந்தின் காற்றில் எங்கோ, ஏதோ ஞாபகங்களில் நெகிழ்ந்துருகி, தன்னை இழக்கும் தருணம்.

மேகாவுக்கான ஒரு டீசரில், ராஜா கடைசியில் “You got it?" என கேட்பார்.

யெஸ் ராஜா, வீ காட் இட் !

27 comments:

  1. அப்படிங்களா சாமி?


    நிறைய தட்டுச்சுட்டு அழிச்சிட்டேன், iTunes இருக்கு, ஆனா இன்னும் கேட்கல, கேட்டுட்டு பதில் சொல்றேன்

    ReplyDelete
    Replies
    1. என்னத்துக்கு அழிக்கிறீரு..திட்டுறதுனாலும் திட்டவும் :)

      Delete
  2. சூப்பருங்க...

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும். உங்கள் கமெண்ட் சில பெர்சனல் ரெஃபரன்ஸ்கள் இருந்ததால் டெலீட் செய்யவேண்டியதா போச்சு.

      Delete
  4. கலக்கல். ஆனா கடைசிப் பத்தி விட்டத்தப் பாஹ்துக்கிட்டே எழுதுனதா?.. பாட்டப்பத்தி சொல்ல மாட்டேன் சொல்லமாட்டேனு சொல்லிட்டு பூரா பாட்டையும் வரிசைப்படித்தீட்டீரே ;-)))

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா..ரொம்ப சொல்லலையே..வயலின் வழுக்கி, டிரம்ஸ் எகிறின்னு போகலயே ;)

      Delete
  5. ரசனையான பதிவு இனித்தான் மேகா கேட்கணும் உம்ம பரிந்துரை தான் முதல் காரணம்

    ReplyDelete
    Replies
    1. கானா..எப்படி இருந்துச்சு :)

      Delete
  6. /அடிப்படையான ட்யூன்கள் ஒவ்வொன்றும் நின்று விளையாடுகிறது, புகுந்து புறப்படுகிறது./ நின்று விளையாடுகிறது கூடக் கேள்விப்பட்டிருக்கேன். புகுந்து புறப்படுகிறது இப்போ தான் கேள்விப்படறேன்.

    I think you are just trying to capitalize on happenings.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என்னிடம் பதிலில்லை :)

      Delete
  7. இனிமே தான் பாடல் கேட்கணும்... பெரிய இசை ரசிகன் இல்லை என்பதால் ஒன்னு விளங்காது. ஆனால் இந்த பின்னூட்டம் உங்க எழுத்து அழகா மாறிடிச்சு என்பதை சொல்ல... எழுத்து உங்களுக்கு வசமாகிடிச்சு... இனி அடிக்கடி எழுதுனா போதும்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ரகு :) வெகு விரைவில் இம்பல்சிவாக எழுதப்பட்ட பதிவு இது :)

      Delete
  8. Excellent honest writing (though i disgree on many points.)
    Wanted to make one basic point

    You are saying ur opinion thats fine. But you are also generalising others opinions saying raja fans like the tunes only. That need not be the case. And your assumption that Raaja is back is based on that premise .

    அடிப்படையில் ராஜாவிடம் ரசிகன் ரசித்தது அவர் ட்யூன்களை. அதிலுள்ள உருக்கத்தை. ஆர்க்கெஸ்ட்ரா, இண்டெர்ல்யூடில் 100 வயலின் போன்ற ஜரிகைகள் எல்லாம் பிறகு

    May be the general audience does that but not necessarily everbody. That is where Raja is an entirely different ball game. When everybody does a song for the melody line alone, there are number of songs that Raja has composed not for the melody line (tune) but so many other concepts. Infact his arranger prabahar has told that many times he does not write the melody line first.
    He is not the normal tune and surrounding orchestra composer.Ofcourse he does that. But he also does so many other things which is not necessarily tune centric.
    That is why irrespective of the tune lots of Raja fans feel that he is always there. I can cite number of songs in the 2000 -2013 era where Raaja has tried so many such things. Afterall any work does not fall from sky. This work in Megha is an output of lots of previous works that Raja has done.

    Ofcourse that is entirely my opinion and you are entitled yours.
    But I am sure a person of your taste would appreciate Raaja more if you give more time and understanding.

    Thanks for the great writeup.

    ReplyDelete
    Replies
    1. Thx for ur honest feedback. Do I know u in twitter?

      Delete
  9. ராஜாவின் இசை என்பது ஒரு குழந்தையை அழகுபடுத்துவது போல!எவ்வளவு செய்தாலும் எதோ ஒன்று விடுபட்டது போலவே இருக்கும்!சிலர் திடீரென்று அந்தப் பாட்டு கேட்டிருக்கீங்களா என்பார்!உடனே அதைத் தேடிக் கேட்போம்!ச்சே இத்தனை நாள் இது தெரியாமல் போய் விட்டதே என வருந்துவோம்!போலவே மேகாவும் இருக்கும் என உறுதி செய்கின்றன உங்களின் இப் பதிவு!...

    ReplyDelete
    Replies
    1. //சிலர் திடீரென்று அந்தப் பாட்டு கேட்டிருக்கீங்களா என்பார்!உடனே அதைத் தேடிக் கேட்போம்!ச்சே இத்தனை நாள் இது தெரியாமல் போய் விட்டதே என வருந்துவோம்!//

      Exactly ....!

      Delete
  10. முதன் முறை பாடலைக் கேட்ட உடனேயே ராஜா ராஜாதான் என்பதை எனக்கும் உணர்த்திவிட்டார்.அப்புறம் அந்த குரல்களின் இணைப்பும் இந்த ( யுவன் - ரம்யா NSK) வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது என் எண்ணம். இளையராஜாவின் ரசிகன் என்பதனால் என் வலைப்பூவிற்கும் வந்து பார்க்கலாமே.

    ReplyDelete
  11. ராஜாவின் இசை பற்றி சொன்னதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு தான். ராஜா பாடிய பாடல்களில் தான் என் முன்னிரிமையும் இருக்கும்.

    நிற்க,உங்கள் பதிவை இணைப்பாக ட்விட்டரில் கொடுத்து ஆர் .டி.பர்மனுடன் ராஜாவை பொருத்தி பார்ப்பது நியாயமற்றது என்று ஒரு ட்வீட்டும் ,அதற்கு முன்னர் "ஒவ்வொரு முறையும் ராஜா பாட்டு வரும்போது எவனாவது கிளம்பறான் -ராஜா திரும்ப வந்திட்டாருன்னு-நல்லா இருங்கடே" என்று நகைச்சுவையாக ஒரு ட்வீட்டும் போட்டேன். அது உங்களை வாசிப்பவர்களின் மூலமும் உங்களை தொடர்பவர்களின் மூலமும் உங்களிடம் வந்தடைந்து அது பற்றி நிறைய வேடிக்கையாக விவாதித்ததாக நானும் அறிந்தேன், ஆனால் எதையும் தேடி படிக்கவில்லை, நம்புங்கள் உண்மை தான்.

    இந்த பதிவின் முக்கியப் பிரச்சினையாக நான் கருதுவது பஞ்சம் தாவிற்கும் ராஜாவுக்குமான இணைப்பை.அதில் ஒரு நியாய இழப்பு இருப்பதாக கருதுவதால் அது பற்றி கொஞ்சம் முடிந்தவரை விவாதிக்கலாம்.

    அடிப்படையாக இதை ஆர் டி பர்மனுக்கான தனிப் பதிவாகவும் ராஜாவுக்குமான தனிப்பதிவாகவும் இருந்திருந்தால் இரண்டையுமே ஏற்றுக் கொள்ளும் மன நிலைதான் எனக்கு. பஞ்சம்தா பீல்ட் அவுட் என்பதும் பத்து வருடங்களுக்கு பிறகும் எத்தனை படம் இசை அமைத்தார் என்பதும் என் அளவில் தெளிவில்லை. அவர் அந்த கால கட்டங்களில் இசை அமைத்திருந்தாலும் கூட, வெற்றிப் படங்களில் அவர் செய்திருந்த இசைக்கு எந்தக் குறையும் இருந்திருக்காது, ஆனால் இதை தெளிவாக ஆராயும் மன நிலையும்,அவரது அந்திமக் கால படங்களின் பாடல்களையும் கேட்காமல் தான் இப்போது எழுதுகிறேன்.


    சமகாலத்தில் இரு வேறு சினிமா உலகத்தில் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்த இரு பெரும் மேதைகள்( ராஜாவுடன் நிகராக இல்லாமல் என்னிடம் தனியாக பஞ்சம் தாவிற்கென்று இடமுண்டு) என்ற இடத்துடன் இருவருக்குமான ஒற்றுமைகள் காலாவதியாகி விடுகிறது. அவரது வணிக வெற்றிக்குப் பின் அவரிடம் திரைப்படங்கள் இல்லாததும் பிறகு வெற்றி பெற்ற 1942 லவ் ஸ்டோரி ரிலீசுக்கு முன்னர் அவர் இறந்ததும் வருந்தத்தக்க விஷயம்.


    ராஜாவுக்கு பத்து அல்லது கொஞ்சம் கூடுதலான வருடங்களில் அவரது வணிக வெற்றி என்பதுடன் அவரது இசை உலகம் காலாவதியாகி விடவில்லை. எண்பதுகளில் வளர்ந்த தலை முறை பிறகு வளர்ந்து ராஜா மீது மிகுந்த அபிமானம் கொண்டவர்கள் அவருடன் சேர்ந்து பணியாற்றிய படங்கள் எண்ணிக்கை மட்டுமே கூட, அவரது வீழ்ச்சி என்று சொல்லப்பட்ட தொண்ணூறுகளின் பின் பகுதியில் இருந்து இசை அமைத்த எந்த முன்னணி இசை அமைப்பாளரின் படங்களின் எண்ணிக்கையை விடவும் மிக அதிகமாக இருக்கும். படங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒருவரின் இருப்பை நியாயப்படுத்த முடியாது என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் வணிக வெற்றி அடைந்ததா என்ற கேள்வி எல்லாம் தேவை இல்லாதது. வணிக ரீதியில் மிகப்பெரிய இடத்தில இருந்த காலம் தொட்டே ராஜா எல்லா விதமான பட்ஜெட் படங்களுக்கும் இசை அமைத்தே வந்திருக்கிறார். அது இன்னும் தொடர்கிறது. தொண்ணூறுகளுக்குப் பின் அவர் பணியாற்றிய திரைப்படங்கள் பெரும் தோல்விகளை இன்று வரை சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறது.ஆனால் அவரது இசை அமைப்பில் பல பரிமாணங்களையும் புதிய வகை இசை அமைப்புகளையும் பரிசோதித்துக் கொண்டே வந்திருக்கிறார் எல்லா மொழிகளிலும்.

    ReplyDelete
  12. மேகாவில் திரும்ப வந்திருக்கிறார் என்று சொல்வதன் மூலம் தொண்ணூறுகளுக்குப் பின்னரான இருபது வருட உழைப்பு தவறாக மதிப்பிடப் பட்டிருக்கிறது.திரை இசையின் உச்சமான ஹேராம் (என் அனுமானத்தில்) வந்திருக்கிறது -இன்னும் பல படங்களை பட்டியலிட முடிந்தாலும் எனக்கு அதில் விருப்பமில்லை. மலையாளத்தில் எண்ணற்ற திரைப்படங்கள் செய்திருக்கிறார். பழசிராஜாவின் எந்தப்பாடலும் அவரது எண்பதுகளின் பாடலுக்கு குறைவும் இல்லை அதிகமும் இல்லை. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் இன்னும் வித்யாசமான இசையை அவர்களுடைய மண்ணுக்கேற்ற ஆனால் மிகவும் நவீன இசையாக உருவெடுக்கிறது . தமிழ்நாட்டு இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர்கள் கூட இன்னும் ராஜாவுடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் "டொக்காயிட்டாரு" போன்ற ஆகக் கேவலமான வார்த்தைகளை மேதைகளின் மேல் வீசிவிட தமிழர்களுக்கு மட்டும் தான் தைரியமிருக்கிறது என்று பெருமை பட்டுக் கொள்ள வேண்டும் போல.

    கடந்த சில மாதங்களில் நீதானே என் பொன் வசந்தம், நிலாச்சோறு, நாடி துடிக்குதடி மற்றும் மேகா வந்திருக்கிறது, இந்த நான்கிலும் மேகாவும் NEPV யும் ஒரே வண்ணத்தில் வரையப்பட்ட இரு வேறு இசை ஓவியங்கள். நிலாச்சோறுக்கு தேவையான எளிமையான இசை வடிவத்திலும் நாடி துடிக்குதடிக்கு முற்றிலும் வேறு விதத்திலும் இசை அமைக்க, முப்பத்தைந்து வருடம் இசை செய்த பிறகும் கூட முடிகிறது. படத்தின் வடிவத்தை இசை ரீதியாக கட்டமைக்கதானே எல்லா இளம் இசை அமைப்பாளர்களும் முயற்சிக்கிறார்கள்? அது ராஜாவிடமிருந்து எந்த வித தயக்கமும் இல்லாமல் ஆதார முத்திரையுடன் இன்னும் இன்னும் வேறு வடிவத்தில் வந்து கொண்டிருக்கிறதே, அவர் எங்கேயாவது காணமல் போய் இருந்தால் தானே தேடிக் கண்டு பிடிக்க?

    தாண்டவக்கோனே என்றே திரைப்படமும் மேற்சொன்னது போன்ற சிறிய பட்ஜெட் தோல்விப் படம் தான், காட்டு வழி துன்பம் மற்றும் நீரால் உடல் கழுவி பாட்டும் சொல்ல வருவதென்ன? அது எப்படி இசையால் சாத்தியம் என்றால், இசை வருபனுக்குதானே சாத்தியமாக முடியும்? ட்விட்டரில் ஒரு கூட்டம் வால்மீகியை பயங்கர நகைச்சுவை போன்று எதையோ செய்து கொண்டிருந்தார்கள், அதில் ராஜா பாடிய அச்சடிச்ச காசை பாட்டை நானும் முதல் முறை கேட்டு அந்தப் பாடலின் பக்கமே போகாமல் கொஞ்ச நாள் இருந்தேன்.கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஒரு அமைதியான மாலையில் கேட்டால் மெல்ல மெல்ல விடுபடும் புதிரைப் போல, ராஜா ஒளித்து வைத்திருக்கும் மாயங்கள் புரிபட ஆரம்பிக்கிறது.ஆனால் இது போன்ற சில பாடல்களில் அதை கண்டடைய கொஞ்சம் முறை ராஜாவின் சூத்திரத்திற்கு நம்மைக் கொடுக்க வேண்டும். அது கட்டாயம் கூட இல்லை, ராஜாவின் ரசிகனாக இருப்பதால் எனக்கு அது தேவையாகவும் இருக்கிறது. பிறகு தான் புரிகிறது, ராஜா இதனை வருஷம் செய்த பாடல்களில் எது மாதிரியாகவும் இல்லாத புது மாதிரியான பாடல் வகை. நீங்களே சொன்னது போல் உங்களுக்கு கள்வனே பாடலின் இசை குறும்புகள் பிடிக்க கொஞ்ச நாள் ஆகலாம். ஆனால் அது வரைக்கும் நீங்கள் NEPV க்கு கொடுத்த இரண்டு மதிப்பெண்கள் என்பது போன்ற அசம்பாவிதங்கள் செய்யாமல் இருத்தல் நலம்.

    ராஜா என்ற ஆர்.டி.பர்மன் என்று இல்லாத ஒன்றை திறமையான எழுத்தின் மூலம் நீங்கள் கண்டடைய முயல்கிறீர்கள். ராஜா என்ற ராஜா மட்டுமே என்பது தான் என்னுடைய விவாத உள்ளடக்கம்.

    Sridhar

    @maya_twit

    ReplyDelete
  13. //ஆர்.டி.பர்மனின் எனக்கு பிடித்த ஒரு பாடல் இது.//

    நடராஜ் ஜி நீங்க இணைப்பு கொடுத்துள்ள இந்தப் பாடல் தமிழிலும் வந்திருக்கின்றதோ ...!?

    //2000த்திற்கு பிறகான அவர் பாடல்களை //

    பிதாமகன் ....!

    //ஜன்னல் ஓர விரைவுப்பேருந்தின் காற்றில் எங்கோ, ஏதோ ஞாபகங்களில் நெகிழ்ந்துருகி, தன்னை இழக்கும் தருணம்.//

    ரெம்பவே ரசனையான உவமை ...!

    நானும் மேஹா கேட்டேன் ...! இதுவும் நீதானே போலவே கேட்க கேட்கத்தான் பிடிக்கும் போல ...! ஒன்று ரெண்டு பாடல்கள் நீதானே படத்தின் பாடல் கேட்பது போன்ற உணர்வு ... ஒருவேளை அதே பாடகர்களை பயன்படுத்தியிருப்பதினாலோ ...?

    ரசனையான பார்வை , ரசனையான பின்னூட்டங்கள் ...!

    ReplyDelete
  14. I have heard the songs mugilo and jeevane nearly 1000 since it came out in internet. excellent composition and still enjoying it. God bless Rajaa sir for long life.

    ReplyDelete
  15. 1942 Love Story... Rim Jim Rim Jim

    ReplyDelete

பிடித்தால் சொல்லுங்கள்..பிடிக்காட்டியும் சொல்லுங்கள்..;)